Sunday 30 May 2010

அன்னம் விடு தூது!

இதுவும் கண்ணாடி ஓவியம்தான். வண்ணங்கள் அடர்த்தியாக இல்லாமல் பொருத்தமான வண்ணங்களை மட்டும் தீட்டி வெளிர் நிறப்பின்னணியில் கோடுகளை அழுத்தமாக வரைந்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஓவியங்களில் இதுவும் ஒன்று.
இதற்கு கறுப்பு லைனர், வண்ணங்கள், ப்ரஷ்கள் மட்டும்போதும். ஓவியத்தை கண்ணாடி கீழே வைத்து லைனரால் ட்ரேஸ் செய்து கொண்டு அதை நன்கு காய வேண்டும். பின்பு நம் மனதின் ரசனைக்கேற்ப வண்னங்களைத் தீட்ட வேண்டியதுதான்.

அழகான விருதுக்கு அன்பு நன்றி!

அன்புடன் விருதளித்த சகோதரர் அஹமது இர்ஷாத் அவர்களுக்கு என் அன்பு நன்றி!!


உணர்வுகளையும் சிறு கதைகளையும் அருமையாக எழுதி வரும் சகோதரிகள் இமா, வானதி, அதிராவிற்கு இந்த விருதை திரும்ப அளிக்கிறேன்.

Wednesday 26 May 2010

சமீபத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்திற்கான காரணம்!


காலையில் இந்த செய்தியைப் போட்டு படத்தையும் போட்டுப் பார்த்ததும் வார்த்தைகள் தெளிவாக இல்லாததால் எல்லோரையும் இந்த செய்தி போய்ச் சேராது என்று உணர்ந்து பப்ளிஷ் பண்ணியதை நீக்கி மறுபடியும் அதை காப்பி பண்னி போடுவதற்குள் இங்கு ஷார்ஜா முழுவதும் மின்சாரத்தடை ஏற்பட்ட நிலையில் என்னால் கணிணி பக்கம் வர இயலாது போய் விட்டது. பார்வையாளர்கள் என் தவறுக்குப் பொறுக்கவும். இதோ, இப்போது தெளிவாக மறுபடியும் பதிவு செய்திருக்கிறேன். ஒரு வேளை இந்த தவறினால் நடந்திருக்கலாம் இந்த விபத்து என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதுவும் முக்கியமான காரணம் என்பதால் எதிர்காலத்தில் இந்த தவறு ஏற்படக்கூடாது, மக்களுக்கு விழிப்புனர்வு இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்தப் பதிவு போடப்படுகிறது.
Switch off that mobile!
Thomas Dominic, Kuwait

26 May 2010,

It’s easy to blame the captain of the ill-fated Air India Express for the tragic accident that occurred in Mangalore, since he is not there to defend his case. Also, one can blame the airline management for not maintaining the aircrafts.

However, I would request all the airline passengers to do an introspection of their role on board, and the readers to consider the following facts before handing over the death penalty. The state-of-the-art plane (B-737-800) was inducted on January 15, 2008. Hence, one cannot say that its conditions were so bad.

Every day, 32 domestic and international flights operate from Mangalore airport. Hence, one cannot categorically say that the airport or its runway were not safe for landing.

Fifty three-year-old Captain Zlatko Glusica who died in the crash had 10,200 hours of flying experience and his license had been endorsed by the Directorate of General of Civil Aviation, India. The commander had flown in and out of Mangalore airport at least 19 times, while the co-pilot had operated 66 times from the same airport.

So the pilot and co-pilot were fully familiar with landing at Mangalore Airport, and therefore it’s not right to put the blame on the pilots. Further, the commander did not report any malfunction before landing, to the Air Traffic Control (ATC).

Visibility at the airport on the day of the accident was six km, ‘which is more than that required’, when the ill-fated plane landed in Mangalore.

So then, what could be the reason for this air crash? Possible malfunctioning of the navigational system during the landing process caused by a cell-phone switched on by an ignorant passenger? I have noticed that many passengers switch on their mobile phones while landing as if they are in a race to inform their arrival. It is also possible that someone did not switch off the mobile phone while taking off from Dubai, despite being warned by the cabin crew, and it started searching for signals as the flight descended at Mangalore airport, which could have interfered with the functions of the landing system?

It should be noted that all three recent air crashes — the first one at Russia killing the Polish Prime Minister and his team, the second one at Libya last month and now Air India Express at Mangalore — all occurred while trying to land, thereby strengthening my suspicion about the possible interference in the navigational system by cell phone signals.



Friday 21 May 2010

ஆதங்கம்.


சில நாட்களுக்கு முன் எங்கள் குடும்ப நண்பரின் பெண்ணுக்கு பிறந்திருந்த குழந்தையைப் பார்ப்பதற்காக இங்குள்ள மருத்துவ விடுதிக்குச் சென்றிருந்தேன். அன்று காலைதான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தது. நான் அன்று மாலை சென்றிருந்தேன்.

மயக்கம் தெளிந்த நிலையில் சோர்வாகப் பேசிக்கொண்டிருந்தது அந்தப் பெண். சில வினாடிகளில் தலைமை நர்ஸ் வந்து சற்று சாய்ந்தாற்போல அமர்ந்து குழந்தைக்குப்பால் புகட்டச் சொன்னார். அந்தப் பெண் உடனே பதறி ‘நான் எப்படி இப்போது பால் தர முடியும். இன்னும் வலி தாங்க முடியவில்லை’ என்றது. அந்த நர்ஸ் ‘உன் குழந்தைக்கு நீதான் கஷ்டப்பட்டு பால் தர வேண்டும். கையை ஊன்றி கொஞ்சம் சாய்ந்து உட்கார். நான் எந்த உதவியும் செய்ய மாட்டேன். நீயேதான் எழுந்து உட்கார வேண்டும்’ என்றார். உதவி செய்ய முயன்ற அந்தப் பெண்ணின் அம்மாவையும் தடுத்து விட்டார். அந்தப்பெண் சிரமப்பட்டு சாய்ந்து அமர்ந்து தன் குழந்தைக்குப் பாலூட்ட முன் வந்ததைப் பார்த்தவாறே நான் வெளியே வந்தேன்.

அந்தப் பெண் மூன்றாம் நாளே வீட்டுக்கு வந்து ஒரு வாரத்தில் நன்கு நடக்க முடிந்ததோடு மட்டுமல்லாது தன்னுடைய, தன் குழந்தையின் தேவைகளை யாருடைய உதவியுமில்லாது பார்த்துக் கொள்ள ஆரம்பித்தது.

மனசு உடனேயே நம் ஊரை நினைத்துக் கொண்டது. இதுவே நம் ஊரானால் என்னென்ன ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்! குழந்தை பெற்ற பெண்னைத் தாங்குவதாக நினைத்து, மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுவதற்கு பதிலாக பிரசவமான பெண்ணையும் ஒரு குழந்தையாக கவனித்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்!

பொதுவாகவே நோயுற்ற ஒருவரைப் பார்க்கப் போகும் மனிதர்களில் எத்தனை பேர் அவருக்குத் தைரியம் கொடுக்கிறார்கள்? அவர் என்னவோ உயிருக்குப் போராடுவது போல ‘ உனக்கா இப்படி ஆக வேண்டும் ? என்ற அழுகையுடன் சிலர் கட்டிப் பிடிப்பார்கள். நோயாளியும் அது வரை தைரியமாயிருந்தவர் தான் வாழ்க்கையின் விளிம்புக்கே வந்து விட்டதுபோல கண் கலங்கி விடுவார். இன்னும் சிலரோ ‘ இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருத்தருக்கு வந்தது. கடைசி வரைக்கும் அவர் பிழைக்கவேயில்லை’ என்று புலம்பும் புலம்பலில் நோயாளிக்கு அடி வயறு கலங்கும். இன்னும் சிலர் தனக்குத் தெரிந்த அரைகுறை மருத்துவ அறிவை அந்த இடத்தில் உபயோகிப்பார்கள். ‘ டாக்டர் இந்த மருத்தையா கொடுத்திருக்கிறார்? இது சரி கிடையாதே? அலர்ஜி அல்லவா உண்டாகும்?’ என்று அவர் பேசுவதைக்கேட்டு நோயாளிக்கு அதுவரை தனக்கு சிகிச்சை செய்து வந்த டாக்டரிடம் இருந்து வந்த நம்பிக்கை ஆடிப்போகும். இன்னும் சிலர் ஏற்கனவே கவலையுடன் இருக்கும் நோயாளியிடம் தன் குடும்பக்கவலைகளையெல்லாம் கூறிப் புலம்புவார்கள்.

நானும் பார்த்து விட்டேன், நிறைய பேர் அதுவரை காப்பியே குடிக்காதவர்போல் நோயாளியைப் பார்க்கப்போகும் இடத்தில்தான் உட்கார்ந்து காப்பி, டீ என்று வெளுத்து கட்டுவார்கள். நோயாளிக்கு உதவியாக இருக்கும் நபருக்கு பார்க்க வருபவர்களுக்கு காப்பி வாங்கி வந்து தரவே நேரம் சரியாக இருக்கும். அதே போல நோயாளியின் கட்டிலில் தானும் அமர்ந்து கொண்டு நோயாளிக்குக் கொஞ்சம்கூட அசைய இடம் கொடுக்காமல் ஆக்ரமித்து அவஸ்தைப்படுத்தும் மனிதர்களைப் பார்த்து எத்தனையோ தடவைகள் சலிப்படைந்திருக்கிறேன்.

இன்னும் சில இடங்களில் தனியறை வாங்கிக் கொண்டு உள்ளே பிரியாணி வாசம் வர சமைத்துக்கொடுப்பதையும் நான் பார்த்து அசந்து போயிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த ஒருத்தர் மனைவியை சரியாக கவனிக்கவில்லை என்று பிரசவம் பார்த்துக்கொண்டிருந்த டாக்டரிடம் சண்டை போட, கோபமடைந்த டாக்டர் உடனே வெளியேறி பிரசவம் சிக்கலில் மாட்டிக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

இன்னும் சிலர் நோயாளியிடம் அவரின் நோயைப்பற்றி அலசி கேட்கும் கேள்விகள் அவரை மிகவும் சங்கடத்திற்குள்ளாகி விடும். மற்றவரின் அந்தரங்கத்தில் சம்பந்தமில்லாது தலையிடுவது எத்தனை அநாகரிகம் என்றுகூட நம் மனிதர்கள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நாம் பார்க்கச் செல்வதே அவருக்கு மன ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதற்குத்தான். மருத்துவ சிகிச்சை ஒரு பக்கம் அவர்களை பாதி குணப்படுத்துமென்றால் மீதிப்பாதியை அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் கொடுக்கும் உற்சாகமும் தைரியமும் தான் குணபப்டுத்தும். நம் ஊரில் எப்போது இந்த நாகரிகம் எல்லோருக்கும் முழுமையாக வரும்?

Sunday 16 May 2010

FISH PAKODA

மீன் பக்கோடா:

இனிப்பிற்குப் பிறகு மிகவும் சுவையானதாய் எந்த சமையல் குறிப்பைப் போடலாம் என்ற்று யோசித்தபோது தான் ‘இந்த மீன் பக்கோடா’வையே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். காரணம் இதிலுள்ள பொருள்கள் சற்று வித்தியாசமானவை.
மீன் மட்டும் வாடை இல்லாததாகத் தேர்வு செய்தால் சுவை மேலும் அதிகரிக்கும். இந்த ஊரில் பாரட் மீன், ரெட் ஸ்னாப்பர், விரால் முதலியவை பொருத்தமாக இருக்கும். மதிய உணவிற்கு பக்க பதார்த்தமாகவோ அல்லது மாலை நேரச் சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.
தேவையான பொருள்கள்:

வேகவைத்து உதிர்த்த மீன் துண்டுகள்- 3 கப்
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
மெல்லியதாக அரிந்த வெங்காயம்-1 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லி- 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலைகள்-20
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
சலித்த கடலை மாவு- 1 கப்
முட்டை-1
மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
வெள்ளை சாஸ்-சிறிது
தேவையான உப்பு
பக்கோடா பொரித்தெடுக்கத் தேவையான எண்ணெய்

சற்று சிதைக்க வேண்டிய பொருள்கள்:

சோம்பு- 1 ஸ்பூன், பச்சை மிளகாய்-3, துருவிய இஞ்சி- 2 ஸ்பூன், சிறிய பூண்டிதழ்கள்-8

வெள்ளை சாஸ் தயாரிக்கும் முறை:

1 கப் பாலில் 1 மேசைக்கரண்டி சோள மாவு, கொரகொரப்பான மிளகுத்தூள்- அரை ஸ்பூன், சிட்டிகை உப்பு சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். சாஸ் கெட்டியானதும் இறக்கி ஆறவைக்கவும்.

செய்முறை:

வாணலியில் எண்னெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அரைத்ததை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
மீனை உப்புடன் சேர்த்து குறைந்த தீயில் நன்கு சுருண்டு வரும்வரை வதக்கவும்.
வதக்கியதை ஆற வைக்கவும்.
முட்டையை சிறிது தண்ணீர் சேர்த்து நுரை வர அடிக்கவும்.
கடலைமாவில் உப்பு, மிளகாய்த்தூள், வெள்ள சாஸ், முட்டை சேர்த்து பிசையவும்.
ஆறிய மீனையும் சேர்த்து அனைத்தும் நன்கு  கலக்குமாறு  பிசையவும்.
வாணலியில் போதுமான எண்னெய் ஊற்றி சூடாக்கவும்.
மீன் கலவையை சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
சூடான மீன் பக்கோடா தயார்.
தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

Thursday 13 May 2010

அழகுக் குறிப்புகள்!!

இந்த தடவை குறிப்பு முத்துக்களில் ‘அழகுக் குறிப்புகளை’க் கொடுக்கலாமென்று தோன்றியது. பெண்களுக்கான குறிப்புகள் மட்டும் அல்ல இவை. ஆண்களும் இவற்றைப் பின்பற்றலாம்.


1. தலை முடி வளர:

அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.

2. வளமான தலைமுடிக்கு:

தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய்
எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி
நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும். இது முடி கொட்டுவதையும்
நிறுத்தும்.

3. முடி கொட்டுவது நிற்க:

ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை குளித்து வரவும்.

4. கண்கள் கீழுள்ள கருவளையங்களைப் போக்க:

அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

5. பாத வெடிப்பு:

தொடர்ந்து கடுகெண்ணெயைத் தடவி வந்தால் சரியாகி விடும்.

6. தலையில் ஏற்படும் வழுக்கை, சொட்டை முதலியவை நீங்க:

தாமரைஇலைகளைப் பறித்து சாறெடுத்துக்கொள்ளவும். அதற்கு
சமமான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவும். நீர்ப்பசை நீங்கி
தைலம் மேலே மிதக்கத் தொடங்கியதும் ஆறவிட்டு பத்திரப்படுத்தவும்.
இதை தினமும் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்கு வளரும்.

7. முகப்பொலிவிற்கும் அழகிற்கும் ஒரு face pack!

தேவையான பொருள்கள்:

பாசிப்பயிறு- 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள்- 100 கிராம்
கசகசா- 10 கிராம்
உலர்ந்த ரோஜா மொட்டு- 5 கிராம்
பூலாங்கிழங்கு- 5 கிராம்
எலுமிச்சை இலை, வேப்பிலை, துளசி இலை மூன்றும் 2 கிராம்.


மொத்தமாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகம் கழுத்தில் தடவி வந்தால்
மாசு மருவற்ற முகம் கிடைப்பதுடன் நிறமும் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும். இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் உபயோகிக்கலாம்.

Saturday 8 May 2010

பென்சில் ஓவியம்!


இந்த ஓவியத்தை நான் வரைந்தது என் இளம் பருவத்தில். அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ வந்திருந்த சமயம். எங்களிடையே அந்தப் படத்தைப்பற்றிய சூடான விவாதங்கள் அனல் பறக்கும். இப்போது நினைத்தாலும் புன்னகையை வரவழைக்கும் விவாதங்கள். அப்போது வரைந்த ஸ்கெட்ச் இது. பென்சிலால் மட்டும்தான் வரைந்திருக்கிறேன்.

Tuesday 4 May 2010

காற்றுக் குமிழிகள்!!



பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.


இங்கிருந்து தனியாகச் சென்று தஞ்சையில் என் சகோதரி இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களுடன் தான் என் தாயாரும் வசித்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் நள்ளிரவு என் தாயாருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே என் சகோதரியும் சினேகிதியுமாகச் சேர்ந்து உடனே அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டிலிருந்த சகோதரி மகனை நான் கவனித்து மறு நாள் காலை வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் பெண், சகோதரி மகன் இருவரையும் உறவினர் இல்லம் ஒன்றில் விட்டு விட்டு அதன் பின் நான் மருத்துவமனை செல்வதாகப் பொறுப்பேற்றிருந்தேன்.


சகோதரி வீட்டில் தங்கி வேலை செய்த பெண்ணின் பெயர் கலா. அழகும் துறுதுறுப்புமான பெண். காலையிலேயே எழுந்து வீட்டில் உள்ள வேலைகளைப்பார்த்து சகோதரி மகனையும் கவனித்து விட்டு நேரே என்னிடம் வந்து ‘அம்மா, இந்த ட்ரெஸ் எனக்கு அழகாக இருக்கா’ என்று கேட்டாள். அப்போதுதான் கவனித்தேன், அந்த உடை நான் அவளுக்கு பரிசளித்தது என்பதை. அப்போதுதான் பூப்பெய்திய 13 வயதுப்பெண் அவள். ரொம்பவும் அழகாக இருக்கிறது என்று சொன்னேன். வீட்டை பூட்டு முன் என் கணவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. என் தாயாருக்கு மிகவும் உடல் நலமில்லாததைச் சொன்னதும் பேசி முடிக்கும்போது, ‘உடனேயே போய் விட வேண்டாம், தம்பி இப்போது அழைப்பார். அவரிடமும் விஷயத்தைச் சொல்லி விட்டுச் செல்’ என்று என் கணவர் சொல்லவே தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.


இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கலா, ‘அம்மா, நான் போய் தெருமுனைக்குச் சென்று ஆட்டோக்காரரை அழைத்து வருகிறேன்’ என்றாள். [அப்போதெல்லாம் கைபேசி உபயோகம் பரவலாக இல்லாத காலம்]. நான் உடனேயே மறுத்தேன். “ஒரு வேளை தொலைபேசி அழைப்பு வருவதற்குள் ஆட்டோ வந்துவிட்டால்- எனக்கு இங்கு ஆட்டோக்காரர்களையெல்லாம் பழக்கம் கிடையாது. ஒருவேளை காத்திருப்பது பிடிக்காமல் ஏதாவது சொல்லலாம். இரு. தொலைபேசி அழைப்பு வந்ததும் நீ போகலாம் ஆட்டோ அழைத்து வர” என்று மறுத்தேன். அவள் பிடிவாதமாக ‘அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்கம்மா, எங்களுக்குப் பழக்கமானவர்கள் இருக்கிறார்கள்” என்று கிளம்பிப்போனாள்.


அதன் பின் எனக்கு என் கொழுந்தனாரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து விட்டு வீட்டைப்பூட்டிக் கொண்டு என் சகோதரி மகனுடன் வெளியே தயாராக அமர்ந்திருந்தேன். 10 நிமிடமாகியும் கலா வரவில்லை. ஆட்டோ கிடைக்கவில்லையோ என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.


திடீரென்று பக்கத்துத் தெருவில் இருக்கும் எங்கள் உறவினர் வந்தார். ‘என்னம்மா, இங்கே வீட்டைப் பூட்டி விட்டு உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டதும் நான் விபரத்தைச் சொன்னேன்.


பேசாமல் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தவர் ‘கலா லாரி மோதி மூளை சிதறி செத்துப்போய் சாலையில் கிடக்கிறாள் அம்மா, இந்த வீட்டில் வேலை செய்யும் பெண் ஆயிற்றே, தகவல் சொல்லலாம் என்றுதான் வந்தேன்’ என்றார்.


அவர் அதற்கடுத்தாற்போல பேசியது எதுவுமே என் காதில் விழவேயில்லை. மரணங்களை எதிர்பாராத தருணங்களில் பல முறை சந்தித்திருக்கிறேன். சில வாழ்க்கையை அப்படியே புரட்ட்டி போட்டிருக்கின்றன. ஆனால் இப்படி நிலை குலைய வைத்ததில்லை. எப்படி அழகாக, மஞ்சள் பூசிக்குளித்து, எனக்காகவும் வேலைகள் செய்து கொடுத்து [எனக்கு அன்று உடல் நலம் வேறு சரியில்லாமல் இருந்தது] புதிய ஆடை அணிந்து சந்தோஷமாகப்போனவள் இப்படி ஒரு நிமிடத்தில் காற்றுக்குமிழியாக மறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


என் உறவினர் ‘ அம்மா, இங்கேயே இருப்பது ஆபத்து. கலாவின் சொந்தங்கள் எல்லாம் குடிகாரர்கள். கூட்டமாக அங்கே அவள் உடல் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். இங்கே விரைவில் வந்து நின்று தொல்லை கொடுப்பார்கள். நான் போய் உடனே ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ உடனே கிளம்பு “ என்று கூறி, ஆட்டோ பிடித்து வந்து என்னை அனுப்பி வைத்தார். அன்று முழுவதும் என் உறவினர்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் கூறியதெல்லாம் என் மனதில் பதியவேயில்லல.


ஒரு பக்கம் கலாவின் அப்பாவும் அம்மாவும் என் உறவினர் வீட்டுக்கு வந்து என் சகோதரி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவள் இறந்ததால் இழப்பீடு தொகை அதிகமாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் மூளை சிதறி இறந்த பெண்ணுக்கு அவர்கள் அன்று மாலையே பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்தத் தொல்லை தாங்காமல் என் கொழுந்தனார் தன் நண்பரான போலீஸ் அதிகாரியை சந்தித்து அழைத்து வரப் புறப்பட்டிருந்தார். இன்னொரு பக்கம் உடல் நலம் தேறத்தொடங்கியிருந்த என் தாயாருக்கு உண்மை தெரியாது, பெரிய மனக்குறை நான் சரியாகவே பேசவில்லை என்று! இதையெல்லாம் தாண்டி மிகப் பெரிய மன வேதனையில் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.


அவள் நான் சொல்லச்சொல்ல பிடிவாதமாக கிளம்பினாளே, அப்போது நான் அதட்டி உட்காரவைத்திருந்தால் இப்படி அநியாயமாக இறந்திருக்க மாட்டாளோ, அந்த ஒரு சில நிமிடங்களில் அவளை நான் கோட்டை விட்டு விட்டேனே” என்ற மனதின் தவிப்பை என்னால் வெகு நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை. இன்று நினைத்தால்கூட மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த தொலைபேசி அழைப்பு கொஞ்சம் முன்னால் வந்திருந்தால்கூட அந்த மரணத்தின் அழைப்பிலிருந்து அவள் தப்பித்திருப்பாளே என்ற மனதின் தவிப்பை அடக்க முடியவில்லை. நான் அவளைப் போக வேண்டாம் என்று சொன்னதற்கும் அவள் பிடிவாதமாகப் போனதற்கும் இடையில் மரணம் அவளுக்காகக் கொடூரமாகக் காத்திருந்ததை அறியாமல் போய் விட்டேனே என்ற தாபம் இன்னும் மறையவில்லை. அப்போதுதான் பூத்த அந்தப் புது மலர் அடையாளம் தெரியாமல் வாடி உதிர்ந்து போய்விட்டது.