Friday 17 July 2015

முத்துக்குவியல்-37!!!

தகவல் முத்து:

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் இணையத்தொடர்பு விட்டுப்போய் விட்டது. காடராக்ட் அறுவை சிகிச்சை வலது கண்ணில் நடந்து அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இப்போது தான் சிறிது நேரம் வலைத்தளப்பக்கம் வர முடிந்தது. இன்னும் சில நாட்கள் அதிக நேரம் உலவ முடியாது. அதன் பிறகு முன்போல வரலாம். நெருங்கிய சினேகிதியை சந்திக்க முடியாதது போன்ற உணர்வு. இன்று தான் அந்தக் குறை தீர்ந்தது.

குறிப்பு முத்து:



சில பெண்களுக்கு முன் நெற்றியில் வழுக்கை உண்டாகும். காரணம் புரியாது. அதற்காக‌ கேச வளர்ச்சிக்காக விதம் விதமான எண்ணெய்களை உபயோகித்தும் பலன் இருக்காது.   என் உறவினரும் திடீரென்று ஏற்பட்ட தன் முன்வழுக்கைக்கு காரணம் புரியாது கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.  யதேச்சையாக ஒரு இதழில் படித்த தகவல் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.அவருக்கு தினமும் உறங்கும்போது கேசத்தை க்ளிப்பால் முடிந்து உறங்குவது நெடுநாள் பழக்கமாக இருந்து வந்தது.தன்னுடைய நெடுநாள் பழக்கமே தன் முன் வழுக்கைக்கு காரணம் என்பது புரிந்ததும் உறங்கும்போது க்ளிப் கொண்டு கேசத்தை முடிந்து வந்ததை நிறுத்தி விட்டார். கொஞ்ச நாட்களில் அவரின் முன் வழுக்கை குறைந்து நாளடைவில் சரியானது!!

இசை முத்து:





சில மாதங்களுக்கு முன் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது, மோகன ராகம் பற்றி விரிவாக எழுதியிருந்தேன். அழகு நிறைந்த இடத்தில் இருப்பது மோகனம், மென்மையான உனர்வுகளை, அதுவும் அன்பை வெளிப்படுத்தும் ராகம் மோகனம் என்று எழுதியிருந்தேன். அன்பு, அழகு, மென்மை அனைத்தும் ஒருங்கே இணைந்திருக்கும் இந்த காட்சியில் மோகனம் அத்தனை அருமையாக இசைக்கப்படுகிறது. கேட்பது சுகமா அல்லது பார்த்து ரசிப்பது சுகமா என்று பிரமித்துப்போனேன் நான்! நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்கள்!!

ருசித்த முத்து:

சமீபத்தில் திருச்சி சென்றிருந்தோம். ஏற்கனவே ' சினேகிதி ' மாத இதழ் மண்பாண்ட சமையல் செய்து மெஸ் நடத்தும் ஒரு உணவகம் பற்றி எழுதியிருந்தது. அங்கு போய் மதியம் உணவருந்தலாம் என்று சென்றோம். 'செல்லம்மாள் மெஸ்' என்ற அந்த உணவகம் திருச்சி அரசு மருத்துமனை எதிரே ஒரு சந்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் எதிரே அமைந்திருக்கிறது. அரசு மருத்துவமனை அருகே எந்த ஆட்டோ ஓட்டுனரைக்கேட்டாலும் வழி சொல்லுகிறார்கள்.




நாங்கள் சென்றபோது கரை வேட்டிகள், குடும்பங்கள், குழந்தைகள் என்று நல்ல கூட்டம்.
சுத்தமான இலை போட்டு வெட்டிவேர் போட்டு ஊறவைத்த‌ நீர் வைக்கிறார்கள். சிறிது நேரத்தில் மண் குடுவையில் புழுங்கலரிசி சாதம் வருகிறது. தொடர்ந்து சிறு சிறு மண் கிண்ண‌ங்களில் சாம்பார், வத்தல் குழம்பு, வாழைப்பூ உருண்டைக்குழம்பு, பருப்பு உருண்டைக்குழம்பு, ரசம், கீரையில் பலவித கறி வகைகள், கூட்டு, மண் சட்டி தயிர், வெண்ணை நீக்கிய மோர், என்று ஏப்ரன் அணிந்த பெண்கள் எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு கிண்ண‌மும் 10 ரூபாய். உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள‌லாம். அன்றைய ஸ்பெஷல் உணவு வகைகளை போர்டில் எழுதி வைத்திருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றும் 15 ரூபாய். எது வேண்டுமோ அதைக்கேட்டுப் பெறலாம். வித்தியாசமாகவும் புதுவிதமாகவும் இருந்தது இந்த ஏற்பாடு.




மூன்று வருடங்களாக இந்த உணவகம் நடைபெற்று வருகிறது. சாப்பாட்டின் சுவை பரவாயில்லை. இன்னும் மெருகேற வேண்டும். விதிமுறைகள் புதிதாக வருபவர்களுக்குப்புரியவில்லை. பரிமாறுபவர்களும் விளக்கம் சொல்லவில்லை. சாப்பாட்டில் இவை எல்லாமே அடக்கம் போலிருக்கிறது என்று நினைத்து நாங்கள் எங்களுக்குப்பிடித்ததை எடுத்துக்கொண்டோம். அப்புறம் தான் தெரிந்தது ஒவ்வொரு கிண்ண‌மும் 10 ரூபாய் என்பது! இந்தக்குறையை நீக்கச்சொல்லி உரிமையாளரிடம் சொல்லி வந்தேன்.

மேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரை என்பதால் மின் விசிறிகளையும் மீறி உள்ளே அனத்தியது. மற்ற‌படி ஒரு வித்தியாசமான சமையல் வித்தியாசமான அனுபவம். நீங்களும் ஒரு முறை சென்று ருசித்துப்பார்க்கலாம்!

விலாசம்:
செல்லம்மாள் சமையல்
ஆபீஸர்ஸ் காலனி
புத்தூர்
திருச்சி
தொலைபேசி:  9865356896
 

Saturday 4 July 2015

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.......!!

யதேச்சையாக என் பழைய பொக்கிஷங்களைக் கிளறிக்கொண்டிருந்த போது அந்த ஆட்டோகிராஃப் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முன் அதில் சில முக்கியமான, புகழ் பெற்ற முகங்களை வரைந்து கையெழுத்து வாங்கியிருந்தேன். அவற்றில் சில உங்களீன் பார்வைக்கு!


1983ல் இந்தியா கிரிக்கெட்டில் முதல் உலகக் கோப்பையை வென்று பயங்கர புகழ் பெற்றிருந்த சமயம். அதே சூட்டில் ஷார்ஜா வந்து சில முக்கிய நாடுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது சுனில் கவாஸ்கரை வரைந்து பின் அவரை நேரில் சந்தித்து வரைந்ததைக் காண்பித்தேன். ' காதோர நரையைக்கூட விடாமல் அப்படியே என்னை வரைந்திருக்கிறீர்கள்!' என்று சொல்லி பாராட்டி கையொப்பமிட்டுக்கொடுத்தார். அது இந்த கருப்பு வெள்ளை வண்ணங்க‌ளால் குழைத்த ஓவிய‌ம்.


அடுத்தது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஓவியம். அதிரடி விளையாட்டால் புகழ் பெற்றிருந்த இவர், கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் ஹெல்மெட் போடாமல் விளையாடியதால் ஒரு புகழ்பெற்ற பெளலரின் பால் அவரின் முகவாயைக்கிழித்திருந்ததால் அங்கே சில தையல்கள் போடவேண்டியிருந்ததாக சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார். இது அவரின் பென்சில் ஓவியம்.


கவிஞர் வைரமுத்து அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த காலம். ஷார்ஜாவில் ஒரு உணவகத்தைத் திறந்து வைக்கவும் வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் 1989ல் வந்திருந்தார். அவரை கருப்பு வெள்ளை வண்ண‌க்கலவையில் வரைந்து அவரிடம் காண்பித்தேன். 'ஏதாவது ஒரு தலைப்பைச் சொல்லுங்கள். அதைப்பற்றி எழுதி கையெழுத்திடுகிறேன்' என்றார். நான் 'அன்பு' என்றேன். அவர் அன்பைப்பற்றி மிக அருமையாக எழுதி கையொப்பமிட்டார். அந்த கவிதை:
அன்பு
உயிரின் உயிர்!
அன்பு
வாழ்வின் அர்த்தம்!
அன்பு
உலகின் சுவாசம்!
அன்பு மட்டும் இல்லையென்றால்
மனிதனை இலக்கணம் அஃறிணையில் சேர்த்திருக்கும்!
அன்பு
வாழ்வின் பரிசு!