Tuesday 23 June 2015

சர்க்கரை நோய் -பாகம்-3!!!!

10 வருடங்களுக்கு முன் எனக்கு சர்க்கரை இருக்கிறது என்று கண்டறிந்ததும் இங்குள்ள என் இதய மருத்துவர் ' இனி மருந்துகள் ஆரம்பித்து விடலாம்' என்றார். நான் சென்னையிலிருக்கும் சர்க்கரை நோய்க்கென்றே உள்ள ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சென்று ஒரு முறை பரிசோதனை செய்து வருகிறேன் என்றேன். அது போலவே சென்னை சென்றோம்.

அங்கே முதற்கட்டமாக நம் உட‌ல்நிலையைப்பற்றிய தகவல்கள் பல கேள்விகள் மூலம் பதிவு செய்யப்பட்டன. அதற்கடுத்தாற்போல சில இரத்தப்பரிசோதனைகள், இதயத்திற்கான, பின் மூளைக்கான ஸ்கான்கள், எக்ஸ்ரேக்கள் என்றெல்லாம் சோதனைகள் செய்யப்பட்டன. அப்போது தான் சர்க்கரை ஆரம்ப நிலையில் இருக்கும் எனக்கு எதற்கு இத்தனை பரிசோதனைகள் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. கடைசியில் தலமை மருத்துவரிடம் சென்றதும் அவர் எதுவுமே விளக்கங்கள் சொல்லாமல் ' இந்த மாத்திரைகள் எல்லாவற்ரையும் தொடர்ந்து சப்பிட்டு வாருங்கள்' என்று சொல்லி அனுப்பி விட்டார். காலை 9 மணிக்கு அந்த மருத்துவ மனையில் நுழைந்த நாங்கள் மாலை 5000 ரூபாய் அனைத்திற்கும் கட்டணமாகக் கட்டி விட்டுத் திரும்பினோம். மறுநாளிலிருந்து மாத்திரை சாப்பிட ஆரம்பித்தேன். அடுத்த நாளே தாழ்நிலை ச்ர்க்கரையினால் கிட்டத்தட்ட மயக்கத்திற்குப்போய் விட்டேன். சர்க்கரை அதிகம் கலந்திருக்கும் ஃபான்டா சாப்பிட்டதும் தான் மயக்கம், பலவீனம் சரியானது. அடுத்த நாளும் இதே போல பாதிக்கப்பட்டதால் இங்குள்ள என் இதய மருத்துவருக்கு ஃப்போன் செய்து ஆலோசனை கேட்டேன். அவர் மாத்திரைகள் பெயர்கள், அதிலுள்ள மருந்து விகிதங்களையெல்லாம் படிக்கச் சொல்லிக் கேட்டு, எனக்கு ஒரு மாத்திரையே போதும், மற்றதையெல்லாம் எடுக்க வேண்டாமென்று சொன்னார். மிகவும் வீரியமான மருந்துகளைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார். அதன் பிறகு, அந்த மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்திருந்த ஃபைலை எடுத்து ஒவ்வொரு பக்கமாய் பார்த்தபோது தான் தெரிந்தது அவர்கள் என் பிரச்சினையையே தப்பாக எழுதியிருக்கிறார்க்ள் என்று! எப்போதிலிருந்து சர்க்கரை இருக்கிறது என்று கேட்டதற்கு கடந்த ஒன்பது மாதங்களாய் சர்க்கரை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது என்று நான் பதில் சொன்னேன். அவர்கள் 9 மாதங்கள் என்பதை ஒன்பது வருடங்களாக என் ஃபைலில் ரிக்கார்ட் பண்ணி விட்டார்கள். ஒன்பது வருடங்களாக சர்க்கரை என்பதால் தலைமை மருத்துவர் வீரியமான மாத்திரைகள் தந்து விட்டார்!

இப்படிப்பட்ட மோசமான அனுபவத்துடன் தான் என் சர்க்கரை நோய்க்கான மருத்துவம் ஆரம்பித்தது. எந்த நோய்க்கும் ஒரு நல்ல, நம்மை அக்கறையுடன் கவனிக்கக்கூடிய மருத்துவர் நமக்குத்தேவை. பிரபல மருத்துவமனைகள் என்று பத்திரிகைகள், விளம்பரங்கள் சொல்வதை நம்பாதீர்கள். நமக்கு பழக்கமானவர்கள் சிபாரிசு செய்யும் நல்லதொரு மருத்துவரை உங்கள் குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் உடல்நலத்தை நீங்கள் சிறப்பாக கவனித்துக்கொள்ள முடியும். உங்கள் உடல் நிலைக்கேற்ப சிறப்பு மருத்துவரை அவரே பரிந்துரை செய்வார்.



சர்க்கரை அவ்வளவாக உங்கள் கட்டுக்குள் இல்லையென்றால் ஒரு குளுக்கோமீட்டர் வாங்கி தொடர்ந்து உங்கள் சர்க்கரை அளவை காலை வெறும் வயிற்றிலும் பின் சாப்பிட்டு 2 மணி நேரங்கழித்தும் சோதித்துப்பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். முந்திய இரவு சாப்பிட்டு மறுநாள் காலை 12 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும். அது போல காலை உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் எந்த உணவு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது, எந்த உணவில் ச்ர்க்கரை அதிகம் இருக்கிறது என்பதை நாமே அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் உணவு பழக்கங்களை சரி செய்து கொள்ளலாம்.

ஆனாலும்  குளுக்கோமீட்டர் எப்போதும் நம் சர்க்கரையின் அளவை சற்று கூடுதலாகவே காண்பிக்கும். அதை விட இரத்த பரிசோதனை செய்யுமிடத்தில் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுவது நல்லது. அதுவும் நம்பகமான பரிசோதனை நிலையமாக இருக்க வேண்டும்!!!

மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவார்கள்.  மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர் எப்படி கூறுகிறாரோ அவ்வாறே செய்தல் வேண்டும்.

மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும்.

சர்க்கரை மிக அதிகமாக, நம் கட்டுக்குள் இல்லையென்றால் மெதுவாக ஒவ்வொரு உறுப்பும் நம்மை பாதிக்க ஆரம்பித்து விடும்.

என் நெருங்கிய உறவினர் நாற்பது வயதினிலேயே சர்க்கரையினால் மரணமடைந்தார். சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளததனால் முதலில் பார்வை பாதிக்கப்பட்டது. கண்களில் இரத்தக்குழாய்கள் வெடித்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. அப்போதும் அவர் ச்ர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றதில்லை. சிறிது நாட்களில் உடலில் சர்க்கரையினால் கட்டிகள் தோன்ற ஆரம்பித்தன.  ச்ர்க்கரை அதிகம் இருந்தால் கட்டிகள் சுலபமாக ஆறாது. நாளடைவில் அவரின் சிறுநீரகம் பாதிப்படைய ஆரம்பித்தது. இரத்தத்தில் கிரியாட்டினின் அளவும் யூரியா அளவும் அதிகமாக ஆரம்பித்தன.
சிறுநீரகத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருந்தால் ரத்தத்தில் அதிகமாய் சேரும் உப்பு, பொட்டாசிய சத்துக்கள், சிரியாட்டினின் பாஸ்பேட்டில் இருந்து பிரியும் கிரியாட்டினின் எனும் வேதிப்பொருள் ஆகியவற்றை சிறுநீரகங்கள் வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். ரத்தத்தில் யூரியா எனப்படும் உப்பு சத்து அளவு 40 மில்லி கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். பொட்டாசிய சத்து 4.5 மில்லி கிராமுக்கு குறைவாகவும் கிரியாட்டினின் அளவு 1 மில்லி கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். சர்க்கரை இரத்தத்தில் அதிகமாக அதிகமாக இவை சிறுநீரில் வெளியேறுவதும் அதிகமாகும். ஒரு கட்டத்தில் இவை வெளியேறுவது மிக அதிகமாக, சிறுநீரை சுத்தகரிப்பது என்ற 'ஹீமோ டயாலிஸிஸ்' ஆரம்பித்து விடும். என் உற்வினருக்கு சிறுநீரகம் சுத்தமாக செயலிழந்த நிலையில் மருத்துவர்கள் கை விரித்த நிலையில் அப்போது தான் தன் நிலைமை அவருக்கு தீவிரமாக புரிய ' என்னை எப்ப்டியாவது காப்பாற்றுங்கள்' என்று அழுதார். இறுதியில் பரிதாமாக இறந்தும் போனார்.

எல்லோருமே மரணம் அமைதியான முறையில் அதிகம் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்புவோம். ஒவ்வொரு அவயமாய் வீணாகி, அடுத்தவரின் பரிதாபத்திற்கு ஆளாகி இப்படி துடிதுடித்து இறக்க நேர்வது கொடுமை!  சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ச்ந்தர்ப்பங்களை நிறைய இயற்கையே கொடுக்கின்றது. சந்தர்ப்பங்களை முழுவதுமாகப்பயன்படுத்திக்கொண்டு, அடுத்தவருக்கும் தொல்லை தராமல் வாழ்க்கையை இறுதி வரை நகர்த்திக்கொண்டு நாம் போக நமக்கு மன உறுதியும் நாக்குக் கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியம்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம். வெளியிடங்களில் உள்ள‌ கழிப்பறைகளை உபயோகிப்பதை அறவே தவிருங்கள். கழிப்பறைகள் மூலமாக ஒரு வகை மஞ்சள் காமாலை பரவுவதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவசியம் கழிப்பறையை உபயோகிக்க வேண்டுமென்றால் நன்கு கழுவி விட்டு உபயோகியுங்கள்.
சமீபத்தில் ஏற்க‌னவே கிரியாட்டினினும் யூரியாவும் அதிகமாயிருந்த என் கணவரின் சகோதரர் சென்னையில் அவரின் மகளுக்குத் துணையாக‌ மருத்துமனையில் சில காலம் இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயம் அவருக்கு மஞ்சள் காமாலை பரவியிருந்தது அவருக்கு தெரியவில்லை. குளிர் ஜுரம் வந்து மருத்துவமனையில் சேர்த்த போது அவருக்கு எல்லாமே மிக அதிகமாகி சிறுநீர் சுத்தகரிப்பு செய்தும் பலனன்றி இறந்து போனார்.

தாழ்நிலை சர்க்கரை : [ hypoglycemia ]


இரத்த‌த்தில் சர்க்கரை மிகவும் கீழே இறங்கும்போது தாழ்நிலை சர்க்கரை என்றாகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிக வீரியமான மருந்துகள் எடுக்கும்போதும் ஒழுங்கான நேரத்தில் உணவு எடுக்காதபோதும் இந்த‌ தாழ்நிலை சர்க்கரை ஏற்படுகிறது. மருந்து எடுத்த இரண்டு மணி நேரம் கழித்து அவசியம் ஏதேனும் பழம், இரன்டு மேரி பிஸ்கட் எடுப்பது அவசியம். மாத்திரையால் கீழிறங்கிக் கொண்டிருக்கும் ச‌ர்க்கரை மறுபடியும் சீரடையும்.  இதனால்தான் வெளியே செல்ல நேரிடும்போது சட்டைப்பையில் சில சாக்கலேட் வைத்திருக்கச் சொல்லுகிறார்கள். மாத்திரை எடுத்து 2, 3 மணி நேரங்களில் கால் சில்லிட்டு, உடல் மிக பலவீனமாக மாறும் நிலை அடிக்கடி ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள். அவர் அதற்கேற்ப உங்கள் மத்திரையை குறைத்து எழுதிக்கொடுப்பார்.

இது அல்லாமல் சர்க்கரை குறைய வேண்டுமே என்ற அதீத ஆவலில் மாத்திரைகளோடு ஏதாவது வெளித்தயாரிப்புகளான பவுடர்கள் எடுத்தால் சில நாட்களில் உங்களுக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படலாம்.

என் தாயார் விள‌ம்பரங்களில் பார்த்த ஒரு பவுடரை வாங்கி ஆர்வக்கோளாறில் சாப்பிடப்போக, ஒரு நாள் மாலை அப்ப‌டியே உட்கார்ந்தபடியே எந்த செயலும் இல்லாத உணர்வற்ற நிலைக்குப்போய் விட்டார்கள்! உடனே அவர்களின் நெஞ்சில் விக்ஸ் தடவி பர‌பரவென தேய்த்து விட்டதும் 10 நிமிடங்களில் மெதுவாகக் கண் திறந்தார்கள். பின் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம்.

தாழ்நிலை சர்க்கரை ஒரு நோயல்ல. மருந்துகளையும் அதன் பின் நம் உண‌வையும் கவனத்துட்ன் கையாண்டால் போதும், தாழ்நிலை சர்க்கரை ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்லலாம்.

மாதம் ஒரு முறை சர்க்கரைக்கான இரத்தப்பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். நாள்பட்ட ச்ர்க்கரை நோய்க்காரர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிரியாட்டினின், யூரியா அளவுகளையும் கண்டறிதல் வேன்டும். அத்துடன் மூன்று மாதங்களுக்கான் மொத்த சர்க்கரை அளவையும் [ HBA1C ]பரிசோதித்துப்பார்த்துக்கொள்ள‌ வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்த்த்தின் கொழுப்புக்களின் விகிதங்களையும் கண்டறிதல் வேன்டும்.
 
மருத்துவத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அக்குப்ப்ரெஷர், அக்குப்பங்சர், முத்திரைகள், யோகா என்று சர்க்கரையை கட்டுப்படுத்த பல்வேறு சிற்ந்த மருத்துவங்கள் இருக்கின்றன. எந்த மருத்துவ‌த்தையாவது முழுவதுமாக‌ மேற்கொண்டு, கூடவே நல்ல உண‌வுப்பழக்க வழக்கங்களையும் உட்ல் சுத்தத்தையும் மிதமான உடற்பயிற்சியையும் தொடர்ந்து கொண்டிருந்தால் சர்க்கரை நம்மை விட்டு முழுவ்துமாக‌ ஓடிப்போகாவிட்டாலும் நம்மை விட்டு எட்டியே நின்று கொன்டிருக்கும்!!

Tuesday 16 June 2015

சர்க்கரை நோய் -பாகம் 2

சர்க்கரை நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளுவதற்கும் மற்ற‌வர்களைப்போல மகிழ்வாக வாழ்வதற்கும் முக்கியமான மூன்று விஷயங்களை பின்பற்றுதல் அவசியம்.

அவை

சரியான உணவு, உடற்பயிற்சி, தகுந்த மருந்துகளும் மருத்துவமும்.

சரியான உணவு:

பெரும்பாலும் இது நடுத்தர வயதில் தாம் மக்களைத்தாக்குகிறது. அதுவரை நாம் சாப்பிடாத உணவு வகைகளா? ருசிக்காத பலகாரங்களா? ரசிக்காத இனிப்பு வகைகளா? இப்படியெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொண்டாலும் எல்லாவற்றையும் ஏறக்கட்டுவது என்பது சுலபமான விஷயமில்லை! நாக்கும் மனசும் போராட்டம் நடத்தும். அந்தப்போராட்டத்திலிருந்து மீண்டு வர மிகுந்த சுயக்கட்டுப்பாடும் மன உறுதியும் தேவை.

நீரழிவு நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்று சொல்லப்படுவதை சரியாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். அடிப்படையை புரிந்து கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயாளிகள் உண்ணும் உணவு மெதுவாக சர்க்கரையை சேமிக்கக் கூடிய  தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் சர்க்கரையை சேமிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும்.

கேழ்வரகில் நார்ப்பொருள்(தவிடு) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே (70%) மாவுப் பொருள் இருக்கிறது.
மேலும் எந்த வகை உணவு உண்கிறோம் என்பதும் எவ்வளவு உண்கிறோம் என்பதும் தான் இதில் முக்கியம். பொதுவாக கிழங்கு வகைகளைத்தவிர்ப்பது அவசியம் என்று அன்று சொல்லப்பட்டது. இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்னரே ஒரு சினேகிதி சொன்னார், அவரின் கணவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மருத்துவர் உருளைக்கிழங்கையெல்லாம் இனி உண்ணுதல் கூடாது என்று அறிவிக்க, உணவில் உருளைக்கிழங்கை தினமும் சாப்பிட்டு பழக்கமான அவர் அழுது விட்டாராம். உடனேயே மருத்துவர் ' தினமும் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 2 மேசைக்கரண்டி சாப்பிடலாம்' என்று அனுமதித்ததால் அவரும் தினமும் அப்படியே சாப்பிட்டு வருகிறாராம். சர்க்கரை அளவு ஏறவில்லை என்று என் சினேகிதி சொன்னார். முன்பு தவிர்க்கப்பட்ட காரட்டும் இன்று மருத்துவர்களால் பரிந்துரை செய்யப் படுகிறது.நமக்குப்பிடித்த உணவைக்கூட இப்படி அளவோடு சாப்பிட நம்மால் முடியும். ஆனால் ஒன்று, இதில் சர்க்கரை கலந்த உணவுகளோ, இனிப்பு வகைகளோ சேர்க்கப்படவில்லை.

ஒரு நாள் உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் குளுக்கோஸ் அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

கண்ட கண்ட எண்ணெயில் பொரித்த பண்டங்களை கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத் தவிருங்கள்.
வயிற்றுப்பாதிப்பு இருப்பவர்கள் காலை காப்பிக்கு பதிலாக கஞ்சி குடிக்கலாம். கஞ்சியில் மாவுச் சத்து அதிகமிருக்கக்கூடாது. மிகச் சிறிய அளவில் சிகப்பு அரிசியும் பெரிய அளவுகளில் புரதப்பொருள்களும் கலந்து மாவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

விபரம் தெரியாத சமயத்தில் காதியில் கிடைக்கும் கம்பு கஞ்சி பவுடர் வாங்கி வந்து கஞ்சி தயாரித்து குடித்தேன். சர்க்கரை ஏறியிருந்தது சில மாதங்களுக்குப்பிறகு தான் தெரிந்தது. பின் விபரம் தெரிந்த சினேகிதி ஒருவரிடம் செய்யும் முறை அறிந்து கஞ்சிப்பொடி தயாரித்து அதையே காலை வேலைகளில் காப்பிக்கு பதிலாக குடிக்கிறேன். சர்க்கரை ஏறுவதில்லை என்பதுடன் வயிறு பாதிப்புகள் இல்லாது இருக்கின்றது. திரவ உணவு உடனேயே ஜீரணம் ஆகி உடலில் சர்க்கரை ஏறும் என்பதால் இந்தக் கஞ்சியையே சற்று கெட்டியாக கூழை விட கெட்டியாக காய்ச்சி சிறிது மோரும் சிட்டிகை உப்பும் கலந்து சாப்பிடலாம்.

நிச்சயமாக தவிர்க்க வேண்டியவை:

உப்பு உணவில் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்கவும். அதனால் ஊறுகாய், வற்றல் வகைகள் கடையில் வாங்கி உபயோகிப்பதைத் தவிருங்கள். இனிப்புகள், இனிப்பு சார்ந்த பொருள்கள், வெல்ல்ம், சர்க்கரை, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், தேங்காய்ச் சட்னி, ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்றவை, கோக்கோ கோலா, பெப்ஸி போன்ற பானங்கள், டின், புட்டிகளில் விற்கும் பழச்சாறு, அதிக இனிப்புள்ள பழங்கள் முதலியவை.

நம் உடலின் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தால் பழங்கள் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் உண்ணலாம். மிருக புரதங்களைக்காட்டிலும் காய்கறிகளிலுள்ள புரதம் நன்மை பயக்கும் என்பது தற்கால கன்டு பிடிப்பு.

நாம் உணவைத்தேர்ந்தெடுக்கும்போது அதன் கலோரி அளவு, நார்ச்சத்து இவற்றை கவனித்து நமக்கு நாமே ஒரு அட்டவணை போட்டுக்கொண்டால் நிச்சயம் சுவையான உணவுகளை உண்ண நம்மால் முடியும். தினமும் ஒரு வேளையாவது அரிசி உணவைக் குறைத்து வந்தாலே சர்க்கரையின் அளவு குறையும்.

இதன்படி ஒரு மாதிரி உணவுப்பட்டியல் தயார் செய்யலாம்.

காலை 6.30 மணி:

ஒரு கப் காப்பி அல்லது டீ சர்க்கரை சேர்க்காமல். இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் அநேகர் சாப்பிடுவது மெட்ஃபோர்மின் என்ற சக்தியை அடக்கிய மாத்திரைகள் தான். இதில் பல வகை மெட்ஃபோர்மின்கள் வயிற்றுப்பிரச்சினைகள் சிறிதளவாவது கொடுத்துக்கொண்டிருக்கும் என்பது உண்மை. சில வகை மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு காப்பி ஒத்துக்கொள்ளாது. அவர்கள் ஆடை நீக்கப்பட்ட கெட்டி மோர் ஒரு தம்ளர் குடிக்கலாம். அல்லது நான் ஏற்க்னவே குறிப்பிட்ட கூழ் அரை கப் சாப்பிடலாம். உங்களுக்கு சர்க்கரை அதிகமாக ஏறும் தன்மை இல்லையென்றால் அல்லது காலை உணவு சாப்பிடும் நேரம் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது என்றால் ஒரு கப் கூழ் கூட சாப்பிடலாம். டீ சாப்பிடுவது நல்லதில்லை உடலுக்கு என்று என் சித்த மருத்துவர் கூறியிருக்கிறார். உங்களுக்கு நல்லதொரு குடும்ப மருத்துவர் இருந்தால் அவரிடம் பேசி உங்கள் உணவு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள்.

காலை 8 -9 மணி:

காலை உணவாக இட்லி அல்லது தோசை அல்லது பொங்கல், உப்புமா என்று சாப்பிடலாம். பொதுவாய் இட்லி நான்கு சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். அது பஞ்சு போல் இருக்கும் சின்ன சின்ன இட்லிகளுக்குப் பொருந்தும். சிறிது கடினமான, பெரிதான இட்லி என்றால் 3 இட்லிகளே போதும். ஹோட்டல் இட்லி என்றால் நிச்சயம் இரண்டு இட்லிகள் போதுமானது. இந்த அளவிற்கு மேல் சாப்பிட்டால் சர்க்கரை அதிகம் ஏறும். அவற்றிற்கு பக்க உணவைப்பொருத்தும் சர்க்கரை ஏறுவதும் இறங்குவதும் நடக்கிறது. தேங்காய் சட்னிக்கு சர்க்கரை ஏறும். அளவோடு சாப்பிட வேண்டும். சாம்பாரும் அப்படித்தான். வெள்ளமாக ஊற்றி சாப்பிடக்கூடாது. தக்காளி சட்னி, காய்கறி சட்னி சரியானது. அதேபோல தோசை என்றால் இரண்டே அதிகம். என் சித்த மருத்துவர் தோசையைத் தவிருங்கள் என்று தான் கூறுகிறார். ' தோசைக்கல்லைப் பழுக்க காய வைத்தாலொழிய தோசை சுட முடியாது. அப்படியென்றால் என்ன அர்த்தம். மாவை எண்ணெயில் பொரிப்பதற்கு சமம். சீக்கிரம் அதனால் ஜீரணமாகாது. அதனால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை ரொம்ப நேரத்திற்கு அதிகமாகவே இருக்கும் ' என்கிறார். அதற்கு பதிலாக கேழ்வரகு அல்லது கோதுமை தோசை பிரச்சினைகளைக் குறைக்கும் என்றும் சொன்னார். இப்போதெல்லாம் சிறு தானியக்குறிப்புகள் சோள இட்லி, திணை உப்புமா, கோதுமை இட்லி போன்ற விஷயங்களெல்லாம் வந்து விட்டன. அவை இன்னும் அதிகமான நார்ச்சத்து கொண்டிருப்பதால் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

காலை 11 மணி:

2 மேரி பிஸ்கட், தக்காளி அல்லது எலுமிச்சை ஜூஸ் அல்லது மோர் குடிக்கலாம்.

மதியம் 12- 1 மணி

மதியம் சாப்பாட்டிலும் அரிசி சாதம் ஒரு கப் எடுத்தால் காய்கறிகள் இரண்டு மடங்கு சாப்பிடுவது வயிற்றை நிரப்பும்.
சாதத்திற்கு பதில் கோதுமை சதம் அல்லது கைக்குத்தல் அரிசி சாதம் அல்லது சிகப்பரிசி சாதம் மிகவும் நல்லது. சப்பாத்தி என்றால் மெதுவான சிறிய சப்பாத்திக்கள் மூன்று வரை சாப்பிடலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எண்ணெயில் வறுத்த அசைவ உணவுகளைத் தவிர்த்து வேக வைத்த அசைவ உணவுகளை உண்பது நல்லது.

மாலை ஐந்து மணி:

காப்பி அல்லது டீயுடன் மேரி பிஸ்கட் அல்லது வேக வைத்த சுண்டல் அல்லது அவித்த கடலை ஒரு  கைப்பிடி சாப்பிடலாம்.

இரவு 8 மணி:

எளிதில் ஜீரணமாகும் இட்லி அல்லது இடியாப்பம் சாப்பிடுவது நல்லது. ஜீரணம் எளிதிலாகாத சப்பாத்தியைத் தவிர்ப்பது நல்லது. இதயப் படபடப்பு இருப்பவர்களுக்கு பரோட்டா, சப்பாத்தி சாப்பிடுவது எளிதில் ஜீரணமாகாது சில சமயங்களில் படபடப்பு அதிகமாகும்.

முக்கியமான விஷயம், இனிப்பை அறவே தவிர்க்க வேண்டும். சில சமயம் விருந்தினர் வீட்டுக்குச் செல்லும்போதோ அல்ல‌து திருமணம் போன்ற விசேடங்களின் போதோ இனிப்புகளைத்தவிர்ப்பது தயக்கமாக இருக்கும். அல்லது உங்கள் விருந்தினர் தப்பாக நினைத்துக்கொள்ள்க்கூடாது என்ற எண்ணமாக இருக்கும் அந்த தயக்கத்தை அறவே விட்டொழியுங்கள். உங்களை இனிப்பு எடுத்துக்கொள்ளச் சொல்லும் விருந்தினரிடம் கண்டிப்புடன் மறுத்து விடுங்கள். என் இதய மருத்துவர் கூட ஒரு முறை சொன்னார், 'இத்தனை கண்டிப்பு தேவையில்லை. அவ்வப்போது ஒரு ஜாங்கிரி, ஒரு மாம்பழம் என்று சாப்பிடலாம், தவறில்லை' என்று! அப்படி எப்போதாவது இனிப்பை சாப்பிட ஆரம்பித்தால் நம் சபலமும் நாக்கும் நம்மை சுலபமாக பள்ளத்தில் தள்ளி விடுகிறது. அவ்வப்போது உடம்பு வலி, கால் வலி, வயிற்றுப்பிரச்சனைகள் என்று சிறு சிறு தொந்தரவுகளும் கூடவே நம்மை பின் தொடரும். இனிப்பை அறவே தவிர்த்தால் இந்த சிறு சிறு பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை விட்டு விலகுவதை நீங்கள் உணர முடியும். சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்கனவே கோளாறான கணையம் இன்னும் பாதிப்பை அடையும். பீடா செல்கள் அதிகம் அழற்சி அடையும்.
காப்பி, டீ இவற்றில் செயற்கை இனிப்பூட்டியைச் சேர்ப்பது பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அதனால் உங்கள் ம்ருத்துவரிடம் கேட்டுக்கொண்டு அதை உபயோகிப்பது நல்லது.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சிகள் எல்லோராலும் செய்ய இயலாது. அதனால் தினமும் ஓரளவு வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுவது நல்லது. சில வகை யோகா பயிற்சிகள் சர்க்கரை நோய்க்கும் இரத்த அழுத்தத்திற்கும் மிக அருமையாகக் கை கொடுக்கின்றன. தகுந்த ஆசிரியர் மூலம் இந்த யோகாசங்களிளை செய்யலாம். தனுராசனம் என்ற யோகாசனம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் குறைய மிக எளிமையான பயிற்சியை நான் ஏற்கனவே என் பதிவில் விவரித்துள்ளேன். அதன் இணைப்பை இத்துடன் கொடுத்திருக்கிறேன்.

http://muthusidharal.blogspot.ae/2012/08/blog-post_19.html

தொடரும்
 

Wednesday 10 June 2015

சர்க்கரை நோய்!!!

சர்க்கரை நோய் பற்றிய கட்டுரைகளும் அலசல்களும் இதுவரை பல புத்தகங்களிலும் பதிவுகளிலும் வெளி வந்திருக்கின்றன.  அதனால் இதில் என்ன புதிய விஷயங்கள் இருக்கப்போகின்றன என்றும் தோன்றலாம். இதில் சர்க்கரை நோய் பற்றிய விபரங்களுடன் என் அனுபவங்களும் கற்றுக்கொண்ட படிப்பினைகளும் சற்று அதிகப்படியான தகவல்களுமாக சொல்ல முயன்றிருக்கிறேன். இது அனைவருக்கும், முக்கியமாக சர்க்கரை நோயால் அவதியுற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மருந்தாக செயல்பட்டால் அதுவே இந்தப்பதிவு எழுதியதற்கான அர்த்தம் பூர்த்தியடைந்ததற்கான அர்த்தம்!

முதலில் சர்க்கரை நோய் பற்றி பார்ப்போம். இது நோயல்ல, இது ஒரு குறைபாடு என்றும் சொல்லப்படுகிறது. நம் உடலில் பிரதான உறுப்பான கணையத்தின் வால் பகுதியின் உட்புறத்தில் ”லாங்கர்ஹான்” திட்டுகள் என்னும் நாளமில்லாச் செல்களினால் ஆன திட்டுகள் சுமார் பத்து லட்சம் உள்ளன. இந்த லாங்கர்ஹான் செல்கள் “ஆல்பா” செல்கள் எனவும் “பீட்டா” செல்கள் எனவும் இருவகைப்படுகின்றன.  பீட்டா செல்கள் இன்சுலின் என்னும் திரவத்தை சுரக்கின்றன. இந்த இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களிலும் சக்தியாக செலுத்தி பயன்படுத்த வைக்கிறது.  மேலும் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சரியான விகிதத்திலும் வைத்திருக்கும். இந்த இன்சுலின் அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறும். இது தான் நீரிழிவு அல்லது மதுமேகம் அல்லது சலரோகம் அல்லது ஆங்கிலத்தில் டயாபெடீஸ் அல்லது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது.





இதில் ”ஆல்பா” செல்கள் “குளுகோகான்” என்னும் ஹார்மோனையும், “பீட்டா” செல்கள் ”இன்சுலின்” என்னும் ஹார்மோனையும் சுரக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் கீழ்ப்பெரும் சிரையினுள் சுரக்கப்பட்டுக் கல்லீரலை சென்றடைகின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களை தவிர “சோமடோஸ்டேசன்” என்ற ஹார்மோனும் கணையத்தால் சுரக்கப்படுகிறது.

இந்த மூன்று ஹார்மோன்களில்
இன்சுலின் திசுக்களுக்கு குளுகோஸை கொண்டு சேர்க்கிறது.
குளுகோகான் இன்சுலினுக்கு எதிர்மாறான தன்மை உடைய ஹார்மோன். ரத்தத்தில் சர்க்கரை குறைந்தால் கல்லீரலை தூண்டி அது சேமித்து வைத்திருக்கும் குளுக்கோஸை ரிலீஸ் செய்யுமாறு தூண்டும்.
சோமடோஸ்டேசன் மேலே சொன்ன இரு ஹார்மோன்களையும் தேவைப்படும் போது, சுரக்காமல் தடுக்கும்.

சர்க்கரை நோயின் வகைகள்:

முதலாவது வகை சர்க்கரை நோய் (Type1)

கணையம் பாதிக்கப்படுவதால் போதியளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் ஏற்படுவது. சிறு குழந்தைகளில் ஏற்படும் நீரழிவு இந்த வகையானதாகும். இதற்கு மருந்தாக இன்சுலின் ஊசி வாழ்நாள் முழுவதும் ஏற்றப்பட வேண்டும்.

இரண்டாவது வகை சர்க்கரை நோய் (Type2)

இது இன்சுலினின் செயல்பாடு குறைவதால் ஏற்படுவது.
பெரியவர்களிலே ஏற்படுவது சாதாரணமாக இந்த வகையான நீரழிவாகும். இதற்கு ஆரம்ப காலத்தில் வாய்வழி மூலம் உட்கொள்ளப்படும் மாத்திரைகள், சிலசமயங்களில்
சில கட்டங்களில் இன்சுலின் ஊசி தேவைப்படலாம்.

கர்ப்பகால சர்க்கரை நோய்

இது தாய்மையடைந்த பெண்களுக்கு  மட்டுமே ஏற்படும் நீரழிவாகும். குழந்தை பிறந்தவுடன் நீரழிவு நோய் தானாக மறைந்துவிடும. ஆனாலும் குழந்தை பிறக்கும் வரை இன்சுலின் தேவைப்படலாம். இப்போதைய ஆய்வில், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் பலருக்கு பின்னாளில் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் உலக சுகாதார குழுமம் நிர்ணயித்த பழைய வகைகள். இப்போது இன்னும் சில வகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

4. பிறவிக்கோளாறுகளால் களைய பீட்டா செல்கள் பாதிக்கப்படுவதல் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. கணையத்தில் கற்கள், கட்டிகள் போன்றவற்றாலும் சர்க்கரை நோய் உண்டாகிறது.

5. வைரஸ் போன்ற தீவிரமான தொற்று நோய்கள் கணையத்தை பாதிப்பதாலும் சர்க்கரை நோய் உண்டாகிறது.

6. சில மருந்துகளாலும் உண்டாகிறது.

7. சில மரபணுக்கோளாறுகளால் உண்டாகிறது.

8. அபூர்வமான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாலும் வருகிறது.

இவையெல்லாம் சர்க்கரை நோயின் பிரிவுகளாக உலக சுகாதாரக் குழுமம் தற்போது அறிவித்திருக்கிறது.

சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது?

உடல் பருமனாலும் கணையத்தில் ஏற்படும் அழற்சியாலும் பரம்பரையின் சுழற்சியினாலும் அதிகம் மாவுப்பொருள்களை உண்பதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சில கருத்தடை மாத்திரைகளாலும் சர்க்கரை நோய் ஏற்படுவதாக கண்டு பிடித்துள்ளார்கள். குடும்பத்தில் சர்க்கரை வியாதி இருந்தால் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட ஆரம்பிக்குமுன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்! மன நோய்க்கான மருந்துகள் உள்ளவர்கள், மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகம். உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகம். பரம்பரை என்னும்போது, தாய் தந்தை இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் குழந்தைக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு நூறு சதவிகிதம் இருக்கிறது. தாய், தந்தை யாருக்கேனும் ஒருத்தருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் குழந்தைக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு ஐம்பது சதவிகிதம் இருக்கிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

பெரும்பாலும் இது ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடிவது அபூர்வம். இது மூன்று முக்கிய அறிகுறிகள் காட்டும். அது வரை இருந்த சிறுநீர்க்கழிப்பு இரு மடங்காகும். இதன் காரணமாக அதிக பசி, அதிக சோர்வு, அதிக தாகம் எப்போதும் ஏற் படும். சில சமயம் அதிக சர்க்கரை சிறு நீரில் வெளியேறினால் சொல்ல முடியாத எரிச்சல் சிறு நீர்ப்பாதையில் ஏற்படும்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள்:

சர்க்கரையை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளா விட்டால் தொற்று நோய்கள் சுலபமாக ஏற்படும். முக்கியமாக தோல், சிறுநீரகம் அடிக்கடி தொற்று நோயால் பாதிக்கப்படும். இதனால் இரத்ததில் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

ரெடீனாவில் சிறு சிறு இரத்தக்குழாய்கள் சேதமடையும். கண் பார்வை குறையும். [DIABETIC RETINOPATHY]

சிறுநீரக இரத்தக்குழாய்கள் தடித்து அதில் புரதம் கலந்து விடுகிறது. சிறுநீரக இரத்த சுத்தகரிப்பு இதனால் பாதிக்கப்படுகிறது. [ DIABETIC NEPHROPATHY]

நரம்புகள் மெதுவாக பாதிப்படைய ஆரம்பிக்கின்றன. முதலில் கால்களில் உணர்வு குறைதல், அடிக்கடி வலி ஏற்படுதல், நாளாக நாளாக இரத்த அழுத்தத்தையும் ஜீரணத்தையும் கட்டுப்படுத்தும் நரம்புகள் பலவீனமடையும். [ DIABETIC NEUROPATHY ]

அதிக சர்க்கரை வயிற்றுப்பகுதியையும் பாதிக்கிறது. இரப்பை அடைப்பு, ஜீரணம் ஆக உதவும் முக்கியமான நரம்பான வேகஸ் நரம்பு பாதிப்பு, அதைத்தொடர்ந்து அதிக வயிற்று வலி, வயிறு சம்பந்தமான கோளாறுகள் உண்டாகும்.

கடைசியாக மூட்டு வலி.

இத்தனை நோய்களையும் முறையான நடை பயிற்சி, தக்க மருந்துகள், சரியான உணவு என்று சர்க்கரை நோயைக்கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம் நம் பக்கம் வர விடாமல் செய்ய முடியும். அதற்கு முக்கியமாக வேண்டுவது மனக்கட்டுப்பாடு மட்டுமே.

சர்க்கரை நோயை எந்தெந்த வழிமுறைகள் மூலம் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்றவர்களைப்போலவே நாமும் எப்படி மகிழ்வாக வாழலாம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தொடரும்...