Sunday 30 October 2016

ஜன்னலுக்கு வெளியே!!

அது ஒரு முதியோர் இல்லம். இரண்டு வயதானவர்கள் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். ஒருவருக்கு முதுகுத்தண்டில் கோளாறு. அதனால் மல்லாந்து எப்போதும் படுத்திருப்பார். இவரைப்போல இன்னொருவரும் நடமாட முடியாதவர். சர்க்கரை வியாதிக்காரர். அவருடைய கட்டில் ஜன்னலோரமாக இருந்ததால் எப்போதும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி அமர்ந்திருப்பார்.

வருடக்கணக்காக அங்கேயிருந்ததால் இருவரும் நல்ல சினேகிதர்களாக மாறியிருந்தார்கள். இருவரையுமே பார்ப்பதற்கு யாரும் வருவதில்லை. அதனால் எப்போதுமே தங்களுக்குள் ஏதாவது பேசியபடியே நாட்களைக் கழித்தார்கள்.

ஒரு நாள் படுத்திருந்தவர் ஜன்னல் பெரியவரிடம் அங்கே தெருவில் என்ன நடக்கிறது? எனக்கு சொல்லுங்கள்' என்று கேட்க, அவருடைய நண்பர் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தார்.
" அங்கே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருக்கிறது. நிறைய குழந்தைகள் விளையாடிக்கொன்டிருக்கிறார்கள். பார்க்கவே அழகாய் இருக்கிறது"

படித்திருந்தவர் சொன்னார்

 " அங்கே என்ன நடந்தாலும் அவ்வப்போது எனக்குச் சொல்லுங்கள். அதையெல்லாம் கேட்பதால் மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது"

அடுத்த நாள் ஜன்னல்காரர் ' தூரத்தில் ஒரு கோவில் தெரிகிறது. ஏதோ உற்சவம் போல இருக்கிறது வாண வேடிக்கைகள் எல்லாம் அமர்க்களப்படுகின்றன" என்றார்.

"இது பங்குனி மாதம் இல்லையா? பங்குனி, சித்திரையெல்லாம் உற்சவங்கள் நிறைய இருக்கும். குணமானதும் நான் கோவிலுக்குப்போகப்போகிறேன்" என்றார் படுக்கைக்காரர் உற்சாகத்துடன்.

இன்னொரு நாள் அந்த வழியாகச் சென்ற கல்யாண ஊர்வலத்தைப்பற்றி, மாப்பிள்ளையின் அழகைப்பற்றி ரசித்துக் கூறினார். படுக்கைக்காரருக்கு கல்யாணத்தையே நேரில் பார்த்தது போல இருந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு சிறு குழந்தை தன் அம்மாவிடம் அடம் பிடித்து சாலையில் போகும் ஐஸ் வண்டிக்காரனிடம் குச்சி ஐஸ் வாங்கிய கதையை சுவைபடச் சொன்னார். படுக்கைக்காரருக்கு அந்தக் காட்சியை தானே நேரில் கண்டது போல இருந்தது.சிரித்தவாறே " பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடக்கும் சண்டையில் எப்போதும் குழந்தைகள் தான் ஜெயிக்கும்" என்று குதூகலித்தார்.

மறுபடியும் ஒரு நாள் ஜன்னலுக்கு வெளியே பூத்திருந்த பூக்களின் அழகை ரசித்து பேசிக்கொண்டிருந்தவர் மயங்கி விழ, உடனேயே அவரை ஸ்ட்ரெச்சரில் போட்டு வெளியே கொன்டு போனார்கள். அன்றும் அடுத்த நாளும் அவர் வராமலேயே போக, படுத்திருந்தவர் அவரைப்பற்றி விசாரித்தார். ஜன்னல்காரர் இறந்து விட்டதாக அவர்கள் சொன்னதும் அவர் அப்படியே துக்கத்தில் துயரத்தில் மூழ்கிப்போனார். தினமும் நண்பரை நினைத்து நினைத்து மருகினார்.

ஒரு நாள் நர்ஸிடம் சொல்லி தன் படுக்கையை ஜன்னலோரமாக மாற்றச் சொன்னார். மிகவும் பிரயாசைப்பட்டு கையை ஊன்றி பாதி நிமிர்ந்து ஜன்னலுக்கு வெளியே நோக்கினார்.

அங்கே தெரிந்ததோ ஒரு உயரமான மதில் சுவர் தான்!

திகைத்துப்போய் நர்ஸிடம் கேட்டார்.

" இங்கே ஒரு மதில் சுவரல்லவா இருக்கிறது! தினமும் என்னென்னவோ தெரிவதாய் அவர் ரசித்து ரசித்து சொன்னாரே?"

" உங்களுக்கு சந்தோஷம் தருவதற்காக அவர் கற்பனை செய்து சொல்லியிருப்பார்!"

நர்ஸ் சொன்னதும் அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். நர்ஸ் மேலும் சொன்னாள்.

" உங்களுக்காவது இந்த சுவர் தெரிகிறது. அவருக்கு அதுவும் தெரியாது. ஏனென்றால் அவர் பார்வையை இழந்தவர் அய்யா!"


பெரியவர் அப்படியே பிரமித்துப்போய் அமர்ந்திருந்தார். தனக்குள் அத்தனை சோகங்கள் இருந்தும் அடுத்தவரை மகிழ்விக்க வேண்டுமென்று வாழ்ந்த அவர் எத்தனை உயர்ந்த மனிதர்!

உங்களின் சொந்த நிலைமை எப்படியிருந்தாலும் அடுத்தவருக்கு சந்தோஷம் ஏற்படும்படி நடந்து கொள்ளுங்கள். ஒருவரிம் முகத்தில் புன்னகை பூக்கும்படி செய்தீர்களென்றால் அதையும் விட உயர்ந்த விஷயம் வேறெதுமில்லை!!

பின்குறிப்பு:

என்னை பாதித்த‌ ஒரு சிறுகதையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில பதிவுகளுக்கு முன் நான் விமர்சித்து எழுதிய ரா.கி.ரங்கராஜன் அவர்களின் நூலான ' நாலு மூலை'யில் படித்த சிறுகதை இது!

Tuesday 18 October 2016

முத்துக்குவியல்- 43!!

தகவல் முத்து:

இன்றைய காலத்தில் கலப்படங்கள் எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதற்கு சில உதாரணக்களும் அவற்றுக்கான தீர்வுகளும்:

தரமான கடுகை கைகளில் வைத்து அழுத்திப்பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். அர்ஜிமோன் விதகள் கலக்கப்பட்டிருந்தால் கைகளில் வைத்து கசக்கிப்பார்க்கும்போது அதன் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.

மிளகில் பப்பாளி விதைகள் கலக்கப்படுகின்றன. மிளகை மெருகேற்றுவதற்கு மினரல் ஆயில் எனப்ப‌டும் பெட்ரோலியப்பொருள் கலக்கப்படுகிறது. முகர்ந்து பார்த்தால் மிளகு பெட்ரோல் வாடை அடிக்கக்கூடாது. 50 மில்லி தண்ணீரில் சில மிளகுகளைப்போட்டால் அது தண்ணீரில் மூழ்கினால் அவை நல்ல மிளகு. மிதந்தால் அது பப்பாளி விதை.

சீரகத்தில் குதிரை சாணமும் அடுப்புக்கரியும் கலக்கப்படுகின்றன. தனியாவிதைகளில் சல்ஃபர் ஆக்ஸைடும் மரத்தூளும் கலக்கப்படுகின்றன. மஞ்சள் தூளில் மெட்டாலிக் யெல்லோ எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது. பால் அதிக நேரம் கெடாமலிருக்க அதில் காஸ்ட்க் சோடா, டிட்டர்ஜென்ட், யூரியா கலக்கப்படுகின்றன. மிளகாய்த்தூளில் புற்று நோயை உண்டாக்கும் சூடான் டை கலக்கப்படுகின்றன. 

தேங்காய் எண்ணெயை ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி வைத்தால் தடிமனான கெட்டியான படிமம் மேலே படர்ந்திருந்தால் அது நல்ல எண்ணெய். அப்ப‌டியில்லாமல் நீர்த்த நிலையில் அபப்டியே இருந்தால் அது மலிவான சில எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கும் தேங்காய் எண்ணெய்.
பஞ்சை தேனில் நனைத்து தீயில் காட்டினால் அது எரிந்தால் அது நல்ல தேன். எரியும்போது சடசடவென்று சப்தம் வந்தால் அது கலப்படத் தேன். தேனை தண்ணீரில் விட்டால் அது கரையாமல் அடிவரை சென்று தங்கினால் அது நல்ல தேன். கரைந்தால் அது வெல்லப்பாகு.

அவசிய முத்து:

நான்கு பேர் நடுவே நன்றாக நடந்து கொண்டும் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று தள்ளாடினாலோ, கீழே விழுந்தாலோ, அதை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். அது ஒரு வேளை ஸ்ட்ரோக் ஆக இருக்கலாம். மூளைக்குச் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்போ அல்லது ஏதேனும் பிரச்சினைக‌ளோ இருக்கலாம்.


ஒரு சிறப்பு நரம்பு மருத்துவர் கூறுவது என்ன வென்றால், இந்த மாதிரி திடீர் தாக்குதல்களுக்குள்ளானவர்களை இனம் கண்டு உடனே மூன்று மணி நேரத்திற்குள் அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டால் அவரை அதிகம் பாதிப்புகள் இல்லாமல் பிழைக்க வைத்து விடலாம் என்பதே.
சம்பந்தப்பட்டவரை முதலில் சிரிக்கச் சொல்ல வேண்டும். பின் ஒரு முழு வாக்கியத்தை சொல்லச் சொல்ல வேண்டும். அதன் பின் இரு கைகளையும் தூக்கச் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்டவர் இதில் ஏதேனும் ஒன்றை செய்ய முடியாமல் கஷ்டப்ப்ட்டால் சற்றும் தாமதிக்காது அவரை உடனே மருத்துவமனையில் எமெர்ஜென்ஸியில் சேர்க்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்டவர்ன் நாக்கை வெளியே நீட்டச்சொல்லி பார்க்கவும். அவர்களின் நாக்கு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களால் சரியாக நாக்கை நீட்ட முடியாது.

பயன் தரும் முத்து:

இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது இறங்க வேண்டிய இடத்தைத் தவற விட்டு விடுவோமோ என்ற கவலை இருக்கும் பலருக்கு. அதற்கு ஒரு நிவாரணம் இருக்கிறது.



உங்கள் மொபைலிலிருந்து 139 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். அதில் கூறும் வழிமுறைகளின்படி பயண டிக்கெட்டில் இருக்கும் பி.என்.ஆர் எண்ணை பதிவு செய்யுங்கள். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வரும். இதனால் நீங்கள் இறங்க வேண்டிய இடம் குறித்து கவலை இல்லாமல் பயணம் செய்யலாம்.

ரசித்த முத்து:

சமீபத்தில் 'விவேக சிந்தாமணி'யைப்படித்துக்கொண்டிருந்தேன். அதில் ரசித்த ஒரு பழம் பாடல் இதோ!

குக்கலைப்பிடித்து நாவிக்
கூண்டினில் அடைத்து வைத்து
மிக்க‌தோர் மஞ்சள் பூசி
மிகு மணம் செய்தாலுந்தான்
அக்குலம் வேற தாமோ?
அதனிடம் புனுகுண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லால்
குலந்தன்னில் பெரியது ஆமோ?

[குக்கல்=நாய், நாவி=புனுகுப்பூனை, புனுகுநறுமணப்பொருள்

 

Saturday 8 October 2016

நாலு மூலை!!

இது என்னுடைய முன்னூறாவது பதிவு.

எனக்குத் தொடர்ந்து பின்னூட்டம் கொடுத்து அதன் மூலம் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துக்கொன்டிருக்கும் பதிவுலக சகோதர உள்ள‌ங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!!!

நாலு மூலை:

சமீபத்தில் படிக்க ஒரு புத்தகம் கிடைத்தது. இது சிறுகதை தொகுப்போ அல்லது பெரிய நாவலோ இல்லை. அன்றாடம் நம்மைக்கடந்து போகும் நிகழ்வுகளின் தொகுப்பு இது! எழுதியவர் காலஞ்சென்ற எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள்.




2012ல் தன் 85ஆவது வயதில் மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள், மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, குமுதம் வார இதழில் நெடுங்காலம் ஆசிரியராக வேலை பார்த்தவர். 1500 சிறுகதைகள், 50 புதினங்ளுக்கு மேலாக எழுதியவர். மோகினி, சூர்யா, கிருஷ்ணகுமார் என்று இவர் பல்வேறு புனைப்பெயர்களிலும் எழுதினார். 2005ல் இவர் தன் பல்வேறு கருத்துக்களை விமர்சனக்களாகவும் அபிப்பிராயங்களாகவும் சென்னை பத்திரிகைகளில் எழுதினார். அவற்றின் தொகுப்பு 'நாலு மூலை' என்ற நூலாக 2005ல் வெளி வந்திருக்கிறது சமீபத்தில்தான் அரசு நூலகத்தில் அதை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க சுவாரஸ்யம் மிகுந்ததில் மற்ற புத்தகங்களை ஓரம் க‌ட்டி வைத்து விட்டேன்.

ஆரம்பத்திலேயே எழுதுவதற்கான கருத்துக்கள் கிடைக்கும் விதம் பற்றி தன் முன்னுரையில் சுவைபடச் சொல்கிறார். ஒரு முறை இளையராஜாவிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னாராம், " கற்றுக் கொண்டதை எல்லாம் கொட்டி விட்டேன். ஐயோ, இனிமேல் என்ன செய்யப்போகிறோம் என்று ஆர்மோனியம் எதிரே திகைத்துப்போய் உட்கார்ந்த போது தானாகவே பாட்டு வருகிறது. பறவை ஒருத்தர் சொல்லியா பறக்கிறது? It happens! Music happens!!"




அது போல எழுத உட்கார்ந்ததும் பல்வேறு கருத்துக்கள் எப்படியாவது கிடைத்து விடுகின்றன என்கிறார் இவர்!

ஒரு காஷ்மீர நாட்டுப்புற கதை பற்றி எழுதியிருந்தார். ஒரு இளவரசன் ஒரு ஏழைப்பெண் மீது காதல் கொண்டு அவள் தந்தையிடம் சென்று பெண் கேட்கிறான். அவர் அவனுடைய தொழில் என்ன என்று கேட்கிறார். அவன் எனக்கு தொழில் எதுவும் தெரியாது. பத்து தலைமுறைக்கான சொத்து இருக்கிறது என்றானாம். அதற்கு அந்தப்பெண்ணின் தந்தை முதலில் ஒரு தொழிலைக்கற்று வா. அப்புறம் பெண் தருவதைப்பற்றி யோசிக்கிறேன் என்றானாம். இளவரசன் விதவிதமான பூ வேலைப்பாடுகள் அடங்கிய காஷ்மீர கம்பளம் நெய்யக் கற்று அதில் தேர்ச்சி அடைந்தான். தான் விரும்பிய பெண்னையும் மணந்து கொண்டான். சில காலம் கழித்து இளவரசனும் அவன் நண்பர்களும் காட்டிற்கு வேட்டையாடச் சென்ற போது கொள்ளையர்களால் சிறை வைக்கப்பட்டார்கள். சில நாட்கள் கழித்து, எதற்கு இவர்களுக்கு வெட்டியாக சோறு போட வேண்டும் என்று நினைத்து, இளவரசனிடம் உனக்கு ஏதாவது தொழில் தெரியுமா என்று கேட்டார்களாம். தனக்கு கம்பளம் நெய்யத்தெரியும் என்று இளவரசன் சொன்னதும் அதற்கான பொருள்களை வாங்கிக்கொடுக்க இளவரசன் மிக அழகான கம்பளம் நெய்தானாம். இதை ஊருக்குள் கொண்டு சென்றால் நிறைய பணம் கிடைக்குமா என்று அவர்கள் கேட்டதும் இளவரசன் ஊருக்குள் கொஞ்சமாகத்தான் பணம் கொடுப்பார்கள். இதையே அரண்மனையில் சென்று விற்றால் நிறைய பண்ம கிடைக்கும் என்று சொன்னானாம். அவர்களும் அது போலச் செய்ததும் நிறைய பணம் கிடைத்ததாம். மறு நாள் அரசனின் படை வீரர்கள் கொள்ளையர் இருந்த இடத்தை சூழ்ந்து அவர்களைக் கொன்று இளவரசனைக் காப்பாற்றினார்களாம். காரணம் அந்தக் கம்பளத்தில் காஷ்மீர மொழியில் தான் இருக்குமிடத்தையும் தனக்கு நேர்ந்துள்ள ஆபத்தைப்பற்றியும் இளவரசன் எழுதியிருந்தது தான் காரணம்.
இந்தச் சிறுகதையை எழுதி விட்டு ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு தொழிலைக்கற்க வேண்டுமென்ற முனைப்பு வருகிறதல்லவா என்று கேட்டிருந்தார்!

ஒரு ஆன்மீக தலைவரின் சீடர் கூறிய அருமையான கருத்தை இடையே சொல்லியிருக்கிறார்.
"ஒரு ஊருக்கு காரில் போய்க்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு எருமை குறுக்கிட்டது. மாட்டுக்காரன் தன் கம்பினால் அதை அடித்து விரட்டினான். அது சாலைக்கு மறுபக்கம் போய் விட்டது. அப்போதும் மாட்டுக்காரன் அதை அடிப்பதை நிறுத்தவில்லை. தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்ததைப்பார்த்தபோது நான் யோசித்தேன். அது தான் சாலையிலிருந்து ஒதுங்கிப்போய் விட்டதே? அப்புறமும் ஏன் அதை அடிக்க வேண்டும்? ஏனென்றால் அது ஒரு சமயம் அடம் பிடித்துக்கொண்டு அவன் சொன்னதைக்கேட்காத கோபம் அவன் மன‌சிலிருந்து அகலவில்லை. பழசை நினைத்து அடிக்கிறான். இப்படித்தான் வாழ்க்கையில் நாம் நடந்து கொள்கிறோம். பழசை மறக்காமல் நினைத்து கோபப்பட்டு நம் நிம்மதியைக் கெடுத்துக்கொள்கிறோம்!"

பேரன் பேத்திகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் இடையில் கூறுகிறார்.
"பேரன், பேத்திக்களிடம் முடியாது, கிடையாது என்று சொல்வது மிகவும் கடினமான காரியம்தான். ஆனாலும் அவர்கள் கேட்கும் எல்லாவற்றுக்கும் சரியென்று சொல்வதும் ஆமோதிப்பதும் வீட்டில் பல பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகின்றன என்பதையும் தாத்தாக்களும் பாட்டிகளும் புரிந்து கொள்ள வேண்டும். எதையாவது உங்கள் பேரக்குழந்தை கேட்டு அதன் பெற்றோர் மறுத்திருந்தால் அது உங்களிடம் தான் அடுத்ததாய் சலுகைக்கு வரும். நீங்கள் அது கேட்டதை கொடுத்தாலோ அல்லது வாங்கித்தந்தாலோ, அதற்கு தன் அம்மா, அப்பாவை மதிக்கத்தேவையில்லை என்ற எண்னம் வந்து விடும். எதையும் உங்கள் மூலம் சாதித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து விடும். அதனால் குழந்தையிடம் பக்குவமாகச் சொல்லி அப்பா, அம்மா சொல் மதிக்க வேண்டும் என்று நீங்கள் பழக்க வேண்டும்"

நிறைய பக்கங்களில் நகைச்சுவை மிளிர்கிறது!

இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்த ஒரு அமெரிக்கர் ஒரு சுவாமிஜியின் நல்லியல்புகளை தொடர்ந்து கவனித்து வந்தாராம். ஒரு நாள் அவரிடம் சென்று ' சுவாமிஜி! மந்திரங்களுக்கு நல்ல மகிமை உன்டு என்றும் அவற்றைத் தொடர்ந்து சொல்லி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அடிக்கடி சொல்லி வருகிறீர்கள். எனக்கும் ஒரு நல்ல மந்திரம் சொல்லிக்கொடுங்கள். அதனால் ஒரு நல்ல பலன் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்' என்றாராம். சுவாமிஜியும் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து ' உனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லு. ஆனால் எக்காரணம் முன்னிட்டும் இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லிக்கொடுக்கக்கூடாது' என்று சொல்லி சத்தியமும் வாங்கிக்கொண்டாராம். அதன் படியே அமெரிக்கரும் ஊருக்குத்திரும்பியது முதல் அந்த மந்திரத்தை சொல்லி வந்தாராம்.
அவரின் மனைவி ஒரு ராட்சஸி. கணவன் உயிரை தினமும் கொல்லாமல் கொன்று வருபவள். தன் கணவன் இந்தியாவிலிருந்து திரும்பியதிலிருந்து தினமும் தனக்குள்ளாகவே ஏதோ முனகிக்கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தாள், இரண்டாம் நாள் பார்த்தாள், அதன் பின் அவளால் பொறுத்துக்கொள்ல முடியவில்லை. கணவனிடம் கேட்டாள் அவன் தினமும் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று! அவனும் விஷயத்தைச் சொல்லி இது ஒரு மந்திரம், இதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன் என்று சொல்ல, பலத்த சண்டையாகி விட்டது அங்கே. மிரட்டலுக்கும் வற்புறுத்தலுக்கும் மசியாத கணவனிடம் 'இனி ஒரு நாள் கூட உன்னுடன் வாழ மாட்டேன் என்று சொல்லி விட்டு மூட்டை முடிச்சை கட்டிக்கொன்டு அவள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள். அவனுக்கு ஒரே சந்தோஷம்! ' மந்திரம் என்றால் இதுவல்லவோ மந்திரம்! கை மேல் பலன் கிடைத்து விட்டதே' என்று ஆனந்த கூத்தாடினான் அவன்!

இப்படி சுவாரஸ்யமான நிகழ்வுகளை இவரும் நூல் முழுவதும் சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே போகிறார்!வழக்கமான புதினங்களிலிருந்து வித்தியாசப்ப‌டுகின்ற‌ நூல் இது! படித்துப்பாருங்கள்!

கிடைக்குமிடம்:

கிழக்கு பதிப்பகம்,
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை 4