Sunday 20 September 2015

ஆசை அலைகள்!!!

சமீபத்தில் திருமதி.வித்யா சுப்ரமணியம் எழுதிய 'ஆசை அலைகள்' என்ற புதினத்தைப் ப‌டிக்க நேர்ந்தது. எப்போதுமே அவர் எழுதிய எந்தப் புத்தகத்தையுமே எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் முதல் பக்கம் முடிவதற்குள் கதையில் நாம் லயித்துப்போயிருப்போம். அப்புறம் ஜெட் வேகத்தில் கதையும் பக்கங்களும் பறக்கும். கதையில் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் மனித மனங்களை ஆழமாக அலசுவதும் உணர்வு அலைக‌ளில் நம்மையறியாமலேயே அமிழ வைத்து நம்மை நெகிழ்த்துவதும் தான் இவரது எழுத்தின் வீரியம்! எந்தக் கதையாக இருந்தாலும் அதில் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் மூலம் அன்பும் கருணையும் விருட்சமாக விரியும். வானமாக வியாபிக்கும். அடிநாதமாக இசைத்துக்கொண்டிருக்கும்.




இந்தக்கதையிலும் அவர் அதைத்தான் சொல்கிறார்.

கதைக்கரு என்று எடுத்துக்கொண்டால் சிறியது தான். படிப்பிலும் தன்னைச் சுற்றியிருக்கும் எந்த விஷயங்களிலும் எந்த வித அக்கறையில்லாமல் வாழ்கிறான் கதாநாயகன்.  அவன் நிதமும் எதிர்கொள்ளும் தந்தையின் நிந்தனைகள், தாயின் சலிப்பு, உறவுகளின் அலட்சியப்போக்கு தான் காரணம். அவனுக்குள் புதைந்திருக்கும் நெருப்பை, மலர்ந்திருக்கும் திறமைகளை தன் அன்பினால் வெளிக்கொணர்கிறார் அவனின் சிறிய த‌ந்தை. 'கல்லுக்குள் ஒரு அழகான தெய்வ ரூபம் ஒளிந்திருக்கிறது. வேண்டாத பாகங்களை மட்டும் நீ செதுக்கி எடுத்து விடு. தெய்வம் வெளிப்படும் ' என்று சொல்லிக்கொடுத்து அவனுக்குள் இருக்கும் ஒரு அழகிய மனிதனை வெளிக்கொணர்ந்தவர் அவர்.
' ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு படைப்பாளி உறங்கிக்கொன்டிருக்கின்றான். அவ்வப்போது அவனின் தூக்கம் கலைந்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ள‌ அவன் தவியாய்த் தவிக்கிறான். மனிதனின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் தேடலுமின்றி இந்தப்படைப்பாளியால் வெளிப்பட இயலாது. தனக்குள்ளே பிர‌யாணம் செய்பவனால் மட்டுமே தன் பரிமாணங்களைக் காண முடியும். உள்ளிருந்து தவிக்கும் படைப்பாளிகளைப் பிரசிவிக்க முடியும்.' என்று கீதோபதேசம் செய்தவர். அதன் பின் அவன் ஒரு அர்ச்சுனனாக தன் முழு பலத்துடன் எழுகிறான்!
வெறும் துரும்பு என்று தான் நினைத்திருந்த தன் மகனின் விஸ்வரூபம் கண்டு இறுதியில் குற்ற உணர்வில் தலை குனிகிறார் அவனின் தந்தை.

இடையிடையே வித்யாவின் வைர வரிகள் கதையை அழகு படுத்திக்கொண்டே போகின்றன. அவற்றில் சில....

' தொப்புள் கொடி கூட சுயநலம் அதிகமாகும்போது பாசக்கயிறாகத் தோன்றுமா? கருவுக்குள் இருக்கும்வரை அதன் மூலம் கிடைத்த ஆகாரம் மறந்து விடுமா? பூமியில் வந்து விழுந்தவுடன் இனி நீ தேவையில்லை என்று வெட்டுவது தொப்புள் கொடியைத்தானே? அந்த நிமிடமே மனிதனின் சுயநலம் ஆரம்பித்து விடுகிற‌தா?'

' சாப்பிடுவது மட்டும்தான் மனுஷச் செயல். ஜீரணிப்பது தெய்வத்தோட செயல். தொண்டைக்குக் கீழே ருசியும் கிடையாது. சாப்பிட்ட சாப்பாடு எப்படியெல்லாம் மாறப்போகிறதென்பதும் தெரியாது. வாழ்க்கையும் அப்படித்தான். ஏன், எதற்கு, எப்படியென்றெல்லாம் கேட்காமல் நம் கடமையை மட்டும் செஞ்சுக்கிட்டே இருக்கணும். '

' உடம்பைக்கொல்றவன்னுக்கு தூக்கில் போட சட்டத்தில் இடமிருக்கு. மனசைக்கொல்றவனுக்கு என்ன தண்டனை?'

' மனம் மிகச்சிறந்த பாஷை. மனசால் பேசுகிறவர்களுக்கு வார்த்தைகள் தேவையில்லை.'

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை....

' எல்லோரையும் நேசிப்பது ஒரு வரம். சுலபத்தில் கிடைக்கும் வரம். இந்த வரம் வெளியிலிருந்து யாரும் கொடுப்பதில்லை. நமக்குள்ளிருந்தே கிடைக்கும் வரம். சற்றே முயற்சித்தால் எல்லோருக்குமே கிடைக்கும் வரம். கண்னாடிகளை அகற்றி விட்டு நிறபேதமின்றி பார்க்கத்தெரிந்தால் போதும். உறவுகள் என்ற வட்டத்தை விட்டு வெளி வந்து ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று உறவை விஸ்தரித்துக்கொண்டே போகிறவனுக்கு இந்த வரம் சுலபமாகக் கிட்டும்.'

இறுதியில் வாழ்க்கையின் பேருண்மையை த‌ரிசிக்கும் வரிகள்..

' எப்படிப்பட்ட பக்தன் தனக்குப் பிரியமானவன் என்று பகவத் கீதையில் கடவுள் அழகாகச் சொல்லியிருக்கிறார். பொறாமையின்றி, எல்லா உயிர்களையும் சமமாக நேசித்துக்கொண்டு, இன்ப துன்பம் எல்லாவற்றையும் சமமாக ஏற்றுக்கொள்கிற ஸ்தித்ப்பிரக்ஞனாக, பலன் கருதாமல் கடமையாற்றுகிற‌வனாக எவன் இருக்கிறானோ அவனே எனக்குப்பிரியமானவன் என்று கடவுள் சொல்கிறார். மற்ற‌வர்களை உள்ள‌ன்போடு நேசிப்பது தான் தனக்குச் செய்யும் மிக உயர்ந்த பூஜை என்கிறார்.'

ஒரு அருமையான நாவலை ரசிக்கக் கொடுத்ததற்கு அன்பு நன்றி வித்யா!