Saturday 31 December 2011

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



                                                                    
                                                 வாழ்க்கையென்ற நந்தவனத்தில்
                                                 வாச மிகு மலர்கள் மலரட்டும்!




                                                  வாழ்க்கை என்ற வானவில்லின்
                                                  வண்ணங்கள் அழகாய்ப் பதியட்டும்!!




                                                   வாழ்க்கை முழுதும் அன்பும் மனிதமும்
                                                   வான்மழையாய் எங்கும் பொழியட்டும்!!




                                         அன்பான தோழமைகள் அனைவருக்கும்
                                         உளம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!





Tuesday 27 December 2011

பறக்கத் துடிக்கும் பழுத்த இலைகள்- பகுதி-2

80 வயதைக் கடந்த பின்பும் இன்னும் தன் வீட்டிற்காகவும் தம் மக்களுக்காகவும் உழைக்க வேண்டியிருப்பது சிலரின் தலையெழுத்தாக மாறி விட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். தன் சொந்த மகள் இல்லத்திலேயே, மரணம் விரைவில் வராதா என்று வேண்டி காத்திருக்கும் என் சினேகிதியொருத்தரைப் பற்றி எழுதி என் மன பாரத்தை கொஞ்சம் இங்கே குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

இவர் சிறு வயதில் தந்தைக்கு மிகவும் செல்லப் பெண்ணாக வசதியாக

வளர்ந்தவர். திருமணம் என்ற ஒன்று ஆன பிறகு தான் இவரின் வாழ்க்கையே தடம் புரண்டு போனது. ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, தன் கணவரின் சந்தேகத்தீயில் அவ்வப்போது மனம் கருகிப் போனார் இவர்.

கணவருக்கு வெளி நாட்டில் நல்ல வேலையென்றாலும், தொட்டதெற்கெல்லாம் கோபித்துக் கொள்ளும் மனப்பான்மையால் வேலையை விட்டு விட்டு தமிழ்நாட்டின் முக்கிய நகரமொன்றில் தனக்குப் பிடித்த மாதிரியான தொழிலை ஆரம்பித்தார். நிர்வாகத்திறமையின்மையால் அதுவும் வீணாக அன்றைக்கு ஆரம்பித்தது தான் குடும்பத்தில் வறுமை. மகளுக்கு படிப்பில் இருந்த அளவு மகனுக்கு ஆர்வமில்லாததால் சாதாரன வேலைகளில் அவனும் கால் பதிக்க ஆரம்பித்தான். வாழ்க்கை கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்த நேரம்- 25 வயதில் அவனும் சாலை விபத்தில் அகால மரணமடைந்து போனான். மனம் சுக்கு நூறாக ஒடிந்து போக வாழ்க்கைப்பாதையில் நடக்க எந்த தெம்புமில்லாமல் கூடப்பிறந்தவர்களின் உதவியுடன் வேதனையுடன் நகர ஆரம்பித்தது வாழ்க்கை. ஒரு பக்கம் புத்திர சோகம். மறுபக்கம் வறுமையும் உடல் உபாதைகளும் பிணிகளும். கணவரும் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போக ஆரம்பித்தார். நன்றாக நடமாடிக்கொண்டிருந்த காலத்திலேயே, பக்கத்திலிருக்கும் மாத்திரைகளை அவராக எடுத்து சாப்பிட மாட்டார். மனைவி எங்கு போயிருந்தாலும் அவர் தான் வந்து மாத்திரைகளை எடுத்துத் தரவேண்டும். உடல்நிலை அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைய ஆரம்பிக்க, மனம் விரும்பாவிட்டாலும் வேறு வழியின்றி, தன் மகள் வற்புறுத்தலினால் அவரின் வீட்டிற்குச் சென்று என் சினேகிதி தங்க வேண்டியதாயிற்று. எத்தனை தான் உடல் சரியில்லாமலிருந்தாலும் மகளுக்கு பாரமில்லாத வகையில் தன் பங்கிற்கு வீட்டு வேலைகளைச் செய்வதும் உடல் நிலை சரியில்லாத கணவரை கவனித்துக்கொள்வதுமாக அவரின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. சில சமயங்களில் அலுப்பிலோ, மற்ற அழுத்தங்கள் காரணமாகவோ மகள் சுருக்கென்று ஏதாவது பேசி விடும்போது துடித்துப் போய் விடுகிறார்.




சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அவரின் கணவருக்கு நினைவு தப்பி படுத்த படுக்கையில் இருப்பது தெரிந்த போது மனசு மிகவும் வேதனைப்பட்டது. மிகத் தொலைவில் இருப்பதால் உடனே சென்று பார்க்க முடியாமல் அவரிடம் தொலைபேசியில் பேசிய போது குரல் நடுங்க அவர் சொன்ன வார்த்தைகள் – “ இனிமேல் உயிருடன் வாழ்ந்து என்ன ஆகப்போகிறது? சீக்கிரம் எங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். இரண்டு பேருக்குமே மரணம் தான் விடுதலை”

வாழ்க்கையில் எத்தனையோ பேருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறேன். ஆனால் இவருக்கு மட்டும் என்னால் என்றுமே ஆறுதல் சொல்ல முடிந்ததேயில்லை. ஒவ்வொருத்தருக்கும் எதிர்காலத்தில் எதேனுமொரு நம்பிக்கையென்ற பற்றுக்கோடு இருக்கும். வேதனைகளை மறக்க வல்ல ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பு காத்திருக்கும். அப்படி எதுவுமேயில்லாத இவரின் வாழ்க்கையில், மரணமே விடுதலையாக மானசீகமாகக் காத்திருக்கும் இவரை என்னவென்று சொல்லி ஆறுதல் படுத்துவது?

பழுத்த இலைகள் உதிர்வது என்பது காலத்தின் மாற்ற இயலாத கட்டாயம். அப்படி உதிரும் நேரத்திலாவது வயது முதிர்ந்தவர்களுக்கு ஒரு அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கை இருக்க வேண்டும். யாரையும் சார்ந்திருக்காத வாழ்க்கை அமைய வேண்டும். பொருளாதார ரீதியில் அவர்களுக்கென ஒரு சேமிப்பு முதுமையின் தாக்கங்களுக்கு பதில் சொல்ல இருக்க வேண்டும். முக்கியமாய் தனக்கென ஒரு வீடும் வாழ்நாள் முழுவதும் யாரையும் அண்டி இருக்க வேண்டாத அளவு பொருளாதார பலமும் அமைந்து விட்டால் அதுவே முதுமையின் தள்ளாமையையும் நோய்களையும் சமாளிக்க போதுமான பலத்தைத் தந்து விடுகிறது. முதுமைக்கான சேமிப்பை இதுவரை ஆரம்பித்திருக்காவிட்டாலும் இனியாவது அந்த சேமிப்பைத் தொடங்க ஆரம்பிப்போம்!!!



படம் உதவி: கூகிள்



Wednesday 14 December 2011

பறக்கத் துடிக்கும் பழுத்த இலைகள்!!

முதியோர் நலன் பற்றி நிறைய கருத்துரைகளும் அலசல்களும் ஏற்கனவே பத்திரிகைகளிலும் வார இதழ்கள், மாத இதழ்களிலும் ஏராளமாக வந்து விட்டன. முதியோர் இல்லங்களைப்பற்றியும் பல விதக் கருத்துக்கள், சோகங்கள் என்று எல்லாவற்றையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதிலிருந்து சற்று விலகி, இன்றைக்கு முதியோர்கள் தங்களின் மக்களுக்காக எந்த அளவு சுமைகளை தங்கள் தள்ளாத வயதிலும் சுமக்கிறார்கள் என்பதைப்பற்றியும் சொல்ல நிறைய இருக்கின்றன. சில சமயங்களில் அவர்களின் வேதனைகளைப் பார்க்கையில் மனது ரத்தக் கண்ணீர் வடிக்கின்றது. ஒரு ஆணாக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, வயது முதிர முதிர, அவர்களின் உடல் தளர ஆரம்பிக்கிறது. முன்போல வேலைகள் செய்ய முடியாமல் உடலின் பல பாகங்களிலும் பல வித நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. மனம் சோர்வடைய ஆரம்பிக்கிறது. சாய்ந்து கொள்ள தோள்கள் தேடி, மனம் தவிக்க ஆரம்பிக்கிறது. ஆனால், அன்போ, அக்கறையோ, ,சினேகிதமோ எதுவுமே கிடைக்காமல், இன்னும் அதிகமான சுமைகளும் பொறுப்புகளும் மனதையும் உடலையும் அழுத்த, தனிமையில் வேதனையை அனுபவிக்கும் பழுத்த இலைகள் எத்தனை எத்தனை!!





சமீபத்தில் எங்கள் குடும்ப நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். 80 வயதைத் தாண்டியவர் அவர். 30 வருடங்களுக்கு முன்பே மனைவியை இழந்தவர். இரண்டு மகன்களும் ஒரு மகளும் அவருக்கு. மகளுக்கு நல்ல இடத்தில் திருமணமாகி விட, மகன்களில் மூத்தவருடன்தான் இவர் இருக்கிறார். இரண்டாம் மகன் மன வளர்ச்சி குன்றியவர். மூத்த மகனுக்கு இரண்டு மகள்கள். மருமகள், மகன் இருவருக்குமே அதிகமான சர்க்கரை அளவு. 15 வருடங்களுக்கு முன் எங்கள் இல்லத்தில் கீழ்த்தளத்தில் குடியிருந்தார். விடியற்காலை மருமகள் எழுவதற்கு முன்பேயே, வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பார். இந்த வேலையை முடித்து விட்டு, மருமகளை எதிர்பார்க்காமல் தன் இளைய மகனுடன் தெருவோரத்திலுள்ள டீக்கடைக்கு நடந்து சென்று காப்பி குடித்து வருவார். சில சமயங்களில் சீக்கிரம் எழுந்து விட்டால், நானே காப்பி கொடுத்து விடுவேன். என்னை தான் பெறாத மகள் என்று அடிக்கடி சொல்லுவார். அதிக சர்க்கரையால் அவதியுறும் அவர் தன்னைப்பற்றி கவனிக்க முடியாமல், எப்போதும் அடுத்தவருக்காக ஏதாவது உதவி செய்து கொண்டே தான் இருப்பார். துணையின் அவசியம், அன்பு, தோழமை எல்லாமே வயது ஏற ஏற அதிகமாகி விடுகிறது. இவரோ, அந்தத் துணையும் இல்லாமல், தனது உடல் வேதனைகளையும் கவனித்துக்கொண்டு, வீட்டிலிருப்போரையும் கவனிக்க வேண்டிய நிலைமையிலிருக்கிறார்.

அவரின் மூத்த மகன் வேறு ஒரு திருமணமான பெண்ணிடம் தொடர்பு கொண்ட போது துடித்துப்போய் மகனை வெறுத்தே விட்டார். அந்தப் பெண்ணை அப்புறப்படுத்த சாம, தான, பேத, தண்டம் என்ற பல வழிகளையும் கையாண்டு அது வெற்றி பெற்றதும்தான் அமைதியடந்தார். அதற்கப்புறம் இவரின் மகன் அதிக அளவு சர்க்கரையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் அவரைச் சென்று பார்க்காமலேயே இருந்தார். அந்த அளவு வெறுப்பு மனதில் படர்ந்து விட்டது. வயதுக்கு வந்த இரு பெண்கள் வீட்டில் இருக்கையில் அவர்களின் தந்தை இப்படி தலை குப்புற விழுந்த விதம் அவரைப் பாதித்து விட்டது. அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் அந்தப் பெண்ணுக்காக தன் மகன் வட்டியுடன் வாங்கியிருந்த கடனை இவர் கஷ்டப்பட்டு அடைத்தார். தன் முதல் பேத்திக்கு நல்ல வரனாகப்பார்த்து திருமணம் செய்வித்து, பிரசவம்வரை பார்த்து விட்டார். தன் இரண்டாம் மகனுக்கு, தன் பென்ஷன் பணமும் சேர வேண்டி, அதற்கான உயிலும் எழுதி வைத்து விட்டார். ‘எப்போது அழைப்பு வருமோ, யாருக்குத் தெரியும்?’ என்று அடிக்கடி சொல்லுவார்.

சமீபத்தில், இவரின் முதல் மகன் மறுபடியும் படுக்கையில் விழுந்து விட்டார். வி.ஆர்.எஸ் வாங்க நிறைய முயற்சி செய்தும் அது முடியாமலேயே போய் விட்டது. அதற்கு தான் பட்ட சிரமங்களை என்னிடம் எடுத்துச் சொல்லி, ‘ வி.ஆர்.எஸ் கிடைக்காததும் ஒரு வகையில் நல்லது தான். வேலை பார்க்கும்போதே இறந்து போனால், என் மருமகளுக்காவது பென்ஷன் கிடைக்குமல்லவா?’ என்று வேதனையுடன் சொன்னபோது, இனம் புரியாத வலி ஒன்று மனதை ஆக்ரமித்தது.

இந்த வயதில் மகனின் அன்பும் மருமகளின் பணிவிடையும் பேரன் பேத்திகளின் கொஞ்சலும் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.. அவருக்கான தேவைகளை அக்கறையுடன் கவனிக்க அன்பான உறவுகள் அருகிலிருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக இவரின் வாழ்க்கை அமைந்து விட்டது.

ஊருக்கு வரும்போதெல்லாம், என்னால் முடிந்த அளவு அவருக்கு ஆறுதல் தரும் விதமாய் பேசிக்கொண்டிருப்பேன். அடிக்கடி சமைத்துக் கொடுப்பேன். தன் இரு கரங்களாலும் என்ன்னையும் என் கணவரையும் தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கும்போது, கோடிச் செல்வங்களும் இதற்கு ஈடாகாது என்று மனம் மகிழ்வடையும். ஆனால் அவரது வேதனைகள் எதால் தீரும்?

உதிரக்காத்திருக்கும் பழுத்த இலைகள் அனுபவித்துக்கொண்டிருக்கும் சோதனைகள் தொடர்கின்றன..

படங்கள் உதவி: கூகிள்





Wednesday 7 December 2011

முருங்கைக்கீரை அடை

சமையல் பகுதிக்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டதால் இந்த முறை ஒரு ருசிகரமான சமையல் குறிப்பை சமையல் முத்தாகப் படைக்கிறேன்.

பொதுவாக அடை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் வித விதமான அடைகள் இருக்கின்றன. கார அடையில் நிறைய வகைகள். முறுமுறுவென்ற அடை, மிருதுவான அடை, பருப்புக்கள் அதிகம் சேர்க்காத மரவள்ளி அடை, சர்க்கரை வள்ளி அடை, பரங்கி அடை இப்படி பல வகைகளில் அடைகள் செய்யும் விதங்கள் இருக்கின்றன.

அது போல‌ அடைக்குத் தொட்டுக்கொள்ள‌ ஒவ்வொருத்த‌ரின் ரசனை ஒவ்வொரு விதம். சிலருக்கு கெட்டியான தேங்காய்ச் சட்னி வேண்டும். சிலருக்கு காரமான மிளகாய்ச் சட்னி வேண்டும். சிலருக்கோ வெல்லமும் வெண்ணெயும் வேண்டும். உணவகங்களில் அடைக்கு அவியல்தான் காம்பினேஷன் என்கிறார்கள். சிலருக்கு எதுவுமே தொட்டுக்கொள்ளாமல் சும்மாவே சாப்பிடப்பிடிக்கும்.[எனக்கும் அப்படித்தான்]

நான் இங்கே கொடுக்கப் போவது முருங்கைக்கீரை அடை!




முருங்கைக்கீரை அடை

தேவையான பொருள்கள்:
துவ‌ர‌ம் ப‌ருப்பு= 1 க‌ப்
பாசிப்ப‌ருப்பு‍ = அரை க‌ப்
க‌ட‌லைப்ப‌ருப்பு=‍ 1 க‌ப்
உளுத்த‌ம்ப‌ருப்பு‍ =அரை க‌ப்
புழுங்க‌ல‌ரிசி‍ = அரை க‌ப்
ப‌ச்ச‌ரிசி= அரை க‌ப்
வ‌ற்ற‌ல் மிள‌காய்‍=8
சோம்பு=1 ஸ்பூன்
பொடியாக‌ அரிய‌ப்ப‌ட்ட‌‌  வெங்காய‌ம்=2
தேங்காய்த்துருவ‌ல்=அரை க‌ப்
க‌டுகு‍=1 ஸ்பூன்
நெய்‍= 1 ஸ்பூன்
எண்ணெய்=1 ஸ்பூன்
க‌றிவேப்பிலை=சிறிது
முருங்கைக்கீரை= 1 க‌ப்
தேவையான‌ உப்பு
செய்முறை:

ப‌ருப்பு வ‌கைகளையும் அரிசி வகைகளையும் தனித்தனியாக, போதுமான‌ நீரில் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் ஊற‌ வைக்க‌வும்.

முத‌லில் அரிசி வ‌கைக‌ளை மிள‌காய், சோம்பு சேர்த்து இலேசான‌ கொர‌கொர‌ப்புட‌ன் அரைக்க‌வும்.

பிற‌கு ப‌ருப்பு வ‌கைக‌ளைச் சேர்த்து கொர‌கொர‌ப்பாக‌ உப்புட‌ன் சேர்த்து அரைக்க‌வும்.

தேங்காய்த்துருவ‌ல், முருங்கைக்கீரை, வெங்காய‌ம் சேர்க்க‌வும்.

நெய், எண்ணெய் இர‌ண்டையும் சேர்த்து சுட‌ வைத்து க‌டுகு, காய‌ம், க‌றிவேப்பிலைக‌ளைத் தாளித்து அடை மாவில் கொட்டி க‌ல‌க்க‌வும்.

தோசைக்க‌ல்லில் மெல்லிய‌ அடைக‌ளாய் வார்த்து, பொன் முறுவ‌லாய் ஆகும் வ‌ரை வேக‌விட்டு எடுக்க‌வும்.

சுவையான‌ முருங்கைக்கீரை அடை சூடாக‌ இப்போது த‌யார்!!!













Sunday 27 November 2011

முத்துக்குவியல்கள்

இந்த‌ முறை முத்துக்குவியல்களில் ஒரு சுவாரஸ்யமான தகவல், சிந்திக்க வைத்த ஒரு சிறு கதை, ஆச்சரியப்பட வைத்த இரு செய்திகள் இடம் பெறுகின்றன.

முதலில் சிந்திக்க வைத்த சிறு கதை. இந்த மாதிரி ஒரு தந்தை அமைவது ஒரு குழ‌ந்தைக்கு எத்தனை பெரிய வரம்!

சிந்திக்க வைத்த முத்து:

மிகவும் கோபக்காரனாக இருந்தான் அந்த சிறுவன். அவனைக்கூப்பிட்டு கண்டித்த அவன் தந்தை, ஒரு வெள்ளை சுவரைக் காண்பித்து, நீ ஒவ்வொரு தடவை கோபப்படும்போதும் நான் இந்த சுவற்றில் ஒரு ஆணி அடிக்கப்போகிறேன் என்று சொன்னார். அதேபோல அந்த சிறுவன் கோபப்படும்போதெல்லாம் ஆணி அடித்து அந்த சுவரே ஆணிகளால் நிரம்பி விட்டது. அதைப்பார்த்த அந்த சிறுவன் குற்ற உணர்ச்சியால் மனம் திருந்தி தன் தந்தையிடம் வந்து ‘ இனி நான் கோபப்படமாட்டேன். நான் திருந்தி விட்டேன்’ என்றான். தந்தை அவனிடம் ‘ நீயே போய் அந்த ஆணிகளையெல்லாம் பிடுங்கி எடு’ என்றாராம். அவன் அந்த ஆணிகள் முழுவதையும் பிடுங்கி எடுத்த பிறகு சுவற்றைப் பார்த்தால் சுவர் முழுவதும் ஆணியின் தழும்புகள் இருந்தன. தந்தை வந்து பார்த்து விட்டு சொன்னார்,’ கோபமும் இது போலத்தான் மகனே! கோபத்தை நாம் நிறுத்தி விட்டாலும் அதன் விளைவுகளை இது போலவே அழிக்க முடியாது’ என்றாராம்!

                                                         ****************************

அடுத்தது ஒரு வித்தியாசமான தகவல். இன்றைய உலகின் விஞ்ஞான முன்னேற்ற‌த்தின் ஒரு துளி இது!                                      
விஞ்ஞான‌ முத்து:

மரவட்டையைத் தொட்டால் சுருண்டு கொள்ளும், எதிரி விலகி விட்டார் என்று தெரிந்த பிறகு தான் உடலை பழைய நிலைக்குக் கொண்டு வரும். இதை அடிப்படையாக வைத்து அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலத்தில் உள்ல டப்ஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் புழு ரோபோவை கண்டு பிடித்துள்ளார்கள். சுனாமி, வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றில் சிக்கிக்கொள்பவர்களை, அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இடிபாடுகளை அகற்றுவது எப்போதுமே கடினமாக இருந்து வருகிறது. இந்த மாதிரி சூழ்நிலைகளை புழு ரோபோ சுலமாக சமாளிக்கும். சிறிய துளை வழியே உள்ளே நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை தன் சிலிகான் ரப்பர் உடலுக்குள் வைத்து வெளியே கொண்டு வரும். முதல் கட்டமாக 4 அங்குல ரோபோவை உண்டாக்கி விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு


‘ கோ க்யூட் ரோபோட்’ என்று பெயர். மீட்புப்பணிகளில் ஈடுபடுகின்ற அளவில் பெரிய அளவு ரோபோக்களை உருவாக்கும் பணி இனி தொடங்கவிருக்கிறதாம்!           

                                                    ***********************

இந்த வித்தியாசமான தகவல் காலம் எந்த அளவு மாறுகிறது, சமுதாயப் பண்பாடுகளும் கலாச்சாரமும் எந்த அளவு சீர்கெடுகிறது என்பதைக் காட்டுகிறது!

வியக்க வைத்த முத்து:

மருமகள்களின் கொடுமை!

மாமியார்களின் கொடுமை மாறி மருமகள்கள் கொடுமை என்ற காலம் வந்து விட்டது. HELP AGE INDIAசார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 64 சதவிகித வழக்குகள் மருமகள்களின் கொடுமை காரனமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் 44 சதவிகிதம், ஹைதராபாத்தில் 38 சதவிகிதம், போபாலில் 30 சதவிகிதம், கலத்தா 23 சதவிகிதம், சென்னை 2 சதவிகிதம் என்று முடிவுகள் சொல்லப்பட்டுள்ளன!!!


Monday 21 November 2011

மழலை உலகம் மகத்தானது [தொடர்பதிவு]



“ நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே!
அவன் கருனையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே!”


இது ஒரு பழைய திரைப்படப் பாடல். உண்மையும்கூட அது தான். குழந்தையின் சிரிப்பும் மழலைப்பேச்சும் நிர்மலமும் தெய்வீகமானது. வானத்திலிருந்து விழும் பரிசுத்தமான மழைத்துளி போன்றது தான் குழந்தை! அந்த பனித்துளி பூமியில் கலக்கும்போது அதன் பரிசுத்தம் மறைந்து பூமியின் அத்தனை அசுத்தங்களுடன் கலந்து மனிதர்களாகி விடுகிறது. அது பரிசுத்தமாக வந்து விழும் நேரத்தில் பூமியில் படாமல் தாங்கி, நாமும் அந்த பரிசுத்ததை உள்வாங்கிக் கொண்டால் மனது எத்தனை சுகமாகிறது! சின்னக் குழந்தைகளை ரசிக்கும்போது, அவர்களுடன் பேசும்போது, பழகும்போது மனசின் அத்தனை ரணங்களும், அது நாள் வரை தாங்கிய எத்தனையோ மரண அடிகளும் எங்கோ கரைந்து போய், காற்றாய் மனது இலேசாகிறது. ஒரு குழந்தையின் அருகாமையே இத்தனை அழகான தாக்கங்களை உண்டு பண்ணும்போது, நாமும் பதிலுக்கு, ஒரு நன்றிக்கடன்போல், நம் அன்பாலும் பொறுமையாலும் தியாகங்களாலும் இதையும் விட அழகான தாக்கங்களை குழந்தைகளிடம் உண்டு பண்ண வேண்டாமா?

சகோதரி லக்ஷ்மி சொல்லியிருந்தது போல, அந்தக் காலக் கூட்டுக்குடும்பங்களில் பெரியவர்களுக்கு பணிவிடை செய்வதற்கும் வீட்டு நிர்வாகம், சமையல், மற்ற பொறுப்புகளை கவனிப்பதற்குமே நேரம் போதாமல் இருக்கும். இதில் குழந்தைகளின் அருகிலிருந்து சாதம் கொடுக்கக்கூட இயலாது போய் விடும். இந்த நிலைமையில் குழந்தையின் வளர்ப்பு பற்றி யோசிக்கவோ, அதன் எதிர்காலம் பற்றி கனவு காணவோ நேரம் எங்கிருந்து கிடைக்கும்? வீட்டிலிருக்கும் குழந்தைகளோடு பத்தோடு பதினொன்றாக ஒவ்வொரு குழந்தையும் அதுவே வளரும். அதுவும் எப்படி? பெரியவர்களின் கண்டிப்பு, கட்டுப்பாடு இதெல்லாம் சகோதரத்துவத்தின் மகிமை, பகிரும் உணர்வு, பெரியவர்களிடம் மரியாதை என்று பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்.

என் புகுந்த வீட்டில் என் கணவருடன் சேர்த்து எட்டு குழந்தைகள். வசதியான குடும்பமாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் மாடுகளை இவர்கள் தான் மேய்த்தாக வேண்டும். மாடு மேய்ப்பவர்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டு, மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும்போது, அப்படியே பாடப் புத்தகங்களையும் எடுத்துச் செல்லுமாறு என் மாமனார் சொல்வார்களாம். ‘ இந்தப் பயிற்சி தான் இந்த 65 வயது வரை என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது’ என்று என் கணவர் அடிக்கடி சொல்வார்கள். ஏதாவது தப்பு செய்தாலோ, அடுத்தவரைப்பற்றியோ, சகோதர்களைப் பற்றியோ புகார் சொன்னாலோ, உடனே அடிக்காமல் ஒருத்தர் தப்பு செய்தாலும் அத்தனை பேரையும் தோப்புக்கரணம் போடச்சொல்வார்களாம் என் மாமனார். அல்லது ‘கொக்குப்பிடி’ போடச் சொல்வார்களாம். அதாவது ஒரு கையால் ஒரு காலைப் பற்றிக்கொண்டு இடது காலை தூக்கி அதை இடது கையால் பிடித்துக் கொள்ள வேண்டுமாம். இந்த மாதிரி தண்டனைகளில் அடுத்தவரைப்பற்றிப் பேசக் கூடாது, சகோதரர்களுக்குள் சண்டை செய்தல் கூடாது, அனைவரும் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும் என்பது சின்ன வயதிலேயே மனதில் கல்லில் எழுத்தாய் பதிந்து போயிற்று என்பார்கள்.

இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் பெரும்பாலும் மறைந்து விட்டது. பெற்ற தாய்க்கும் தகப்பனுக்கும் சோறு போடுவதற்குக் கூட கணக்கு பார்க்கும் மனசு வந்து விட்டது. சுயநலங்களுக்கிடையே எதிர்காலக் குழந்தைகள் எப்படி வளரும் என்பதை நினைத்தாலே பகீரென்கிறது.

நிறைய பெற்றோருக்கு எதற்குமே நேரமிருப்பதில்லை. பொருளாதார மேம்பாட்டிற்காக பறப்பதிலும் தன் குழந்தைகள் பெரிய அளவு படிக்க வேண்டும் என்று கனவு காண்பதிலும் நிறைய நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பது கூட நேரமில்லாது வாழ்க்கை யந்திரகதியாய் நிறைய பேருக்கு கழிந்து செல்கிறது. ஆடி ஓடி சிரிக்கின்ற வயதில் குழந்தைகள் உலகம் கணினியிலும் தொலைக்காட்சியிலும் சுருங்கி விட்டது. இயற்கைக்காற்றும் தோட்டங்களைச் சுற்றி விளையாடுதலும் நிலாவைப் பார்த்து ரசிப்பதும் பாடுவதும் இன்றைய குழந்தைகளுக்கு கிடைக்காத வரங்கள்.

அவர்களுக்கு இன்றைக்கு கிடைக்கிற வசதிகள் மட்டும் உலகமில்லை, கிடைக்காத எத்தனையோ நல்ல விஷயங்கள் எந்த் அளவிற்கு உன்னதமானவை என்பதைப் புரிய வைக்க வேண்டும். சிறிய குழந்தைகளை கையாள்வதில் ரொம்பவும் கவனம் தேவை. குழந்தைகள் அனிச்ச மலர் மாதிரி. சட்டென்று முகமும் மனசும் சுருங்கி விடும். அவர்கள் வயதிற்கு நாம் மனரீதியாகச் சென்றால்தான் அவர்களை அழகாக அணுக முடியும்.




சின்ன வயதிலிருந்தே குழந்தைகளை ஒவ்வொரு விஷயத்திற்கும் பழக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும். குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடுவதோ, சூடாக விவாதம் செய்வதோ குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கும். எந்தக் குழந்தையுடனும் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்த வேண்டும். அது குழந்தைகள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குவதுடன், பெற்றவர்கள் மீது ஒரு வெறுப்பையும் வளர்க்க ஆரம்பிக்கும். நாம் குடும்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் மரியாதையுடன் பேசுவதையும் நடத்துவதையும் செய்யும்போது, குழந்தையும் மற்றவர்களை மரியாதையுடன் பேசுவதையும் நடத்துவதையும் நிச்சயம் பின்பற்றும். மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை அதன் ஒவ்வொரு வயதிலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித்தர வேண்டும்.

படிப்பிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, எதிர்காலத்திலும் சரி, வெற்றிகள், தோல்விகள் எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது அவசியம் என்பதைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். சின்ன சின்ன விஷயத்திற்குக்கூட குழந்தைகளை மனந்திறந்து பாராட்டுவது அவர்களுக்கு எதிலுமே உற்சாகத்தையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் வரவழைக்கும். குழந்தைகள் பெரியவர்களானதும் வீட்டு வேலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக பழக்க வேண்டும். அவர்களையும் பெரிய ஆளாக மதித்து வீட்டு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதும், யோசனைகள் கேட்பதும் அவர்களை வீட்டின்மீது பொறுப்புணர்வு மிக்கவர்களாக மாற்றும்.

குழந்தை வளர்ப்பைப்பற்றி ரொம்பவும் சாதாரணமாக, எளிமையாக, அசத்தலாக எம்.ஜி.ஆர் ஒரு பாடலில் நான்கே வரிகளில் சொல்லியிருப்பார்.

‘ அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்!
  தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்!
  இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்!
  பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்!! ’

அன்பென்பதும் அறிவென்பதும் அவ்வளவு சாதாரணமானதில்லை. தன்னலமற்ற, அத்தனை உணர்வுகளுக்கும் மேலான, முழுமையான அன்பு. உலகின் அனைத்து நற்செயல்களையும் நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்க்கும் அறிவு. இத்தகைய அன்பையும் அறிவையும் ஊட்டி வளர்க்க்கப்படும் எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை.

மழலை உலகைப்பற்றி எழுத எனக்கு இந்த தொடர் பதிவு வாய்ப்பளித்த சகோதரி லக்ஷ்மிக்கும் அவரைத்தொடர்ந்து இந்த தொடர்பதிவிற்கு அழைத்த சகோதரி சந்திர கெளரிக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன் இங்கே!!!

இந்தத் தொடர்பதிவிற்கு நான் அன்புடன் அழைப்பது:

1. பேரன்களுடன் கொஞ்சி விளையாடும் திரு.வை.கோபாலகிருஷ்ணன்.


2. மகளே தாயாய் மாறி பணிவிடை செய்த பாக்கியம் கிடைக்கப்பெற்ற    திருமதி. ராஜி [கற்றலும் கேட்டலும்]


3. குழந்தைகளைப் பிரிந்து வாடும் ஒரு தந்தையின் ஏக்கத்தை அருமையாக வெளிப்படுத்திய திரு.நாஞ்சில் மனோ.



படங்கள் உதவி: கூகிள்









Monday 14 November 2011

மருத்துவ உலகின் மறுபக்கம்-பகுதி-2

டாக்டர் சேதுராமனின் கருத்துக்களை, ‘போஸ்ட்மார்ட்டம்’ என்ற புத்தகத்திலிருந்து மீண்டும் தொடர்கிறேன்.

 எந்த மருத்துவ சிகிச்சைக்குமே, முக்கியமாக அறுவை சிகிச்சைகளுக்கு SECOND OPINION அவசியம் தேவை.

தற்போதெல்லாம் கர்ப்பப்பையை நீக்குவதென்பது சர்வ சாதாரணமாகி விட்டது. கர்ப்பப்பையையும் சில சமயங்களில் சினைப்பையையும் கூட நீக்குவதால் ஹார்மோன்கள் சுரப்பது தாறுமாறாகக் குறையும். இதனால் சில பெண்களுக்கு மார்பகப் புற்று நோய், தொடர் தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம், முதலியவை வருகின்றன. இதன் மோசமான பின் விளைவுகள் மிக நீளமானவை.

இதே போலத்தான் சிசேரியன் அறுவை சிகிச்சையும். பிரசவ நேரத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பு அபாய அளவில் இருந்தாலோ, குழந்தை சரியான POSITIONல் இல்லாமலிருந்தாலோ, கர்ப்பப்பை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தாலோதான் சிசேரியன் செய்ய வேண்டும். இந்த பரிசோதனைக்கு PARTOGRAM என்று பெயர். நிறைய மருத்துவர்கள் இந்த டெஸ்ட் செய்வதில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.


உங்கள் வீட்டில் யாரையாவது பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்க்கும்போது, அந்த மருத்துவ மனையின் சுகப்பிரசவ விகிதம் என்ன, சிசேரியன் விகிதம் என்ன என்று விசாரியுங்கள். எங்கு சுகப்பிரசவ விகிதம் அதிகமாக இருக்கிறதோ, அது மட்டுமே பாதுகாப்பான மருத்துவ மனை என்பதை முடிவு செய்யுங்கள். சில மருத்துவ மனைகளில் சிசேரியன் சிகிச்சைக்கு தூண்டும் விதத்தில் பேசி அந்த முடிவை நோயாளி எடுக்கும்வகையில் செய்வதற்கு செவிலித்தாய்களுக்கு கமிஷன் தரப்படுகிறது என்பது அதிர்ச்சியான நிஜம்!!

மருத்துவக் கண்ணோட்டத்தில் மரணம் இரு வகைகளாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன. உடல் சாவு முதல் வகை. இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புக்கள் தங்கள் வேலையை நிறுத்திக்கொள்ள, உடலின் ஒட்டு மொத்த செயல்பாடும் நின்று விடும். இது தான் உடல் சாவு. மூளை செயல்பட, இரத்தத்திலிருந்து அதற்குத் தேவையான பிராணவாயுவும் சர்க்கரையும் கிடைக்கிறது. இரத்த ஓட்டம் தடைப்பட்டால் மற்ற உறுப்புக்கள் 45 நிமிடங்கள் வரை தாக்குப் பிடிக்க முடியும். மூளையோ நான்கே நிமிடங்களில் செயலிழந்து விடும். இது தான் மூளைச் சாவு. மூளைச்சாவு நிலையிலிருக்கும் நோயாளிக்கு செயற்கைக் கருவிகள் மூலம் இதயம், நுரையீரல், சிறுநீரகம் எல்லாவற்றையும் செயல்பட வைக்க முடியுமென்றாலும் அதிக பட்சம் 6 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ வைக்க முடியும். மூளைச்சாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக நாட்கள் உயிர்வாழ முடியாது என்ற உண்மையை மறைத்து, அந்த நிலையிலேயே அவர்கள் முழுமையாக மரணம் எய்தும்வரை வைத்து பணம் பறிக்கின்றன சில மருத்துவ மனைகள். இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை வசூலிக்கிறார்கள்.

மருத்துவப்படிப்பிற்கு செலவான தொகையை மட்டுமல்ல, மருத்துவமனை கட்டியதற்கான செலவையும் மீட்டு கடன் தொல்லைகளிலிருந்து விடுபடவும் லட்சக்கணக்கான வட்டி கட்டுவதிலிருந்து மீளவும்கூட இன்றைக்கு சில தனியார் மருத்துவமனிகளில் சாதாரண பிரசவம் சிசேரியனாகவும், சாதாரண நெஞ்சு வலி தீவிர சிகிச்சைப்பிரிவிலும் மாற்றப்படுகின்றன!!



எந்த மருத்துவர் சரியானவரில்லை?

1. சாதாரண தலைவலியைக் கூட உயிரைக்கொல்லும் வியாதி என்று
    வர்ணித்து ஏகப்பட்ட மாத்திரைகள், ஊசிகள் என்று சிகிச்சைகள்
   தருபவர்கள்.

2. எல்லாம் தனக்கு மட்டும் தெரியும் என்பவர்.

3. தங்கள் சிகிச்சை வலி இல்லாதது, பக்க விளைவுகள் இல்லாதது, துரித
    நிவாரணம் தருவது என்று சொல்பவர்கள்.

4. நீங்கள் சொல்லும் எதையும் காதில் வாங்காத மருத்துவர்..

5. உடலின் எந்தப்பகுதியில் உங்களுக்கு உபத்திரவம் என்று
    சொல்கிறீர்களோ, அந்தப் பகுதியைத் தொட்டுக்கூட பார்க்காதவர்..

6. அதிகப்பட்ச நம்பிக்கை வாக்குறுதிகளைத் தருபவர்கள்.

7. ‘உங்கள் நோய் தீர இது தான் வழி’ என்று, என்று ஒரு காஸ்ட்லியான
     சிகிச்சையை, அதைத் தவிரவும் குறைந்த செலவில் வேறு சிறப்பான
     சிகிச்சைகள் முறைகள் இருந்தும் சொல்பவர்.

உங்களின் நோயை குணப்படுத்த நீங்கள் சந்திக்கும் மருத்துவரிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்:


1. எனக்கு என்ன நோய் என்பதை விளக்கமாகச் சொல்லுங்கள்.

2. எந்த அளவு இது சீரியஸானது இது?

3. இதற்கு சிகிச்சை பெறாமல் அப்படியே விட்டால் என்ன ஆகும்?

4. எனக்கு என்ன சிகிச்சை தரப்போகிறீர்கள்?

5. இதில் என்னென்ன அபாயங்கள், பக்க விளைவுகள் இருக்கின்றன?

6. இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமையும் வாய்ப்பு எத்தனை சதவிகிதம்?

7. இந்த சிகிச்சைக்கான முழு செலவு எவ்வளவு ஆகும்?

8. சிகிச்சைக்குப் பிறகு தொடர் பராமரிப்பிற்கு எவ்வளவு செலவாகும்?

டாக்டர் சேதுராமன் எழுதிய புத்தகத்திலிருந்து, அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு சில விஷயங்களை மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். .அவர் வலியுறுத்திக் கூறும் முக்கியமான விஷயம், ஒரு சாதாரண நோய்க்கு உடனே ஒரு மருத்துவமனையை நோக்கி ஓடி விட வேண்டாமென்பது. ஒவ்வொருத்தரும் தனக்கென, சாதாரண வியாதிகளான ஜுரம், உடம்பு வலிகள், வயிற்று வலி இவற்றுக்கெல்லாம் நன்கு பழகக்கூடிய ஒரு குடும்ப டாக்டரை வைத்துக்கொள்ள வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறார். தீவிர நோய்களுக்கு அவரே ஒரு நல்ல, அந்தந்த துறைக்கான மருத்துவரிடம் அனுப்பி வைப்பது தான் சிறந்த விஷயம் என்பதுடன் மருத்துவ மனைக்குச் செல்ல அலுப்பு பட்டுக்கொண்டோ, அவசரத்தேவைக்கோ, நாமாகவே மருந்துக்கடைகளுக்குச் சென்று மருந்துகள் கேட்டு வாங்குவது எந்த அளவு அபாயகரமானது என்பதையும் சொல்கிறார் விரிவாக!

நானும் எப்போதும் என் குடும்ப டாக்டரைத்தான் மற்ற பிரச்சினைகளுக்கு கலந்தாலோசிக்கிறேன்.

எது நமக்கு நல்லது என்பதை நாம் தான் நன்கு யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

படங்களுக்கு நன்றி: கூகிள்




Monday 7 November 2011

மருத்துவ உலகின் மறுபக்கம்!!

புதுவையிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 22 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, அங்கே மருத்துவக்கல்வித்துறையில் தலைவராக இருக்கும் டாக்டர் சேதுராமன், மருத்துவத் துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தி வந்ததுடன் அதற்காக சக டாக்டர்களுடன் இணைந்து ஒரு அமைப்பையும் ஏற்படுத்தினார். மருத்துவர்களின் வியாபாரத்தந்திரங்களை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய இவரின் TRICK OR TREAT என்ற புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைப்படித்ததனால் ஏற்பட்ட தாக்கம். ஆனந்த விகடன் ஆசிரியரால் 'போஸ்ட்மார்ட்டம்' என்ற மருத்துவ விழிப்புணர்வு தொடரை டாக்டர் சேதுராமனைக் கொண்டு 2003 ஆம் ஆண்டு விகடனில் எழுத வைத்தது.

மருந்துகள் தயாரிப்பைப்பற்றியும் கமிஷன் என்ற நஞ்சு இன்றைக்கு மருத்துவர்களிடையேயும், மருந்துக் கம்பெனிகளிடையேயும் எந்த அளவு கொடூரமாகப் பரவியிருக்கிறது என்பதை அவர் அருமையாக விவரித்திருக்கிறார்.

இதை நிறைய பேர்கள் படித்திருக்க மாட்டார்கள். முக்கியமாக இளைய தலைமுறையினர்.  இந்தப் புத்தகத்திலுள்ள சில அதிர வைக்கும் சில உண்மைகளை, மனதை உறைய வைக்கும் நிகழ்வுகளை அனைவருக்கும் எடுத்துச் சொல்வதே இந்தப் பதிவின் நோக்கம். மேலும் ஒரு குடும்ப வைத்தியரை நாம் எல்லோரும் வைத்துகொள்ளுவது எவ்வளவு அவசியம், என்பதையும் அந்த மருத்துவர் வழியாகவே ஒரு தரமான ஸ்கான் செண்டர், ஒரு தரமான ரத்த பரிசோதனை நிலையம் என்று செல்வது எந்த அளவு நல்லது என்பதையும் எல்லோருமே விழிப்புணர்வுடன் இருப்பது உடல் நலத்திற்கு எந்த அளவு முக்கியமானது என்பதையும் வலியுறுத்திச் சொல்வதற்காகவே இந்தப்பதிவை ஒரு கருவியாக நான் நினைக்கிறேன்.

இனி டாக்டர். சேதுராமன் அவர்களது கருத்துக்கள்......

சுமார் 3000ற்கு மேற்பட்ட வேதிப்பொருள்களை வெவ்வேறு கூட்டணியில் பயன்படுத்தித்தான் மருந்து தயாரிக்கிறார்கள். ஒரே மாத்திரைக்கு வேறு வேறு பெயர்களைச் சூட்டி பல கம்பெனிகள் விற்கின்றன. உதாரணத்திற்கு ஜுரத்திற்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால், குரோசின், தெர்மோநில், டோலோ, மெட்டாசின் என்ற பெயர்களில் வலம் வருகின்றன. இப்படி விற்கப்படும் மாத்திரைகள் 1 லட்சத்துக்கும் மேல்! மனித மூளையின் ஞாபக சக்திக்கு வரையறை இருக்கிறது. ஒரு அபாரமான ஞாபக சக்தி உடைய மருத்துவரால் கூட ஒரே சமயத்தில் 500 மாத்திரைகள் பெயர்களைத்தான் நினைவு வைத்துக் கொள்ள முடியும். மருத்துவரின் ஞாபகத்திலுள்ள TOP- 100. மாத்திரைகள் லிஸ்ட்டில் தங்களது தயாரிப்பும் இடம் பெற வேண்டுமென்று தான் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு வேலை செய்கிறது.  தங்கள் மருந்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுத வெளி நாட்டுக்கு பல வசதிகள் தந்து அழைத்துச் செல்வதிலிருந்து, கார், ஃப்ரிட்ஜ் தருவதிலிருந்து இந்த மருந்துக் கம்பெனிகள் போகாத எல்லையே இல்லை.





“இரண்டு நாளா தலைவலி' என்று யார் வந்தாலும் சி.டி.ஸ்கான் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்துப்பார்த்து விடலாம் என்று சில டாக்டர்கள் உடனேயே கூறுகிறார்கள். பொதுவாக இந்த ஸ்கான் வகைகளை எடுக்க 2500 லிருந்து 10000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இதிலிருந்து 20 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை டாக்டர்களுக்கு கமிஷன் போகிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இந்த கமிஷன் பிஸினஸ் ஒரு வைரஸ் மாதிரி மருத்துவ உலகத்தில் ஊடுருவியிருக்கிறது.
மனசாட்சியுள்ள நல்ல மருத்துவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் கமிஷன் என்ற வியாபாரத்தை அழிக்க போராடவே செய்கிறார்கள். அதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என்பது தான் நிஜம்.

இப்போதெல்லாம் நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவ மனைகள் ஏராளமாய் வந்து விட்டன. இவரின் நண்பர் அது மாதிரி ஒரு மருத்துவ மனையில் காலையில் சில மணி நேரங்களும் மாலையில் சில மணி நேரங்களும் பணியாற்றும் ' விஸிட்டிங் கன்சல்டண்ட்' ஆக பொறுப்பேற்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும் நிறைய நோயாளிகளுக்கு அங்குள்ள செகரட்டரியிடம் அப்பாயின்மெண்ட் ஆகியிருக்கிறது. இவர் போய் உட்கார்ந்தால் யாருமே வருவதில்லையாம். செகரட்டரியை அழைத்துக் கேட்டால் ' யாருமே வரவில்லையே சார்' என்கிறாராம். ஒன்றுமே புரியாமல் சக மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசிய போது அவர் கேட்டாராம், ' அந்த செகரட்டரியிடமும் அட்டெண்டரிடமும் பிஸினஸ் பேசி விட்டீர்களா?'

எதுவும் புரியாமல் இந்த டாக்டர் விழித்தபோது அவரே அதற்கு விளக்கமும் அளித்தாராம்.

‘உங்களிடம் appointment வாங்கிய நோயாளிகள் உங்களிடமே வைத்தியம் பார்க்க வரவேண்டுமென்றால், அவர்களிடம் நீங்கள் வாங்கும் பணத்தில் பத்து சதவிகிதத்தை அந்த செகரட்டரியிடமும் அட்டெண்டரிடமும் தரவேண்டும். அப்படி நீங்கள் ஒத்துழைக்கவில்லையென்றால் உங்களைப் போன்ற இன்னொரு ஸ்பெஷலிஸ்டிடம் நோயாளிகளை அனுப்பி விடுவார்கள்.’

மிரண்டு போன அந்த மருத்துவர் அடுத்த மாதமே அங்கிருந்து விலகி விட்டார்.

இவர் ஆதங்கப்படும் மற்றொரு விஷயம் மருத்துவர்கள் தாங்களே சொந்தமாக மருந்துக்கடை வைத்துக்கொள்வது. மருத்துவர்கள் சொந்தமாக மருந்துக்கடை வைத்து மாத்திரைகள் விற்பதை இந்திய மருத்துவக் கவுன்சில் தடை செய்திருந்தும் மருத்துவர்கள் பலர் இதை மதிப்பதில்லை என்றும் மருந்து ஆய்வாளரிடம் உரிய லைசென்ஸ் பெறாமல், விற்பனை வரியும் கட்டாமல் இப்படி குறுக்கு வழியில் வியாபாரம் செய்யும் மருத்துவர்களை பல ஊர்களில் பார்க்க முடிகிறது என்று வருத்தப்படுகிறார் இவர்.

சர்க்கரை வியாதிக்காக சிறுநீர் பரிசோதனை பல பரிசோதனை நிலையங்களில் செய்யும் விதத்தைப்பற்றி இவர் எழுதியிருப்பதைப் படிக்கும்போது பகீரென்கிறது.

பல laboratoryகளில் இன்று ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே சிறுநீரைப் பரிசோதனை செய்வதில்லையாம். 20 சாம்பிள்கள் வரும்வரைக் காத்திருந்து, 20 சாம்பிள்களிலிருந்தும் சிறிது சிறுநீரை எடுது, அவற்றை மொத்தமாய் ஒரு சோதனைக்குழாயில் ஊற்றி பரிசோதனை செய்வார்களாம். மொத்தமாக நெகடிவ் என்று வந்து விட்டால் பிரச்சினையில்லை. 20 பேருக்கும் நெகடிவ் என்று எழுதிக்கொடுத்து விடலாம். ஒரே கல்லில் 20 மாங்காய்கள்!! அதில் ஒரு வேளை பாஸிடிவ் என்று வந்தால் அந்த 20 சாம்பிள்களையும் ஐந்து ஐந்தாய் பிரித்து மறுபடியும் பரிசோதனை செய்வார்களாம். மறுபடியும் பாஸிடிவ் என்று காண்பிக்கும் பிரிவை மட்டும் தனித்தனியே எடுத்து பரிசோதனையை செய்வார்களாம். இந்தத் தவறால் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் ஒரு சர்க்கரை நோயாளி, தகுந்த சிகிச்சையைப் பெறும் வாய்ப்பை இழக்கிறார்.



இவரின் மாணவர்-பீகாரில் மருத்துவராக வேலை செய்தவர், அங்கே கிராமப்புறங்களில் எடுக்கும் எக்ஸ்ரே பற்றி சொன்னதை வேதனையுடன் எடுத்துரைக்கிறார்.

மின் வசதி இல்லாத கிராமப்புற நோயாளிகள் நகர்ப்புறம் வந்து மருத்துவர்களை சந்திக்கும்போது, அவர்களிடம் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லி பக்கத்து செண்டருக்கு அனுப்பி விடுவார்களாம். அங்கே ஆளுயரம் ஃபிரிட்ஜ் இருக்குமாம். அங்கு வேலை செய்பவர் அதை வேகமாகத் திறந்து மூடுவாராம் திறந்ததும் வரும் வெளிச்சத்தை மிரள மிரள பார்ப்பவர்களிடம் எக்ஸ்ரே எடுத்து முடிந்தாகி விட்டது என்று சொல்லி,, ஃபிரிட்ஜின் அடியில் தண்ணீர் தேங்குவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ட்ரேயில் ஏற்கனவே தயாராக போட்டு வைத்திருந்த பழைய எக்ஸ்ரே படம் ஒன்றைக் கொடுத்து அனுப்புவாராம். இதை வைத்து சிகிச்சை செய்வதாக அந்த மருத்துவரும் கூறுவாராம். அந்த எக்ஸ்ரே படம் அடுத்த சுற்றுக்கு உடனேயே அந்த செண்டருக்குத் திரும்ப வந்து விடுமாம். எத்தனை ஏமாற்று வேலை இது! .

மேலும் தொடர்கிறது.. .. .


படங்களுக்கு நன்றி: கூகிள்

Sunday 30 October 2011

ரசனைக்கு எல்லையில்லை!!!

சமீபத்தில் நான் ரசித்த சிலவற்றை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் முத்து ஒரு குட்டிக்கதை.

எந்த ஒரு விஷயத்திற்கும் பல கோணங்கள் உண்டு. தேர்ந்தெடுக்கும் கோணத்தைப்பொறுத்தே வாழ்க்கை வெற்றியாகவும் தோல்வியாகவும் அமைகிறது. ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பழங்கால மொழி தான் ஞாபகம் வருகிறது இந்தக்குட்டிக்கதையை படிக்கும்போது. இனி கதை.. .. ..


மிகப்பெரிய ஷூ கம்பெனி ஒரு கிராமத்திற்கு தன் ஆட்கள் இரண்டு பேரை அனுப்பி, அங்கே ஷூ விற்பனை செய்வதற்கான வாய்ப்பு எப்படி இருக்கின்றன என்பதை அறிந்து வருமாறு சொல்லி அனுப்பியது.

சில நாட்கள் கழித்து, முதலாம் ஆள் ‘ இங்கே இருப்பவர்கள் யாரும் ஷூ அணிவதில்லை. இங்கே நம் ஷூக்கள் விற்பனையாவது கஷ்டம்’ என்று கம்பெனிக்குத் தகவல் அனுப்பியிருந்தான்.

இரண்டாவது ஆள், ‘ இங்கே யாருமே ஷூ அணிவதில்லை. அனைவருக்கும் காலணியின் முக்கியத்துவத்தை உனர்த்தினால் அனைவரையுமே நம் வாடிக்கையாளர்களாக ஆக்கி விடலாம்’ என்று தகவல் அனுப்பியிருந்தான்.

நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தே வாழ்க்கை எளிதாகவும் கடினமாகவும் தெரிகிறது’!

இந்த இரண்டாவது முத்து ஒரு மாத இதழில் படித்து வியந்த செய்தி. இதனால் கோழியின் விலையும் எதிர்காலத்தில் உயர்ந்து விடுமோ?


பெட்ரோல், டீசல் இவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அவற்றால் வெளிப்படும் புகையால் சுற்றுப்புறச் சூழலும் மாசு படுகிறது. இதற்கு மாற்று எரிபொருளைக் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டே வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கோழி மற்றும் மாட்டு இறைச்சியிலுள்ள கொழுப்பிலிருந்து சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான, விமானத்திற்கான எரிபொருளைக் கண்டு பிடித்துள்ளனர். முதற்கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல் திறன், பாதுகாப்பு, அதன் நச்சுத்தனமை என்று எல்லா சோதனைகளிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது. விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

மூன்றாவது முத்து நான் ஒரு வார இதழில். மிகவும் ரசித்துப் படித்த ஒரு வாசகம். எத்தனை தன்னம்பிக்கையான வாசகம்!

இது ஒரு ஆட்டோவின் பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம்:

நம்மால் முடியாதது யாராலும் முடியாது.

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!




Monday 24 October 2011

இனிய தீபாவளிக்கு அன்பு வாழ்த்துக்களும் சுவையான இனிப்பும்!!

அன்பார்ந்த தோழமைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!








தீபாவளிக்காக, பதிவில் போட, வழக்கமான இனிப்புப்பலகாரங்களான பாதுஷா, லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாக் தவிர்த்து, என்ன இனிப்பு வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்தபோது காரட் அல்வா, அதுவும் மைக்ரோவேவ் அவனில் செய்யலாம் என்று தோன்றியது. இதற்கு ஆகும் நேரம் ஏழே நிமிடங்கள் தான்! நெய்யும் குங்குமப்பூவுமாக காரட் அல்வா இதோ உங்களுக்கு!!



மைக்ரோவேவ் காரட் அல்வா

தேவையான பொருள்கள்:

காரட் துருவல்- 2 கப்
நெய்- 2 மேசைக்கரண்டி
சீனி- 5 மேசைக்கரண்டி
பால் பவுடர்- 3 மேசைக்கரண்டி
ஏலக்காய்-6
குங்குமப்பூ- சில இழைகள்
அலங்கரிக்க சீவிய சில பிஸ்தா இழைகள்

செய்முறை:

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அதன் மீது காரட் துருவலையும் போட்டு 2 நிமிடங்கள் HIGH-ல் சமைக்கவும்.

பிறகு பாத்திரத்தை வெளியே எடுத்து, ஒரு கரண்டியால் நன்கு கலக்கி மறுபடியும் 2 நிமிடம் HIGH-ல் சமைக்கவும்.

சீனியை ஏலத்துடன் பொடிக்கவும்.

பாத்திரத்தை வெளியே எடுத்து, சீனி, பால் பவுடர், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கி மறுபடியும் 2 நிமிடங்கள் HIGH-ல் சமைக்கவும்.

மறுபடியும் பாத்திரத்தை வெளியில் எடுத்து நன்கு கிளறி, மீதமுள்ள நெய்யைச் சேர்த்து 1 நிமிடம் HIGH-ல் சமைக்கவும்.

மொத்தத்தில் ஏழு நிமிடங்களில் நெய் மணக்கும் சுவை மணக்கும் காரட் அல்வா தயார்!!

வாழ்த்துப்படங்களுக்கு கூகிளுக்கு நன்றி!!


Sunday 16 October 2011

என் அருமை அப்பா!


சில மாதங்களுக்கு முன் ஒரு மாத நாவலில் பின் பகுதியில் நான் ரசித்துப் படித்த ஒரு அழகான சிந்தனையை, நிதர்சனத்தைத்தான் இன்றைய பதிவாக நான் இங்கே வெளியிடுகிறேன். போகிற போக்கில் படிக்கிற விஷயமில்லை இது. இன்றைய வாழ்வின் எதார்த்தம் இது தான் . ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அனுபவிக்கிற, நினைக்கிற விஷயங்கள் தான் இவை. இறுதியில் வருகின்ற வார்த்தைகளை நான் மிகவும் ரசித்தேன்.


ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4 வயதில்-

என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-

என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில்-

என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-

ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-

என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.




16 வயதில்-


அப்பா அந்த காலது மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில்-

அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-

அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

25 வயதில்-


என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-

என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-

ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45 வயதில்-

குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ?

50 வயதில்-

எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-

என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60 வயதில்-

என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது. நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்.


புகைப்படத்திற்கு நன்றி: கூகிள்

Monday 10 October 2011

நெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி- பகுதி-2

“வம்புலாஞ்சோலை மாமதிள் தஞ்சை”
என்று திருமங்கையாழ்வாரும்,

“இஞ்சி சூழ் தஞ்சை”
என்று கருவூர்த்தேவரும்,

“தஞ்சை மாநகர்” என்று
அருணகிரி நாதரும்

போற்றிப்பாடிய தஞ்சாவூரைப்பற்றி மேலும் இங்கே தொடர்கிறேன்.

சோழர் காலத்தில் செழித்து சிறந்திருந்த தஞ்சை, பிற்கால சோழ மன்னன் குலோத்துங்கன் மதுரைக்கும் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனுக்கும் இழைத்த தீங்குகளால், திரும்பவும் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் முற்றிலுமாய் அழிக்கப்பட்டது. அதன் பின் மாலிக் காபூர் படையெடுப்பால் முழுவதுமாக தஞ்சை சூறையாடப்பட்டது. நாயக்க மன்னர்களும் மராட்டிய மன்னர்களும் மீண்டும் தஞ்சையை அழகிய, சிறந்த நகரமாக உயிர்ப்பித்தார்கள்.

தஞ்சை நகரம்

நான்கு திசைகளிலும் நான்கு பெரிய ராஜ வீதிகள், அதனை சுற்றி நாலு அலங்கங்கள், அதற்குள் குறுக்கும் நெடுக்குமாக அளவில்லா சந்துக்களும் அடங்கியது தான் பழைய தஞ்சை நகரம். அனைத்து திசைகளிலும் முக்கியமாய் தஞ்சை மருத்துவக்கல்லூரி தோன்றிய பின்னர் தஞ்சை நகர் நிறைய விரிவடைந்து விட்டது.

சோழர்களுக்குப்பிறகு நாயக்க மன்னர்களும் அதன் பின் மராட்டிய மன்னர்களும் தஞ்சையை ஆண்டதால் இன்றும்கூட பழைய தஞ்சையின் சில தெருக்களின் பெயர்களும் சந்துக்களின் பெயர்களும் அவர்கள் பெயரில் விளங்குகின்றன.

தஞ்சையில் ராஜராஜ சோழன் சதுக்கம், ராசேந்திர சோழன் சதுக்கம், தொல்காப்பியர் சதுக்கம், நக்கீரன் சதுக்கம் ஆகியவை தஞ்சையிலிருந்து பிரியும் குடந்தை, நாகை, பட்டுக்கோட்டை போன்ற முக்கிய சாலைகளின் சந்திப்புகளின் பெயர்களாகத் திகழ்கின்றன.

தஞ்சையின் நடுவே புது ஆறு எனச்சொல்லப்படும், கல்லணையிலிருந்து தஞ்சை பாசனத்துக்காக வெட்டிய கால்வாயான கல்லணைக்கால்வாயை பல நிலைகளில் பார்க்கலாம்.

இன்று தஞ்சையில் மருத்துவக்கலூரி ஒன்றும் இருக்கிறது. அதன் காரணமாக, எந்த நகரிலுமே இல்லாத அளவு மருத்துவர்கள் இங்கிருப்பதாக, முக்கியமாக தெற்கு அலங்கம் முழுவதும் பல்துறை மருத்துவர்கள் நிறைந்திருப்பது கின்னஸ் புத்தகத்திலும்கூட இடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

ஆண்களுக்கென்று சரபோஜி கல்லூரி, பெண்களுக்கென்று குந்தவை நாச்சியார் கல்லூரி, சிறுசிறு தொழில் கல்லூரிகள், தஞ்சைக்கு வெளியே மணியம்மை தொழிற்பள்ளி, மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என்று கல்வி வளர்ச்சிக்கான கல்லூரிகள் இருக்கின்றன.

பரத நாட்டியம்



பரத நாட்டிய பல நிலைகளை ராஜராஜ சோழன் தான் முதன் முதலாக கல்லில் வடித்தான் என்று சொல்லப்படுகிறது. ‘சதிர்’ என்று சொல்லப்பட்ட தேவதாசி குலத்திற்கென்றே சொந்தமாகக் கருதப்பட்ட நடனம், பின்னாளில் ‘தஞ்சை நால்வர்’ என்ற அறிஞர்களால் உருமாற்றப்பட்டு ‘பரத நாட்டியமாக’ ஆடப்பட்டது. பிறகு வந்த நடன வல்லுனர்கள் வழுவூர் ராமையா பிள்ளை, பாலசரஸ்வதி, திருவையாற்றைச் சேர்ந்த ருக்மணிதேவி அருண்டேல், பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம்-இவர்களால் பரத நாட்டியம் சிறப்பான நிலையை அடைந்தது.

தஞ்சை பெரிய கோவில்:

தஞ்சை பெரிய கோவில்
ஆயிரம் ஆண்டுக்கு முன் மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சையில் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் எனும் பெரிய கோவிலை கி.பி., 1006ல் தொடங்கி, 1010 ல் கட்டி முடித்தான். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் சோழர்கால தமிழகத்தின் வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், நடனம், இசை ,சமுதாயச் சிறப்புகள், இறைக் கொள்கை ஆகியவற்றை நமக்கு பெருமிதத்துடன் தெரிவிக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தன்னிடம் தஞ்சமடைய வருபவர்களை வரவேற்கும் முகத்துடன் இக்கோவிலின் முதல் வாயில் ‘அடையாத வாயில்’ என்ற பெயருடன் திறந்தே இருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதியிருக்கும் பதிவுகளை இங்கே பார்க்கவும்.

சமயம் வளர்த்த தஞ்சை

தஞ்சையில் எல்லா சமயத்தவர்களுக்கும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. சைவ, வைணவம் தவிர, கிறிஸ்தவர்களின் திருச்சபைகள், கத்தோலிக்கர் தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், தர்க்காக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இது தவிர, கரந்தையில் ஆதீஸ்வரர் என்ற சமணக்கோவில் உள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் கருவறையின் தென்பாகத்திலும் கேரளாந்தகன் திருவாயிலிலும் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இவை தஞ்சையில் ஒரு காலத்தில் புத்த மதமும் செழித்திருந்தது என்று தெரிவிக்கிறது.

தமிழ் வளர்த்த தஞ்சை:

பழங்கால இலக்கியங்களில் ‘கருந்திட்டைக்குடி’ என்று அழைக்கப்பட்ட, தற்போது ‘கருத்தட்டாங்குடி’ என்று அழைக்கப்படும் ‘கரந்தை’ நகரம் தஞ்சைக்கு வெளியே வட திசையில் இருக்கிறது. இந்தக் கரந்தையில் தமிழ்ச்சங்கம் 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்லாண்டுகளாக தமிழ்த்தொண்டாற்றி வருகிறது. இதில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார் தமிழை வளர்க்க அரும்பாடு பட்டார். தொல்காப்பியத்திற்கு மறுப்புரை எழுதிய தமிழ்ப்புலவர் சோமசுந்தரம் பிள்ளை என் தந்தை வழி பாட்டனார். அவருடைய ஓவியம் இன்றளவும் கரந்தை தமிழ்ச்சங்கத்தில் உள்ளது.  தமிழ்ப்புலவர் பவானந்தம் பிள்ளை பழைய சுவடிகளை தேடிப்பிடித்து அச்சேற்றிய பெருமைக்கு உரியவர்.
ராவ்சாகிப் ஆப்ரகாம் பண்டிதர் 1400 பக்கங்கள் கொண்ட ‘கருணாமிர்த சாகரம்’ என்ற பெரிய இசை நூலை வடித்தவர். இவர் பெயரில் தஞ்சை கீழவாசல் அருகே ஒரு சாலையே உள்ளது. இன்னும் தமிழ் அறிஞர்கள் வேதநாயகம் சாஸ்திரி, ராவ்பகதூர் சீனிவாசபிள்ளை, விபுலானந்த அடிகள், சிவக்கொழுந்து தேசிகர் போன்றவர்கள் தங்கள் தமிழாற்றலால் கரந்தை தமிழ்ச்சங்கத்திற்கு பெரும் தொண்டாற்றியவர்கள்.

தமிழ்ப்பல்கலைக் கழகம்


தமிழ்ப்பல்கலைக் கழகம்
 இப்பல்கலைக்கழகம் 1981-ல் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே தமிழுக்கென்று ஆரம்பித்த ஒரே பல்கலைக்கழகம் இது தான் என்று சொல்லப்படுகின்ற்து.



தமிழ் பல்கலைக்கழக முகப்பு
இங்கே இயல் இசை நாடகம் பயிற்றுவிக்கப்படுகின்றன. மொழி, இலக்கிய ஆய்வுகள் செய்வது, கல்வெட்டுக்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக வெளியிடுவது, அந்நிய நாட்டினர்க்கு தமிழ் கற்பித்தல் ஆகிய அரும்பணிகளை இந்த தமிழ்ப்பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

தென்னக பண்பாட்டு மையம்:

கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.

தஞ்சை அரண்மணை



அரண்மணை தர்பார் ஹால்
 தஞ்சை அரண்மணையின் நுழைவாயில் கிழக்கு ராஜவீதியில் உள்ளது. ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய கலையழகுள்ள கட்டடங்கள் காணப்படுகிறது. இவை நாயக்க மற்றும் மராத்திய மன்னர்களால் கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய முற்றம் உள்ளது.. பெரிய முற்றத்தின் வழி சென்றால் அங்கு பல தூண்களை உடைய பெரிய கூடம் உள்ளது.



கண்காணிப்பு கோபுரம்

தெற்கு பக்கத்தில் 190 அடி உயரமுடைய எட்டு அடுக்குகளை உடைய கூட கோபுரம் உள்ளது. இது கண்காணிப்பு கோபுரம் என அழைக்கப்படுகிறது. மன்னர்களின் படைக்கல கொட்டிலாக இந்த இடம் இருந்தது.


அருகே உயர்ந்த கோபுரம்

அருகே உயர்ந்த கோபுரம் ஒன்றும் உள்ளது. இவற்றின் மேலேறி நாயக்க மன்னர்கள் திருச்சி ஸ்ரீரங்கப் பெருமானை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையில் நாயக்க, மராத்திய மன்னர்களின் தர்பார் ஹால் மற்றும் ராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவை பார்க்கத் தகுந்த இடங்களாகும் மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகளின் உறைவிடமாகவும் உள்ளன. இங்குள்ள கலைக்கூடத்தை நிறுவியவர் தமிழறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானும் கலெக்டராக இருந்த திரு. பழனியப்பனும்தான் என்று ஆய்வாலர்கள் தெரிவிக்கிறார்கள்..

சரஸ்வதி மஹால்




சோழர் காலத்தில் ‘ சரஸ்வதி பண்டாரம்’ என்று உருவாக்கப்பட்ட நூல் நிலையமே, மராட்டியர் காலத்தில் ‘சரஸ்வதி மஹால்’ என்று மாற்றப்பட்டது. இங்குள்ள நூலகத்தில் ஏறத்தாழ 4500 பழமையான புத்தகங்கள் உள்ளன. 30000க்கு மேல் ஓலைச்சுவடிகள் உள்ளன. அவை அறிஞர்கள், மன்னர்களால் கையொப்பமிட்டு வந்தவை என்று சொல்லப்படுகிறது. இதில் 300 ஆண்டுகள் நாயக்க மன்னர்களாலும் மராட்டிய மன்னர்களாலும் சேகரிக்கப்பட்ட எண்ணற்ற ஓலைச்சுவடிகள் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் தமிழிலும் மராட்டிய மொழியிலும் உள்ளன.

சிவகங்கை பூங்கா

பெரிய கோவிலின் வடக்கே சிவகங்கை பூங்கா உள்ளது. 
பூங்காவின் உள்ளே
பூங்கா வழியே தெரியும் பெரிய கோவில் கோபுரம்

பூங்காவின் முகப்பு



பூங்காவிற்கருகே சிவகங்கைக் குளமும் நடுவேயுள்ள சிறு கோவிலும்


ஆயிரம் ஆண்டுகள் பழமையான யானைக்கால் மரம்

1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இங்குள்ளது. சுற்றிப்பார்க்க சிறு ரயில் வசதியும் உள்ளது. பொழுது போக்க ஒரு உகந்த இடமாக பலருக்கும் விளங்குகிறது.

தஞ்சை அருகே..

தஞ்சையிலிருந்து 12 கி.மீ தூரமுள்ள திருவையாறு சாஸ்திரீய இசைக்குப் புகழ் பெற்றது. தஞ்சைக்கும் திருவையாற்றிற்கும் இடையே காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி என்ற ஐந்து ஆறுகள் ஓடுவதால் அவற்றைச் சார்ந்த நகரம் திரு+ஐயாறு= திருவையாறு எனப்பெயர் பெற்றது.

தஞ்சைக்கு வெளியே அனைத்து திசைகளிலும் மாணிக்க வாசகர் , அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ்பெற்ற கோவில்கள் சூழ்ந்த நகரம் தஞ்சை! நவக்கிரகங்களுக்கு தனித்தனிக் கோயில்களும், சரஸ்வதிக்கென்று தனிக்கோவிலும் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே உள்ளன.

கலையழகு மிகுந்த தஞ்சையை நீங்களும் ஒரு முறை பார்க்க வாருங்களேன்!

இந்தத் தொடர் பதிவை



சகோதரர் ரமணி [தீதும் நன்றும் பிறர் தர வரா]

சகோதரி மஞ்சுபாஷிணி [கதம்ப உணர்வுகள்]

இருவரையும் தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


[அரண்மணை தர்பால் ஹால், பரத நாட்டிய புகைப்படங்களுக்கு நன்றி: கூகிள்]









Monday 3 October 2011

நெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி!!!

இது என்னுடைய நூறாவது பதிவு!


பின் தொடர்ந்தும் அருமையான பின்னூட்டங்கள் மூலமும் எழுதுவதற்கான உத்வேகத்தையும் ஆர்வத்தையும் தொடர்ந்து அளித்து வரும் அன்புத் தோழமைகளுக்கு என் இதயங்கனிந்த எண்ணிலா நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன்!



*********************


சகோதரி ஸாதிகா ‘ என் ஊர் ‘ என்னும் தொடர்பதிவில் பங்கேற்குமாறு முன்பு கேட்டிருந்தார்கள். என்னுடைய நூராவது பதிவாக என் ஊரைப் பற்றி எழுதுவதில் பெருமிதமடைகிறேன்.

சோணாடு சோறுடைத்து என்று புகழ் பாடப்பட்ட சோழ நாட்டில் பல நூறு ஆண்டுகள் தலைநகராய் இருந்த தஞ்சாவூர் தான் என்னுடைய ஊர்.

பெயர்க்காரணம்:

தஞ்சன் என்னும் அசுரனை சிவபெருமான் வதம் செய்தபோது, தன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட வேண்டுமென அசுரன் வேண்டியதால் இவ்வூர் தஞ்சாவூர் என்றானது என்று சொல்லப்படுகிறது. சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்திலும்கூட மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இந்த நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.என்பது வியப்புக்குரியது!

தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள் என்றும் பழந்தமிழர் வரலாற்றில் கூறப்படுகின்றது. . “தண்+ செய்’ என்று பதம் பிரித்து இதற்கு பொருள் சொல்லப்படுகிறது.

கலைகள்

தமிழகக் கலைகளில் தஞ்சைக் கலைகளுக்குத் தனிச் சிறப்புண்டு.
இதைப் போலவே தஞ்சைக் கலைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அளவிட முடியாது. இதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் வீணைகள், தலையாட்டிப் பொம்மைகள், ஐம்பொன் சிலைகள், தேர்ச் சிற்பங்கள், தஞ்சாவூர்த் தட்டுகள் இவற்றின் கலை நேர்த்தியைக் கூறலாம்.



தஞ்சாவூருக்குத் தெற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்துள்ள. நாட்டரசன் கோட்டையில் வீணைகள்
சிறப்பாக உருவாக்கப் படுகின்றன. வீணை செய்யப்படும் பிற ஊர்களில் வீணையின் பாகங்கள் தனித்தனியே செய்யப்பட நாட்டரசன் கோட்டையில் மட்டும் ஒரே கலைஞரால் முழு வீணையும் செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். வீணை செய்யும் கலைத்தொழில் பல காலமாகப் பரம்பரை பரம்பரையாக இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலா, வாகை மரங்களைக் கொண்டு வீணைகள் செய்யப் படுகின்றன.

ஏகாந்த வீணை, ஒட்டு வீணை என்ற இருவகையான வீணைகள்
தச்சர்களால் செய்யப்படுகின்றன. தஞ்சையில் வீணை செய்வதில் தேர்ச்சி மிக்க கைவினைஞர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழகக் கைவினைக் கலையின் பெருமை சொல்லும் தஞ்சாவூர் வீணைகள் வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.

மிருதங்கப் பானை, உடுக்கை, நாகஸ்வரம், புல்லாங்குழல், உடுக்கை, தாளப் பானை (கடம்) என்று இசைக் கலையோடு தொடர்புடைய பல கைவினைக் கலைப் பொருட்களும் இங்கு உருவாக்கப் படுகின்றன. தஞ்சை சிவகங்கைப்பூங்காவின் வாயிலருகே வீணைகள் இழைத்துச் செய்யப்படுவதை இன்றும் நேரில் பார்க்கலாம்.

தென்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியில் நெல்மணி, ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு அழகுற மாலை தொடுக்கின்றனர். தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர் தட்டு, தூபக்கால் (விளக்கு) , பல்வேறு வடிவங்களில் அமைந்த வெண்கலத்தாலான பாக்கு வெட்டிகள், மீன் வடிவப் பல்லாங்குழிகள், வெற்றிலைப் பெட்டிகள், ஆபரணப் பெட்டிகள், உண்டியல், அகல் விளக்குகள் போன்றவையும் தஞ்சையில் பிரசித்தி பெற்றவை. உலோகங்கள் செய்வதிலும் தஞ்சை புகழ் பெற்று விலங்குகிறது. தஞ்சைக்கருகிலுள்ல நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள் விற்கும் கலையுலகமாய் விளங்குகிறது.

மேற்கத்திய இசைக்கே உரித்தான வயலினைத் தமிழிசைக்கு ஏற்ப மாற்றியமைத்து முதன்முதலில் உபயோகித்தது தஞ்சையில்தான். மன்னர் சரபோஜி காலத்தில் கிளாரினெட் இசை, பாண்டு வாத்திய இசை முதன்முதலாக தமிழகத்தில் தஞ்சையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. லாவணிக்கச்சேரி உருவானதும் இங்கே தான். மகாராஷ்டிரத்திலிருந்து தஞ்சையில்தான் முதன்முதலாக ஹரிகதாகாலட்சேபம் அறிமுகம் செய்யப்பட்டது.  தஞ்சையின் குறுக்குச் சந்துகள் மிகப் பிரபலம். இங்கே தான் நாடகக் கலைஞர்கள், பொய்க்கால் குதிரை நாட்டியக்காரர்கள் வசிக்கிறார்கள்.

தொடர்கிறது.. .. ..
படங்களுக்கு நன்றி: கூகிள்



Sunday 25 September 2011

எது நியாயமான தீர்ப்பு?

“என்ன நடேசா, ஊருக்குக் கிளம்புகிறாயே, உன் அப்பாவுக்கு என்ன வாங்கப் போகிறாய்?”

ஆட்கள் வேலை செய்வதை கவனித்து நடந்து கொண்டிருந்த
நான் சட்டென்று நின்றேன். தொழிலாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பக்கத்து அறையிலிருந்து தான் அந்த கேள்வி வந்தது. நடேசன் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்னையும் பற்றிக்கொண்டது.

“ அவருக்கா? இரண்டு விஸ்கி பாட்டில்கள் தான் வாங்கிப்போக வேண்டும்.”

என் மனதில் தீக்கங்குங்கள் விழுந்த மாதிரி தகித்தது.

“ என்னடா இப்படி சொல்கிறாய்? இந்த வேலையே அவர் முதலாளியிடம் சொன்னதால்தானே கிடைத்தது?”

“ அவரால் ஒன்றும் இந்த வேலை கிடைக்கவில்லை. என்னைப் பார்த்து, என் திறமையைப் பார்த்து வேலை கொடுத்தார்கள்”

அதிர்ந்து போன மனது மெல்ல சம நிலைக்கு வந்தது. ஆனாலும் கசப்பு மட்டும் தொண்டையை விட்டு நீங்காமலேயே இருந்தது.. அதற்கப்புறம் சில மணி நேரம் ஆகியும்கூட சரியாகவில்லை.

நடேசன் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். உடம்பில் சதை போட்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் தன் தந்தையுடன் என்னிடம் வேலைக்காக வந்து, பயந்த முக பாவங்களுடன் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த தோற்றம் நினைவுக்கு வந்தது. அந்த பய பக்தியோ, மருளும் முகமோ இன்றில்லை. சம்பாதிக்கும் காசும், அந்தக் காசில் ஊறிய உடம்பும், அந்த உடம்பினால் வந்த அலட்சியமும் அவனை நிறையவே மாற்றியிருந்ததை உணர முடிந்தது. இவன் என்றில்லை, இந்தப் பாலைவனத்துக்கு வேலை தேடி அலையும் எல்லோருமே சொல்லும் முதல் வார்த்தையே, ‘ எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன். எப்படியாவது துபாய்க்குக் கூட்டிக்கொண்டு போங்கள்’ என்பது தான். காசும் உடம்பும் நன்றாகத் தேறியதும் ‘ உங்களால்தான் நான் இங்கு வந்தேனா? எனக்குத் திறமையிருந்தது, உழைத்து முன்னுக்கு வந்தேன்’ என்ற வசனத்தை இங்கு பரவலாகக் கேட்கலாம். உலகத்தில் வேறெந்த இடத்தையும் விட, இந்தப் பாலைவனத்தில் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் அதிகம்!

இவனுடைய அப்பா ராமன் என் முன்னாள் மாணவராக இருந்தார். கிராமத்தலைவரின் மகன் அவர். நல்லொழுக்கங்களும் பணிவுமாய் இருந்தவர் அவர். காலச் சுழற்சியில் அவரைப் பல வருடங்களாக நான் பார்க்க முடியாமல் போயிருந்தது. பார்க்காமலிருந்தாலும் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட செய்திகள் எதுவுமே நன்றாக இல்லை.
குடிபோதையில் நிலை தடுமாறிக்கொண்டிருந்த அவரைப் பார்க்கவும் பிறகு விருப்பமில்லாமல் போயிற்று!

அப்புறம் சில வருடங்கள் கழித்து, அவரின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி மிகவும் துன்பப்படுவதை அறிந்ததும் மனம் இளகிப் போயிற்று.

அவரை வரச்சொல்லி, அவருடைய மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தருவதாகச் சொன்னேன். மிகுந்த சந்தோஷத்துடன் தன் மகனைக் கூட்டி வந்து அறிமுகம் செய்தார்.

‘ இவன் உங்களுக்கு உண்மையாக இருப்பான். என்றைக்கு உங்களுக்கு இவனால் வருத்தம் வருகிறதோ, அன்றைக்கு அவனைத் திருப்பி அனுப்பி விடுங்கள் ’ என்றார்.

அவன் இங்கு வந்த நான்கு வருடங்களில் குடும்பம் நிதான நிலைக்கு வந்தது. வயிறார சாப்பிட முடிந்தது.

அப்புறமும்கூட ராமனுக்கு குடிப்பழக்கம் குறையவில்லை என்று அறிந்த போது என்னுள் சீற்றம் அதிகரித்தது. அடுத்த முறை பார்த்த போது சொன்னேன்.

‘ உனக்கு ஐம்பது வயதாகப்போகிறது. திட்டியோ, அறிவுரை சொல்லியோ பிரயோசனம் ஏற்படப்போவதில்லை. உனக்கு என்னுடைய அன்பு நிலைக்க வேண்டுமானால் இந்தப் பழக்கத்தை உடனேயே நிறுத்து. முடியவில்லையென்றால் இனி இங்கே என்னை வந்து பார்ப்பதை நிறுத்தி விடு!’

பேசாமல் தரையையே பார்த்துக்கொண்டிருந்த ராமன், சில நிமிடங்களில் சொன்னார்:

’ இனி குடிக்க மாட்டேன்’!

அதற்கப்புறம் அவருடைய மனைவியும் ஃபோன் செய்து, ‘ இவர் குடிப்பதையும் குடித்து விட்டு வந்து என்னை அடிப்பதையும் நிறுத்தி விட்டார். இந்த நல்ல செய்தியை என் மகனிடமும் சொல்லி விட்டேன். இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் நீங்கள் தான் என் வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறீர்கள்’ என்று நாத்தழதழுக்க சொன்னபோது மனதில் நிறைவு ஏற்பட்டது.

அப்புறமும்கூட, பண விஷயங்களையோ, சேமிப்பைப்பற்றியோ தன்னிடம் எதுவும் மகன் சொல்வதில்லை என்றும் தன் அம்மாவிடம்தான் எல்லாவற்றையும் சொல்லிப்பகிர்வது வழக்கம் என்றும் ராமன் சொல்லியிருக்கிறார்.

இப்போது எப்படி இந்த விஷயத்தை சொல்வது? கையிலேயே பார்த்துப் பார்த்து வளர்ந்த பிள்ளை, காசைப்பார்த்ததும் மாறியதை எப்படி சொல்வது?
மனசு வலிக்கும் என்றாலும் சொல்லாமல் மறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

மறுபடியும் ஊருக்குச் சென்ற போது ராமனை வரவழைத்து செய்தியைச் சொன்னேன். வலியினால் முகம் சிறிது சுருங்கிப் போனாலும் அதற்கப்புறம்தான் அவரின் இதயக்கபாடம் மெல்ல மெல்லத் திறந்தது.

திருமணம் ஆனதிலிருந்தே மனைவி எதற்குமே ஒத்துப்போகாமல் இருந்தது, அவளால் சகோதரர்களை, பெற்றோரைப் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றது, ஆத்திரமும் அசிங்கமுமாய் குடும்ப வாழ்க்கை பலர் முன்னிலையில் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பல முறைகள் அடிக்க நேர்ந்தது, அதற்கும் அவள் திருந்தாதைப் பார்த்து, வேதனைகளை மறக்க சில சமயங்களில் குடிபோதையில் இறங்கியது – என்று வேதனையான அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல அவிழ்ந்தன.

‘ பிள்ளைகள் இல்லாத போது தான் என்னிடம் சண்டை போடுவதெல்லாம். நான் கோபத்தில் அடிக்க நேரும்போது, பிள்ளைகளை வரவழைத்துக் காண்பிப்பாள். குடித்து விட்டு கிடக்கும்போது, பிள்ளைகளை அழைத்து வந்து காண்பிப்பாள். இப்படிச்செய்தே சிறு வயதிலிருந்தே என்னிடம் அவர்களை ஒட்டாமல் செய்து விட்டாள். எனக்கும் இது இப்போதெல்லாம் பழகி விட்டது. மனைவியின் அன்பு, பிள்ளைகளின் பாசம் இதெல்லாம் இல்லாமலேயே வாழப்பழகி விட்டேன். ..”

மேலும் தலை குனிந்தவாறே பேச ஆரம்பித்தார்.

“ உங்களிடம் இதையெல்லாம் நான் எப்போதோ சொல்லியிருப்பேன். உங்களிடம் சில மணி நேரங்கள் இருக்கும்போது தான் மனம் நிம்மதி என்ற ஒன்றை அனுபவிக்கிறது. அப்போது போய் இந்தக் குப்பைகளை சொல்வதற்கு மனம் வந்ததேயில்லை. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. உண்மையிலேயே நான் நல்லவன் என்றால் இதற்குள் எனக்கு மரணம் வந்து நிம்மதியைத் தந்திருக்க வேண்டும்.. ..”

அந்த வேதனை மிகுந்த கண்களைப் பார்த்தபோது எனக்கும் மனம் வலித்தது.

“ பைத்தியம் போலப் பேசாதே. நாம் விரும்பும் போதெல்லாம் மரணம் வருவதில்லை. நம்மால் ஏதோ ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றிருக்கிறது. அதனால் தான் மரணம் வரவில்லை என்று நினைக்கப் பழகு.. துன்பங்களைத் தாங்க மன வலிமை தான் முக்கியமே தவிர, குடிப்பதோ, மரணிப்பதோ அதற்குத் தீர்வாகாது.”

மெதுவாகப் படியிறங்கிச் செல்லும் ராமனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடேசனின் நினைவு வந்தது. கூடவே ‘நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா’ என்ற புகழ் பெற்ற பாடலும் நினைவுக்கு வந்தது. .பெற்ற தந்தையையே துச்சமாக மதித்து, கேவலமாகப் பேசும் நடேசனை- அந்த நிமிடமே வேலையை விட்டு அனுப்ப மனம் துடித்தது. செய்நன்றி கொன்றதற்கு அது தான் சரியான தண்டனை என்று தோன்றியது. அதே சமயம், ராமனையும் சேர்த்து அந்தக் குடும்பம் இன்று மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடுவதும் நினைவுக்கு வந்தது. எது சரியான தீர்ப்பு என்று எனக்குப் புரியவில்லை!

Monday 19 September 2011

முத்துக்குவியல்கள்!!

முத்துக்குவியல்களில் இந்த முறை வித்தியாசமான, வியப்பளிக்கும் விசித்திரமான தகவல்கள் இடம் பெறுகின்றன. தகவல்கள் அடங்கிய இடுகையை அளிக்கும் முன் ஒரு நல்ல செய்தி!

இரண்டு இடுகைகளுக்கு முன் ஒரு இந்தியப்பெண், இங்கு விஷப்பூச்சி கடித்து கோமாவில் விழுந்திருப்பதாக தெரிவித்திருந்தேன். அந்தப் பெண் தற்போது கோமாவிலிருந்து எழுந்து விட்டார். முழுவதும் குணமாகி சில நாட்களுக்கு முன் தான் மருத்துவ மனையிலிருந்து வெளியேறியுள்ளார். பிரார்த்தனை செய்து, நலம் விசாரித்த அன்புத் தோழமைகள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி!


முதல் முத்து:


TOWER OF SILENCE
 ஜோரோஸ்ட்ரியன் எனப்படும் பார்சி சமூகத்தினரின் பூர்வீகம் ஈரான். அங்குள்ள இஸ்லாமியர் அளித்த தொல்லைகள் காரணமாக மேற்கிந்தியாவில் 10- ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள். மும்பையில்தான் இவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

மரணமெய்திய ஒரு பார்சி இனத்தவரது இறுதிச் சடங்கு முறை நம்மை நடுங்க வைக்கிறது. அவர்கள் இறந்த உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல், அந்த உடலிலிருந்து தலைமுடி, நகங்களை நீக்கி விட்டு, அந்த உடலை பாலில் குளிப்பாட்டி TOWER OF SILENCE என்ற குன்று போன்ற இடத்தில் வைத்து விடுகிறார்கள். அங்கு தயாராக இருக்கும் கழுகுகள் அந்த உடலை கண நேரத்தில் தின்று விடுமாம். நீர், காற்று, நெருப்பு, பூமி- இவை புனிதமான மூலங்கள் என்பதால் அவை களங்கப்படக்கூடாது என்று இப்படி செய்கிறார்களாம்.

மும்பையில் சி.எஸ்.டி அருகில் உள்ள Tower of Silence கட்டடம் 3 அடுக்குகளாய் பிரிக்கப்பட்டு, முதல் அடுக்கில் ஆண்களையும் இரண்டாம் அடுக்கில் பெண்களையும் மூன்றாவதில் குழந்தைகளையும் வைப்பார்களாம்.

பார்சி இனத்திலிருந்து வேறு மதத்தில் திருமணம் ஆனவர்களுக்கு இங்கு அனுமதி கிடையாது. சமீபத்தில் மரணம் அடைந்த கோத்ரெஜ் உடலும் இப்படித்தான் வைக்கப்பட்டதாம். ரத்தன் டாட்டா கூட பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்தான்.

இரண்டாம் முத்து:

உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் இருப்பது நெய்வேலியில்தான். 10 அடி உயரமும் எட்டரைஅ டி அகலமும் 2420 கிலோ எடையும் கொண்ட இந்தச் சிலை பஞ்ச லோகத்தால் ஆனது. இக்கோவிலில் பக்தர்களின் மனக்குறையைத் தீர்க்கவென்று மனு நீதிப்பெட்டி ஒன்றும் ஆராய்ச்சி மணியொன்றும் உள்ளது. மனக்குறைகளை அல்லது விருப்பங்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி மனு நீதிப் பெட்டியில் போட்டு விட்டு, பிறகு ஆராய்ச்சி மணியை அடித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் அல்லது குறைகள் உடனேயே தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மூன்றாம் முத்து:





வாகனப்புகையால் சுற்றுப்புற சூழ்நிலை பாழடைவதைக் கணக்கில் கொண்டு ஜெர்மனி ‘ டிபி ஸ்கூட் ’ என்ற மின்சாரத்தால் இயங்கும் மின் ஸ்கூட்டர் தயாரித்துள்ளது. 1000 வாட் மின்சாரப் பயன்பாடு உள்ள இது 132 செ.மீ அகலமும் 32 செ.மீ அகலமும் 62 செ.மீ உயரமும் கொண்டது. தேவைப்படும்போது கையில் எடுத்துச் செல்லலாம் என்பதுடன் செல்ஃபோன் போல எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் செல்ல வெறும் 7 காசு தான் செலவாகிறதாம்!

நான்காம் முத்து:

ஆந்திர மாவட்டம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பூலரேவு என்னும் கிராமத்தில் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த மீனவர்கள் வசிக்கிறார்களாம். இவர்கள் வழக்கப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பெரிய பந்தல் போட்டு எல்லோரது வீட்டுத் திருமணங்களையும் அங்கே இரவு நேரத்தில் நடத்துவது வழக்கமாம். மணமகனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரித்து, மணமகள் மனமகனுக்கு தாலி கட்டி மூன்று முடிச்சுகள் போட்டு திருமணம் செய்கிறார்!!

சமீபத்தில் படித்த-ரசித்த பழமொழி:

பெண்-

காதலனுக்கு கைப்பாவை.
கணவனுக்கு உடைமை.
குழந்தைக்கு ஒரு விளையாட்டு பொம்மை!

படங்களுக்கு நன்றி: கூகிள்





Monday 12 September 2011

இல்லத்திற்கு பயனளிக்கும் குறிப்புகள்!

குறிப்பு முத்துக்கள் பக்கம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. அன்றாடம் புழங்கும் விஷயங்களில் நமக்குத் தெரியாமல் எத்தனையோ நல்லவையும் தீயவையும் கலந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டறியவும் நல்லன அல்லாதவற்றை நீக்கவும் சில உபயோகமான வழிகள் இங்கே!

குறிப்பு முத்து-1

கரப்பான் பூச்சிகளைக் கொல்ல ஒரு எளிய முறை இருக்கிறது. நான் மட்டுமல்ல, நான் சொல்லி பலரும் இந்த வழியைப்பின்பற்றி வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்.

போரிக் பவுடர் 1 பங்கு, கோதுமை மாவு 4 பங்கு, சீனி ஒரு பங்கு எடுத்துக்கொண்டு, இவற்றுடன் பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகள் செய்யவும். கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில், நிலைகளின் மேல் என்று மூன்று நான்கு உருண்டைகள் போட்டு வைக்கவும். என்ன காரணமோ தெரியவில்லை, இதைப்போட்டு வைத்த பிறகு கரப்பான் பூச்சிகள் அத்தனையும் மறைந்து விடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேவைப்பட்டால் உருண்டைகள் புதியதாய் செய்து மாற்றவும்.

பின் குறிப்புகுழந்தைகள் கையில் படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

குறிப்பு முத்து-2



பல் தேய்க்கும் பிரஷ்ஷை வாரம் ஒரு முறை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு வைத்து எடுத்தால் பிரஷ்ஷிலுள்ள பாக்டீரியாக்கள் அழியும்.

குறிப்பு முத்து-3

ஒரு துணியை சிறிது வேப்பெண்ணெயில் தோய்த்து அலமாரி, சாமான்கள் வைக்கும் பீரோக்களை வாரம் ஒரு முறை துடைத்து வந்தால் எறும்புகள் மொய்க்காது.

குறிப்பு முத்து-4


வீட்டைக் கழுவி டெட்டால் தெளித்ததும் உடனே மின் விசிறியை இயக்ககூடாது. கிருமிகள் அழிய தரையிலுள்ல ஈரம் தானாகவே தான் காய வேண்டும்.

குறிப்பு முத்து-5

பெட்ரோல் பங்க் அருகே கைபேசியை உபயோகப்படுத்தக்கூடாது. கைபேசியிலுள்ள பாட்டரிக்கு பெட்ரோலில் தீயை உண்டாக்கும் அளவு சக்தியிருக்கிறது. அதாவது கைபேசி ‘ 5 வாட் ’ அளவு மின்சார சிக்னலை வெளிப்படுத்தக்கூடியதாம்.

குறிப்பு முத்து-6


வீட்டில் வெள்லை அடித்தாலோ அல்லது பெயிண்ட் பூசினாலோ அந்த வாசம் நிறைய நாட்களுக்குப் போகாது. இரண்டு மூன்று வெங்காயங்களை நறுக்கி வைத்து அறையின் கதவை மூடி வைத்தால் ஒரே நாளிலேயே அந்த வாசம் மறைந்து விடும்.

குறிப்பு முத்து-7

பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து விடும். அதைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெய் பாட்டிலில் சில துளிகள் விளக்கெண்னெய் விட்டு வைத்தால் தேங்காய் எண்ணெய் உறையாது.

குறிப்பு முத்து-8

கத்தி துருப்பிடித்திருந்தால் அந்தக் கத்தியை ஒரு வெங்காயத்தினுள்ளே அழுத்தி 24 மணி நேரம் வைத்திருக்கவும். அதன் பிறகு, சில தடவைகள் முன்னும் பின்னுமாக கத்தியை வெங்காயத்தினுள்ளேயே அசைத்து பின் வெளியே எடுக்கவும். துருவெல்லாம் நீங்கியிருக்கும்.

குறிப்பு முத்து-9

வெள்ளி சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியில் சில கற்பூர வில்லைகலைப் போட்டு வைத்தால் அவை நிறம் மாறாது.

குறிப்பு முத்து-10

காஸ் அடுப்பில் வைக்கும் வெந்நீர் சீக்கிரம் சூடாக அதனுள் ஒரு கிண்ணம் அல்லது ஒரு தம்ளரைப்போட்டு வைக்கவும்.
[ இது ஒரு மாத இதழில் படித்தது. ]