Friday 31 December 2010

இந்த நாள் இனிய நாள்!!!




இந்த அழகிய விருதுகளை அன்புடன் உவந்தளித்த அன்புச் சகோதரர் திரு.அப்துல் காதர் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி! இவ்விருதுகளை சகோதரிகள் ராஜி, எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம், சுபத்ரா இவர்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


 புதிய வருடம் உலகின் அனைத்து வளங்களுடனும் சந்தோஷங்களுடனும் என் வலையுலக தோழமைகள் அனைவருக்கும் இனிதே பிறக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

நாளை காலை எங்களின் உணவகத்தின் கிளையை SHARJAH-AL NADHA அருகில் திறக்கவிருக்கிறோம் என்கிற இனிய செய்தியை அனைவருக்கும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.. உங்கள் அனைவரது வாழ்த்துக்கள் நிச்சயம் எங்களை வளப்படுத்தும்-மகிழ்ச்சியூட்டும்-உற்சாகப்படுத்தும்!

Tuesday 21 December 2010

வாழைத்தண்டு ரசம்

வழக்கம்போல வித்தியாசமான சமையல் குறிப்பைக் கொடுக்க எண்ணி யோசித்தபோது எனக்கு மிகவும் பாரட்டுக்களை அள்ளி வழங்கிய இந்த ' வாழைத்தண்டு ரசம்' பற்றி எழுதலாமே என்று தோன்றியது. சாதாரணமாகவே ரசம் தமிழ்நாட்டின் மதிய உணவில் இன்றியமையாத ஒன்று! மைசூர் ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், புதினா ரசம், கண்டத்திப்பிலி ரசம், பருப்பு ரசம், அன்னாசி ரசம், புளி ரசம், எலுமிச்சை ரசம் என்று ரசத்திலேயே ஊறியவர்கள் நாம். சின்ன வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் இந்த ரசம் ஒரு முழு உணவு மாதிரி. சூடான சாதம் வடித்து, இந்த ரசம் செய்தால் போதும், தொட்டுக்கொள்ள காயும் ரசத்திலேயே கிடைத்து விடுவதால் ஒரு முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்!




தேவையான பொருள்கள்:

இளம் வாழைத்தண்டு- 1 அடி நீளமானது
சிறிய வெங்காயம் 1- கை
சிறிய பூண்டிதழ்கள்-10
இஞ்சி நசுக்கியது -1 ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய்- 4
கறிவேப்பிலை- ஒரு கீற்று
நறுக்கிய கொத்தமல்லி -கால் கப்
வெந்தயம் -அரை ஸ்பூன்
கடுகு -அரை ஸ்பூன்
சீரகம் -அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு -ஒரு எலுமிச்சம்பழத்தினுடையது
தக்காளி [பொடியாக நறுக்கியது]- 1 கப்
தேவையான உப்பு
நெய்- 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன்
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
வெந்த பருப்பு- கால் கப்
செய்முறை

ஒரு வாணலியில் நெய்யையும் எண்ணையையும் ஊற்றி சூடுபடுத்தவும்.

கடுகு போட்டு அது வெடித்ததும் சீரகம், வெந்தையம் இரண்டையும் போடவும்.

அவை இலேசாக சிவக்க ஆரம்பித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பெருங்காயம்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் கொத்தமல்லி சேர்த்து அவை நன்கு குழையும்வரை வதக்கவும்.

6 கப் நீரை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

வாழைத்தண்டை சிறிய வில்லை வில்லைகளாய் அரிந்து கொதிக்கும் ரசத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.

சிறிது நிமிடங்களிலேயே வாழைத்தண்டு வெந்து விடும்.

பருப்பையும் அரை கப் நீரையும் சேர்த்து ஊற்றவும்.

மறுபடியும் கொதி வர ஆரம்பிக்கும்போதி இறக்கி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.


சூடான, சுவையான வாழைத்தண்டு ரசம் ரெடி!



Tuesday 14 December 2010

தானமும் அன்பும்.. ..

முத்துக்குவியலில் மறுபடியும் மனதை நெகிழ வைத்த சில நிகழ்வுகள்தான் முத்துக்களாய் சிதறுகின்றன!

முதலாம் முத்து.

வாழ்க்கை முழுவதும் ஆச்சரியங்கள் நம்மைப் பின்னிப் பிணைந்தே வருகின்றன. சமீபத்தில் படித்து வியந்த செய்தி இது. எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை.

கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு மிக அருகிலுள்ள வடலூரில் இருக்கிறது சத்திய தருமசாலை. ‘வாடிய பயிரைக் கண்டு வாடிய’ வள்ளலார் வாடிய வயிற்றையும் கண்டு வாடி 1867-ல் இதைத்தோற்றுவித்தார். அவர் ஏற்றிய அடுப்பு 143 வருடங்களாக அணயாது எரிந்து கொண்டிருக்கின்றது. அன்றாடம் பசித்திருப்பவர்களுக்கு அன்னதானம் செய்விக்கிறது.

காலையில் பொங்கல், மதியம் சாம்பார், கூட்டு, பொரியல் ரசத்துடன் சாப்பாடு, இரவு சாதம் என்று மூன்று வேளைகளும் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள். பசியோடு யார் வந்தாலும், குணம், குற்றம் பாராது, யார் என்று கேளாது, பசித்திருப்பவனின் பசி போக்கு' என்ற வள்ளலாரின் உபதேசப்படி, பசிக்கிற நேரம் மட்டுமல்லாது எந்த நேரத்தில் யார் பசி என்று வந்தாலும் அன்னதானம் செய்து பசியைப்போக்குகிறார்கள் இங்கு! தினந்தோறும் நிறைய பேர் வந்து அரிசி, மற்ற பொருள்கள் என்று தந்து செல்வதாலும் வருடத்தில் ஒவ்வொரு நாள் என்று யாராவது அன்னதானப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாலும் வள்லலார் ஏற்று வைத்த ஜோதி இன்னும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. தினமும் ஆயிரம் பேருக்கு சமையல் செய்ய விறகும் கிடைப்பது ஆச்சரியம்தான். மாட்டு வண்டி ஒன்று சுற்றியிருக்கும் கிராமங்களுக்குச் செல்கிறது. வண்டியைப் பார்த்ததுமே கிராமத்தார் தங்களிடமுள்ள விறகுகளை வண்டியிலேற்றி அனுப்பி வைக்கிறார்கள். இங்கே காலடி வைத்ததுமே முதலில் எதிர்படுகிற கேள்வி ‘சாப்பிடுகிறீர்களா?’ என்பதுதான். தானத்திலே சிறந்தது என்று சொல்லப்படுகின்ற அன்னதானம் இங்கே எத்தனை உன்னதமாக நடைபெறுகிறது!

இரண்டாம் முத்து:

அனுபவப்பட்டவர் ஒருத்தர் எழுதியிருந்தார். அவர் ஒரு முறை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடச் சென்ற போது, பலரும் பலவிதமாக சாப்பாட்டு வகைகளைச் சொல்ல, அதில் பாதிக்கும் மேல் யாருமே தொடாமல் இருந்த சாப்பாட்டு வகைகளை, இவரது தோழி பேரர் உதவியுடன் pack up செய்து, வெளியே வந்ததும் சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் கொடுத்தாராம். பெற்றுக்கொண்ட பிச்சைக்காரரின் கண்களில் கண்ணீர் மின்னியதாம். மனசுக்கு நெகிழ்வாக இருந்தது படித்தபோது. நாம் செலவு செய்ததும் வீணாகாது, மற்றவர் பசி போக்க இதுவும் ஒரு வழி!

மூன்றாம் முத்து:

மனம் மிகவும் கலங்கிப்போன சமீபத்திய செய்தி. கணவன் வெளி நாட்டில் இருக்க, மனைவி[தமிழ் நாடு] வேறு ஒருவருடன் முறையற்ற உறவு கொண்டிருக்க, புரிந்தும் புரியாத அவளது ஆறு வயதுக் குழந்தை பக்கத்து வீட்டில் அதைப்பற்றிப்பேசியதை அறிந்ததும் கோபம் கொண்ட அந்த தாய் [ தாய் என்று எழுத அருவருப்பாக உள்ளது] அடுப்பூதும் ஊதுகுழலால் சூடு வைத்தும் ஆத்திரம் அடங்காது அயர்ன் பாக்ஸை சூடு பண்ணி முதுகில் இழுத்திருக்கிறாள். குற்றுயிராகக் கிடந்த குழந்தையை மீட்டு, அந்தப் பெண்ணையும் அவள் காதலனையும் காவல்துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இதைப்படித்தபோது மனம் துடித்து விட்டது. மலரை விட மெல்லியது குழந்தையின் மனமும் உடலும். எப்படித் துடித்திருக்கும் அது! தூக்கு தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று வாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரி தாய்மையின் உன்னதமான அர்த்ததைக் கெடுக்கும், பிஞ்சுக்குழந்தையை சித்திரவதை செய்யும் ஒருத்தருக்கு உடனேயே அந்த மாதிரி தண்டனைதான் தரவேண்டும்.

நான்காம் முத்து:

நான் ரசித்த ‘ஓஷோ’வின் ஒரு குட்டிக்கதை:

ஒரு துறவி தன் சீடர்களிடம் ‘கோபமாக நாம் இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம்?’ என்று கேட்டாரம்.

அவரது சீடர்கள் ‘ அமைதியை இழந்து விடுவதால்தான் கத்துகிறோம்’ என்றார்களாம்.

அந்தத் துறவி, ‘கேள்வி அதல்ல. கோபமாக இருக்கும்போது நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன் கத்துகிறோம்? மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா?’ என்று கேட்டாராம். சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி மீண்டும் தொடர்ந்தாராம்.

“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள் மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள். அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள். ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன. அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது. தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து காணாமல் போகிறது”

எத்தனை சத்தியமான வார்த்தை!

Tuesday 7 December 2010

இசையுடன் கண்ணீர்!!

இந்த ஓவியம் கூட 20 வருடங்களுக்கு முன் வரைந்ததுதான். ஒரு ஹிந்திப் படத்தில் [படம் பெயர் நினைவில்லை]மறைந்த பழம்பெரும் நடிகர் மதன்பூரி வயலின் துணையுடன் பாடிக்கொண்டே இருக்கையில் கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழும்! அந்த சோகமும் ததும்பிய விழிகளும் வேதனை நிரம்பிய முக பாவங்களும் என்னைப்பாதித்தன. அந்தக் காட்சியை ஒரு வீடியோவில் பதிவு செய்து அதை ஸ்டில் செய்து வரைந்தேன். போஸ்டர் பெயிண்ட்ஸ் கொன்டு உருவாக்கிய ஓவியம் இது.



Tuesday 30 November 2010

தொடரும் அனுபவங்கள்!!

இரண்டு அனுபவங்கள். வாழ்க்கை முழுவதும் சில சமயம் திகைக்கக்கூடிய அனுபவங்கள் சில ஏற்படும். சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும் அனுபவங்கள் நிகழும். சில அனுபவங்களோ இதயத்தை ரணமாக்கும். எதிர்பாராத மகிழ்வைக் கொடுக்கும் அனுபவங்களோ மனதை சுகமாக வருடிக்கொடுக்கும். ஆனால் இந்த இரண்டுமே என்னை மிகவும் யோசிக்க வைத்த அனுபவங்கள்.

முதலாவது!

1970 பிற்பகுதியில் எனக்கு வலது காதில் அடைப்பு இருந்தது. அலோபதியில் நிறைய பின் விளைவுகள் அடிக்கடி ஏற்படுவதால் வேறு யாரைப்பார்க்கலாம் என்று யோசித்த போது கோவை சாமிகிரி சித்தரை நெருங்கிய நண்பரொருவர் பரிந்துரைத்தார்.. தினத்தந்தி படிப்பவர்கள் இவரைப் பற்றிய விளம்பரத்தைப் படித்திருக்கலாம். அவரைச் சென்று சந்தித்தேன். பேசிக்கொன்டிருக்கும்போதே சடாரென்று மூக்கில் பொடியைத் தூவினார். நான் என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் அடுக்கடுக்காக தும்மல்கள்! அப்புறம் சொன்னார், " சாதாரண அடைப்பாக இருந்தால் இந்தத் தும்மல்களிலேயே அது சரியாகி விடும், அதனால்தான் இந்தப்பொடியைத் தூவினேன்" என்று! எனக்கு திகைப்பாக இருந்தது. அப்புறம் காதில் ஒரு எண்ணையை விட்டு சிறிது நேரம் படுத்திருக்கச் சொன்னார். அதன் பின் அங்கு வந்திருந்த அனைவரையும் ஒரு ஹாலில் ஒன்று கூடச்சொல்லி சிறிது நேரம் பேசினார். பேச்சு முழுவதும் சிரிப்பு எப்படி வாழ்க்கைக்கு நல்லது என்பதைப்பற்றி இருந்தது. கூடவே சினிமாவிலிருந்தும் சில உதாரணங்கள் சொல்ல கூட்டத்தினரிடையே ஆங்காங்கு சிரிப்பு அலைகள் எழுந்தன. அதெல்லாம் ரொம்பவும் சாதாரணமாக இருந்ததால் எனக்கு சிரிப்பு வரவேயில்லை. பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன். கடைசியில் மருந்துகள் கொடுக்க அவர் ஒவ்வொருத்தராய் அழைத்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றதும் என்னிடம் '" உங்களுக்கு எதையும் வாய்விட்டு சிரித்து ரசிக்கத் தெரியவில்லை. உங்களுக்கு மருந்து கொடுத்து என்னால் குணப்படுத்த முடியாது" என்று சொல்லி விட்டார். எனக்கு ஆச்சரியத்தில் பேச்சே வரவில்லை. வெளியே வந்ததும் வந்தது பாருங்கள் ஒரு சிரிப்பு! கணவர் கேட்கக் கேட்க விபரம் எதுவும் சொல்லாமல் கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டேயிருந்தேன்.

யாருக்குக் காதில் பிரச்சினை வந்தாலும் இந்த நினைப்பு வரும். சிரிப்புடன் இந்த நிகழ்வைச் சொல்லிக்கொண்டிருப்பேன்.

சென்ற மாதம் அவர் மறைந்து விட்டதாகச் செய்தி அறிந்தேன். ஆனால் 70 வயதிற்கும் மேலான அவர் மறைந்த விதம் திகைப்பாயும் யோசிக்க வைப்பதாயும் இருந்தது. 11 பிள்ளைகளைப் பெற்றவர். இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போன அவரது மனைவியின் இழப்பைத் தாங்க முடியாமல் நாளுக்கு நாள் தளர்ந்து போன அவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்திருக்கிறார். இறப்பதற்கு முன்னர் ' இனியும் தொடர்ந்து வாழ்ந்து நோயுற்று தன் அன்பான குழந்தைகளைத் துன்பப்படுத்த விரும்பவில்லை என்றும் மனைவியின் இழப்பைத்தாங்க முடியாமல் தனது முடிவைத் தானே தேடிக்கொள்வதாயும் தனது உடலைப்புதைக்கும்போது தன் மனைவியின் புகைப்படத்தை அதன்மீது வைத்து புதைக்க வேண்டுமென்றும் தனது இறுதிச் செலவுகளுக்காக பணத்தைத் தனியே எடுத்து வைத்திருப்பதாகவும்' குறித்து வைத்து விட்டு மரணமடைந்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனை முகங்கள்! சிரிப்புதான் வாழ்க்கையில் எல்லாமும் என்று சொன்னவர் அவர். ஆனால் இந்த 70 வயதிலும் வாழ்க்கையில் அனுபவ அறிவை கூடை கூடையாக சம்பாதித்த பின்னரும்கூட, வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து தன் மனைவியைத் தேடி பயணித்து விட்ட இந்த முடிவில் எத்தனை சோகம் இருக்கிறது!!

இரண்டாவது!

ஒவ்வொரு வருடமும் ஊருக்குச் சென்று தங்கியிருந்து விட்டு திரும்பி வரும்போதெல்லாம் ஒரு பெரிய process எப்போதும் நடக்கும். சமையலறையிலுள்ள பாத்திரங்கள், மளிகை சாமான்கள் வைக்கும் டப்பாக்கள் எல்லாவற்றையும் கழுவித் துடைத்து பீரோவில் வைத்து அடுக்குவது, ப்ஃரிட்ஜ், டிவி, டிவிடி, மியூசிக் ப்ளேயர், ஏ.சி இப்படி எல்லா மின் சாதனங்களையும் ப்ளக்கை விலக்கி வைப்பது, காஸ் ஒயரையும் அதுபோல செய்வது, சோஃபா, கட்டில்கள், நாற்காலிகள், டைனிங் டேபிள், குளிர்சாதனப்பெட்டியின் மேற்புறம், டிவி மேல்-இப்படி எல்லாவற்றிலும் கனமான துணிகளால் மூடுவது, இப்படி எல்லா விஷயங்களையும் செய்து முடித்த பிறகுதான் ஏர்போர்ட் செல்ல காரில் ஏறுவோம். அதேபோல் இங்கிருந்து கிளம்பும்போது ஃபோன் செய்து விட்டால் எங்கள் மேலாளரும் வாட்ச்மேனும் ஆள் வைத்து எல்லாவற்றையும் எடுத்து சுத்தம் செய்து வீட்டை கழுவி விடுவது வழக்கம்.

[குளிர்சாதனப்பெட்டியில் மட்டும் மின் இணைப்பை விலக்குவதில்லை. ஒரு முறை சுத்தம் செய்த ஆள் யாரோ மின் இணைப்பைத் துன்டித்து விட்டார்கள். நாலைந்து மாதம் கழித்து நாங்கள் சென்ற போது ஃப்ரிட்ஜ் முழுவதும் பூஞ்சைக்காளான் பூத்து, கறுத்து அதைச் சுத்தம் செய்ய 2 நாட்கள் ஆனது.]

இந்த வழக்கம் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. இந்த வருடம் பிப்ரவரி மாதமும் இதுபோல எல்லாம் செய்து விட்டு இங்கு திரும்பி வந்தேன். மறுபடியும் ஜூலையில் திரும்பவும் ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியம் வந்தது. வழக்கம்போல ஃபோன் செய்து சுத்தம் செய்யச் சொன்னோம்.

மறு நாள் அந்த திகில் செய்தி வந்தது. சுத்தம் செய்யப் போன ஆட்கள் கதவைத் திறந்ததும் வீடெங்கும் புகை படிந்த நிலை. பற்றி எரிந்த வாசனை. ஹாலுக்கும் சமையலறைக்கும் இடையேயுள்ள கதவைத் திறந்ததும் Dining Room, சமையலறை, அதன் சுவர்களுக்கு மறுபக்கமிருக்கும் குளியலறை, டாய்லட் எல்லாம் கறுப்பாக ஆகியிருக்கிறது. சமையலறையில் இருந்த குளிர்சாதனப்பெட்டி தீப்பிடித்து எரிந்து கீழே சாய்ந்து விழுந்திருக்கிறது. அது விழுந்த இடம் காஸ் சிலிண்டருக்கு அருகே!! இன்னும் கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால் காஸ் சிலிண்டர்கள் வெடித்து வீடே பற்றி எரிந்திருக்கும்!! மிகப் பெரிய ஆபத்திலிருந்து என்ன காரணத்தினாலோ அன்று வீடு தப்பித்திருக்கிறது. இது நான்கு நாட்களுக்குள்தான் நடந்திருக்க முடியுமென்று பார்த்த எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் முதல் மாடியில் குடியிருப்பதாலும் கீழ் வீட்டில் குடியிருந்தவர்கள் அப்போதுதான் காலி செய்திருந்ததாலும் ஜன்னல்கள் மூடி வைக்கப்பட்டிருந்ததாலும் உள்ளேயே நடந்த இந்த விபத்து வெளியே தெரியவில்லை போலிருக்கிறது. புகைகூட வெளியே செல்லவில்லையா என்று தெரியவில்லை. சென்றிருந்தால் பக்கத்து வீட்டில் பார்த்திருக்க முடியும். நாங்கள் மறு நாள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டோம். கிராமத்திலிருந்து நாலந்து ஆட்கள் வந்து கழுவி சுத்தம் செய்து, பின்னர் பெயிண்டர் வந்து எல்லா சுவர்களையும் சரி பார்க்க ஒரு வாரமானது. ஷார்ட் சர்க்யூட் தான் காரணமாயிருக்கலாம் என்று பலர் சொன்னார்கள். குளிர்சாதனப்பெட்டி மேல் துணியாலோ, வேறு எதனாலுமோ மூட வேன்டாம், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதும் தீப்பிடிக்க அதுதான் காரணமாயிருந்திருக்கிறது என்றார்கள் சிலர்.

ஊருக்குத் திரும்பும்போது சிலிண்டர்கள் இரண்டையும் இணைப்பை நீக்கி, வீட்டு முகப்புக்கதவிற்கு வெளியே வைத்து அதற்கு அப்பாலுள்ள க்ரில் கேட்டை பூட்டி வந்தோம். இது ஒரு பாடமாக அமைந்தது. கனடாவிலுள்ள என் சினேகிதி குளிர்சாதனப்பெட்டியின் இணைப்பை நீக்கி முழுவதுமாக மூடாமல் ஏதேனும் முட்டுக்கொடுத்து ஓரளவு மட்டும் திறந்து வைத்திருந்தால் பூஞ்சைக்காளான் பிடிக்காது என்று நல்ல ஒரு தகவலை சென்ற மாதம் சொன்னார்.

அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் பாடங்களை கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அதிர்ச்சி அனுபவத்தால் எனக்குக் கிடைத்த பாடமும் அதன் பின் கிடைத்த யோசனைகளும் மற்றவர்களுக்கும் உதவ வேன்டுமென்ற நோக்கத்தில்தான் இந்த அனுபவத்தையும் இங்கே எழுதியிருக்கிறேன்.


அன்பு ஆசியா!





உங்களின் அன்பு விருதுகளுக்கு என் இதயங்கனிந்த நன்றி!
விருதுகளை நல் முத்துக்களாய் என் முத்துக்குவியல்களிடையே பதித்து விட்டேன்.
இந்த அழகிய விருதுகளை சகோதரிகள் புவனேஸ்வரி [மரகதம்],  ராமலக்ஷ்மி[முத்துச்சரம்], ஹுஸைனம்மா, சகோதரர்கள் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி, கோபி ராமமூர்த்தி,  தினேஷ்குமார் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கிறேன்!!

Tuesday 23 November 2010

நினைவில் என்றும் சங்கமித்திருக்கும் 10 பழைய திரைப்படப்பாடல்கள்

1960-ஆம் வருடங்கள் தமிழ்த்திரையிசையின் பொற்காலமென்று சொல்லலாம். ஜி.ராமநாதன், சுதர்சனம், விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோர் இசையுலகில் அரசாட்சி செய்த காலம். பின்னால் வந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர் மற்றெல்லா இசையமைப்பாளர்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி புகழேணியின் உச்சத்தில் ஏறி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைத் தந்தார்கள். கவிஞர் கண்ணதாசன் படைத்த எத்தனையோ கவிதைகள், இவர்கள் இசையமைப்பால் இனிய பாடல்களாக உயிர் பெற்று பி.சுசீலா, டி.எம்.செளந்தரராஜன், பி.பி.சீனிவாஸ், ஜானகி, சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, ஜிக்கி, இவர்களின் குரல்களில் ரசிகர்களை என்றென்றும் மயங்க வைத்தன. சிவாஜி கணேசனும் எம்.ஜி.ராமச்சந்திரனும் உணர்ச்சி மிக்க காட்சிகளை இந்தப் பாடல்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு உருவாக்கினார்கள். அதனால்தான் அது பொற்காலமாக அமைந்தது. இசையுலகில். அருமையான பாடல்கள் ஆயிரமிருக்க, என் மனதுக்கு மிக மிக நெருங்கிய பாடல்கள் சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறேன். இக்கால தலைமுறையினர் எத்தனை பேர் இவற்றைக் கேட்டு ரசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவசியம் கேட்டு ரசிக்க வேண்டும். அப்போதுதான் பழைய பாடல்களின் இனிமை, கருத்தாழம், ராக கம்பீரங்கள் புரியும். இனி என் மனதிற்கு மிக நெருங்கிய பாடல்கள்.. .. .. ..

1. "கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
      கண்டபோதே சென்றன அங்கே"

சுசீலாவின் தீஞ்சுவைக்குரலில் ' கர்ணன்' திரைப்படத்தில் அமைந்த அருமையான பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் சுத்த தன்யாசி ராகத்தில் தன் காதலன் கர்ணனை நினைத்து சுபாங்கி பாடும் பாடல். அப்படியே உருகிப் பாடியிருப்பார் சுசீலா. கவிஞர் கண்ணதாசனின்

"இனமென்ன குணமென்ன குலமென்ன அறியேன்,
 ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்.
கொடை கொண்ட மதயானை உயிர்கொன்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்"

வரிகளுக்கு சுசீலா தன் தேன் குரலில் உயிர் கொடுத்திருப்பார். எத்தனை முறை கேட்டாலும் அப்போதுதான் புதிதாய்க் கேட்பதுபோல மயங்க வைக்கும் பாடல் இது! எத்தனையோ பாடல்கள் வந்தாலும் சென்றாலும் என்றுமே என் மனதில் முதலிடம் பிடித்த பாடல் இது.

2. " பொன்னெழில் பூத்தது புது வானில்!
      வெண்பனித்தூவும் நிலவே நில்!
      என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை
      சென்றது எங்கே சொல்! சொல்!!"

இதுவும் அதே விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனின் கவிதையில் திருமதி. சுசீலாவும் திரு.டி.எம்.செளந்தரராஜனும் இணைந்து பாடிய பாடல்! பட்டி தொட்டிகளில் எல்லாம் அன்று இசைத்த, பிரபலமான பாடல்! கீழ்க்கண்ட

“ தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
  எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்!
  உன்னிரு கண் பட்டு புண்பட்ட நெஞ்சினில்
  உன் பட்டுக்கை பட பாடுகிறேன்!!”

வரிகளில் தமிழில் கண்ணதாசன் புகுந்து விளையாடியிருப்பார்! டி.எம்.எஸ். குரலில் வழியும் மென்மையான ஏக்கம் எப்போது கேட்டாலும் மனதை அப்படியே வருடிச் செல்லும்!

3. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
   கனவு கண்டேன் தோழி!
   மனதில்     இருந்தும் வார்த்தைகள் இல்லை,
   காரணம் ஏன் தோழி!

இது எனக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்கு மனதுக்கு நெருங்கிய பாடல்! மறுபடியும் விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கண்ணதாசன் கூட்டமைப்பில் சுசீலாவின் தேன் குரலில் வெளிவந்த இனிய பாடல்! பாடலின் கருத்தாழமும் சோகமும் மயங்க வைக்கும் இசையமைப்பும் அப்படியே சுசீலாலிவின் குரலிலிருந்து வழியும்!!

இந்தப் பாடலில் வரும்

இன்பம் சில நாள், துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில், துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி?

என்ற வரிகள்-எந்தக்காலத்திற்கும் பொருந்தும்படியாக அத்தனை அழகான வரிகள்!!

4. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
    வளரும் விழி வண்னமே!
   வந்து  விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
   விளைந்த கலை அன்னமே!

சிவாஜி கணேசன் தன் மகனிடம் பாடும் தாலாட்டுப் பாடல் இது! கண்ணதாசன் சுந்தரத் தமிழில் அருமையான வரிகளை எழுதி, அவற்றிற்கு வழக்கம்போல விஸ்வநாதன் ராமமூர்த்து உயிர் கொடுத்து ‘பாச மலர்’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடலிது! அண்ணனுக்கும் தங்கைக்குமிடையேயுள்ள பாசத்தை இதை விட வலிமையாக, நெகிழ்வாக எந்த திரைப்படமும் இதுவரை பிரதிபலித்ததில்லை. இனியும் இது போன்ற அருமையான படம் வருமா என்பதும் சந்தேகமே! மகனுக்குப் பாடும் தாலாட்டுப் பாடலாக முதலில் உருவெடுத்தாலும் அண்ணனும் தங்கையும் பிரிந்திருக்கிற சோகத்தைத்தான் இந்தப் பாடல் அதிகமாகப் பிரதிபலிக்கும். அந்தக் காலத்தில் யார் இந்தப் படத்தைப் பார்த்தாலும் கர்சீப் முழுவதுமாக நனைந்து விடும் என்பார்கள்! அதுவும் பாடலின் இறுதியில்

கண்ணின் மணி போல, மணியின் நிழல்போல
கலந்து பிறந்தோமடா!- இந்த
மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா!
உறவைப் பிரிக்க முடியாதடா!

இந்த வரிகளைக் கேட்கையில் விழியோரங்களில் கண்ணீர் கசிவதை எப்போதுமே தவிர்க்க முடிவதில்லை!

5. தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்வேன்!
    சுட்டால் பொன் சிவக்கும், சுடாமல் கண் சிவந்தேன்!

சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த அருமையான டூயட் பாடல் இது. எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி நடித்த ‘படகோட்டி’ என்ற படத்தில் விஸ்வநாதன் -ராமமூர்த்தி-கண்ணதாசன் கூட்டணியில் டி.எம்.எஸ்-சுசீலா இருவரும் தங்களின் தேன்மதுரக்குரல்களில் இழைத்த இனிமையான பாடல்! வண்ண மலர்களும் காற்றில் அசையும் மரங்களும் இந்தப்பாடலின் காட்சிக்கு இனிமை சேர்க்கும்.

6. கண்ணுக்குக் குலமேது? கர்ணா!
    கருணைக்கு இனமேது?

கர்ணன் திரைப்படத்தில், கர்ணனை அவனுடைய குலத்தைச் சொல்லி இழிவுபடுத்தியதால் ஏற்பட்ட வேதனையில் அவன் குமைந்து, தளர்ந்து நிற்கையில் அவன் மனைவி சுபாங்கி அவனுக்கு ஆறுதல் சொல்லிப் பாடுவதாய் அமைந்த பாடல். சுசீலாவின் கணீரென்ற குரலின் இனிமையும் ஆழ்ந்த கருத்து அமைந்த வரிகளும் ஒன்றுக்கொன்று இந்தப் பாட்டில் போட்டி போடும்.

பாடலின் நடுவே வரும்

கொடுப்பவர் எல்லாம் மேலாவார்!
 கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்!
 தருபவன் இல்லையா கர்ணா நீ?”

வரிகள் மிகவும் உன்னதமானவை. யாசகம் கேட்பதை இல்லையென்று சொல்லாமல் உடனே வழங்க மிகுந்த கருணையும் சுயநலம் சிறிதும் இல்லாத தன்மையும் வேண்டும். அப்படிப்பட்ட மனதுடைய நீயல்லவா எல்லோரையும் விட மேலானவன் என்று அவன் மனைவி ஆறுதல் படுத்தும் இந்த வரிகளில் கண்ணதாசன் வாழுகிறார்!

7. “ மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
      வாழ்க்கையில் நடுக்கமா?

சுமைதாங்கி என்னும் திரைப்படத்தில் தன் மென்மையான குரலினிமையில் பி.பி.சீனிவாஸ் இந்தப்பாடலை மனமுருகிப் பாடியிருப்பார். துன்பங்களும் சோகங்களும் மனதை ரணமாக்கி ரத்தம் கசிந்திருக்கும் தருணங்களில் இந்தப்பாடலைக் கேட்க நேரும்போது மனம் அமைதியடையும். அந்த மாதிரி அமைதிப்படுத்தக்கூடிய சாந்தமும் ஆழமான வார்த்தைகளும் மயிலிறகு மாதிரி மனதை வருடிக்கொடுக்கும் இனிமையும் இந்தப்பாட்டில் என்றுமே இருக்கும்!

இதில் வரும்

வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்!
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதியிருக்கும்!!

என்ற வரிகள் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவை!!

8. விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே!
    கண்ணோடு கொஞ்சும்
    கலையழகே! இசையமுதே!

புதையல் என்ற திரைப்படத்தில் இதே கூட்டணியில் அமைந்த கவிஞர் மாயவநாதனின் பாடல் இது!

டி.எம்.எஸ்.செளந்தரராஜன் புகழேணியில் ஏறுவதற்கு முன் இப்பாடலைப்பாடிய சி.எஸ்.ஜெயராமனின் குரல்தான் திக்கெங்கிலும் ஒலிக்கும். இவரது கம்பீரமான குரலில் தமிழ் இனிமை பெற்று சிறந்திருக்கும்! அலைகளினூடே வெகுளித்தனத்துடன் கூடிய காதலும் இளமையுமாய் பாடி நடித்த சிவாஜி-பத்மினிக்கு இந்த இனிமையான பாடல் என்றுமே ஒரு அழியாத சமர்ப்பணம்!

9. நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
   தேன்மொழி பேசும் சிங்கார செல்வம்!

ஜி. ராமநாதனின் இசையில் கா.மு.ஷெரீப் எழுதி ‘நான் பெற்ற செல்வம்’. என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது! திரையில் சிவாஜி கணேசன் தன் குழந்தையிடம் பாடுவதாக அமைந்திருக்கும். டி.எம்.எஸ் தன் கம்பீரமான குரலில் அருமையாகப் பாடியிருப்பார். ஜோன்பூரி ராகத்தில் இழைத்த பாடல். தமிழ்த்திரைப்படங்களில் இதுவரை குழந்தைகளை முன்னிலைப்படுத்தி எத்தனயோ பாடல்கள் வந்திருக்கின்றன! ஆனால் கருத்தாழத்தில் இதை மிஞ்சிய பாடல் எதுவுமில்லை என்றுதான் சொல்வேன். அதுவும் இப்பாடலின் இடையே சில அருமையான வரிகள் வரும்.

“ தொட்டால் மணக்கும் ஜவ்வாது!
  சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு!
  எட்ட இருந்தே நினைத்தாலும்
  இனிக்கும் மணக்கும் உன் உருவம்!”

எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறார் இந்த வரிகளில் குழந்தையின் பெருமையை! தொட்டால் மணக்கும் ஜவ்வாது.. சுவைத்தால் மட்டுமே தேன்பாகின் இனிப்பு தெரியும். ஆனால் அந்தக் குழந்தை தொலைவில் இருந்தால்கூட, அதை நினைக்கும்போதே ஜவ்வாதின் மணத்தையும் தேனின் சுவையையும் மனதால் உணர முடியும்! எத்தனை அழகான கற்பனை!

10. நிலவே என்னிடம் நெருங்காதே!
      நீ நினைக்கும் இடத்தில் நானில்லை.

‘ராமு’ திரைப்படத்தில் பிபி.சீனிவாஸ் சோகத்துடன் பாடும் பாடல். படத்தில் ஜெமினி கணேசனும் கே.ஆர்.விஜயாவும் சோக பாவனைகளை முகங்களில் பிரமாதமாகக் காட்டியிருப்பார்கள். தன்னைக் காதலிக்கும் பெண்ணைப் பார்த்து தன் மனவேதனையையும் இயலாமையையும் சொல்லும் பாடல்! அதுவும் பாடலின் நடுவே வரும்

“ கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
  என் கோலத்தில் இனி மேல் எழில் வருமோ?
  பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்.
  என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ?

வரிகள் அந்தக் கதாபாத்திரத்தின் சோக உணர்வுகளை அற்புதமாகப் படம் பிடித்துக் காண்பிக்கும் வலிமை கொண்டவை! கண்ணதாசனின் சோக மயமான பாடல்கள் சாகாவரம் பெற்றவை!

Wednesday 17 November 2010

வீட்டுக்குறிப்புகள்

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய சமயங்களில் பலன் கொடுக்கின்றன. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து எழுதியிருக்கின்றேன். யாருக்கேனும் தக்க சமயத்தில் இவை கை கொடுத்தால் மகிழ்வாக இருக்கும்!

 1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.


2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.



3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.


4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

 5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.


6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

 7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.


8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.
 9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.


10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.












Friday 12 November 2010

புறப்படு பெண்ணே புவியசைக்க!

இன்றைய பெண்கள் நிச்சயம் தங்களின் மனோபலத்தால், அறிவினால் புவியசைத்து பெருமிதம் கொள்ள வைக்கிறார்கள் பல துறைகளில்! அதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

நம் பாரதத்தில் எத்தனையோ பெண்கள் அவற்றிற்கு நல் உதாரணங்களாய் திகழ்கிறார்கள். அதிலும் எந்த விதக் குறைகளும் இல்லை.

பின் எவற்றில் குறைகள் ஏற்படுகின்றன?

குடும்ப வாழ்க்கை, அன்பு, பாசம், தாய்மை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, இவற்றின் முழு அர்த்தங்கள் புரியாமல்தான் இன்று பெரும்பாலான பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். அன்றைய காலக்கட்டத்தில் அறிவுடன் அச்சம், நாணம்,மடம், பயிர்ப்பு போன்றவற்றையெல்லாம் பெண்கள் மனதில் அவர்களுடைய பெற்றோரும் வீட்டிலிருந்த முதியவர்களும் பதிய வைத்தார்கள். குடும்பம் ஒரு கோவில் என்பதும் பெரியவர்களுக்கு மரியாதை தரவேண்டுமென்பதும் அவர்கள் வளரும்போதே புரிந்திருந்தது. நாணம் என்பது சும்மா வெட்கித் தலைகுனிதல் என்பதல்ல, அந்நிய ஆண்களிடம் வருவது மட்டுமல்ல, நல்லன அல்லாதவற்றுக்கும் சுய தவறுகளுக்கும்கூட அந்த உணர்வு தன்னிடத்தில் இருக்க வேண்டுமென்று புரிந்து வளர்ந்தார்கள். கவிஞர் பாரதியின் ‘நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகளுடன்’ வாழ வேண்டிய அறிவை நல்ல புத்தகங்கள் கொடுத்தன. அடுத்தவர் மனதையும் பார்வையையும் கவராத- இழுக்காத அளவில் அவர்களின் உடையலங்காரம் இருந்தது.

ஆனால் இன்றைக்கு?
திருமண வயதைக் கடந்தும் பெண்கள் சம்பாதிக்கிறார்கள். சம உரிமை பேசப்படுகிறது. மேல்நாட்டுக் கலாசாரங்களைப் பின்பற்றுகிறார்கள். உடைகள் விஷயத்திலும் பழக்க வழக்கங்களிலும் அத்து மீறல்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிறு நகரத்தில்கூட இரவு நேரத்தில் மட்டுமே அணிய வேண்டிய ‘நைட்டி’ உடை வெளியே கடைகளுக்குக்கூட போய்வர பயன்படுத்தப்படுகிறது. இரவு இரண்டாவது ஷோவில்கூட கல்லூரி மாணவிகள் தென்படுகிறார்கள். ஆறு வயது குழந்தைகள் கையில் கூட மொபைல் ஃபோன்கள்! பெரிய நகரங்களில் கேட்கவே வேண்டாம். உலகளவில் பெண்களின் பார்வையும் அறிவும் விரிவடைய விரிவடைய தன் பெற்றோருடனும் மற்றோருடனும் அவர்கள் தர்க்கம் புரிகிறார்கள். திருமண விஷயத்திலோ கேட்கவே வேண்டாம். தனக்கு வரவேண்டிய மணமகன் எப்படி இருக்கவேண்டுமென்று திருமண மையங்களில் வாதிடுவதும் தன் பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுவதும் பரவலாக எங்கும் நடக்கிறது. மாலை நேரங்களில் பள்ளிச் சிறுவர்கள், சிறுமிகள் மொய்க்கும் கம்ப்யூட்டர் செண்டர்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. அவர்கள் என்ன அங்கு செய்கிறார்கள், என்ன பார்க்கிறார்கள் என்பது பெற்றோருக்குத் தெரிவதில்லை. பெற்றோர் பெருமையாகவும் நம்பிக்கையின் பேரிலும் கொடுக்கும் சுதந்திரம் பெரும்பாலும் நிறைய வழிகளில் இன்று இளைஞர்களால் மீறப்படுகிறது.

நான் ஒரு சமயம் எனக்குத் தெரிந்த ஒரு திருமண மையத்திற்குச் சென்ற போது, 30 வயதைக் கடந்த ஒரு பெண், தன் பெற்றோரையும் தாய் மாமனையும் பேச வேண்டாமெனக்கூறி வாதிட்டுக்கொண்டிருந்தார். அந்த மையத்தின் நிறுவனர் அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.

‘ உனக்கு இப்போது 31 வயது நடக்கிறது. உனக்கு வரும் வரன் நிச்சயம் 35 வயதைக் கடந்துதான் இருப்பார்கள். தலையில் சிறிது வழுக்கை விழுந்திருக்கலாம். நீ தோற்றமும் அழகாக, இளமையாக இருக்க வேண்டும், படிப்பும் உன்னை விட அதிகம் இருக்க வேண்டுமென்று சொன்னால் எப்படி? நீயே இத்தனை வயது வரை படித்து எல்லா எழுத்துக்களையும் பின்னால் போட்டுக்கொண்டிருக்கிறாய். 2 லட்சம் சம்பாதிக்கிறாய். இதில் எல்லாவற்றிலும் உனக்கு வரும் மாப்பிள்ளை அதிகமாக இருக்க வேண்டுமென்று சொன்னால் எப்படி? எதிலாவது நீ விட்டுக்கொடுத்தால்தான் நல்ல வாழ்க்கை அமையும்’ என்றார்.

ஆனால் அந்தப் பெண் இதில் யாருடைய யோசனனயும் தேவையில்லை என்று சொல்லி விட்டது. கூட்டுக்குடும்ப நன்மைகள், குழந்தை பாக்கியம், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அன்புடன் இல்லற வாழ்க்கையை வாழுவது-இந்தக் கோட்பாடுகள் எல்லாம் போய், இந்த மாதிரி கோட்பாடுகள்தான் திருமணங்களை நிச்சயிக்கிறது. இப்படி அமைகிற வாழ்க்கை பரஸ்பர வித்தியாசங்களிலும் விவாதங்களிலும் அடிபட்டு சீக்கிரமே விவாகரத்தில் முடிகிறது.

இன்னொரு சின்ன பெண்- பள்ளி வாழ்க்கையையே இன்னும் முடிக்காதவள்- சில வருடங்களுக்கு முன் ஒரு பிரயாணத்தில் அவளைச் சந்தித்தேன். பூமியிலிருந்து வானம் வரை எல்லா விஷயங்களையும் தொட்டுப் பேசுகிற அளவு 15 வயதுக்குள் அறிவு முதிர்ச்சி இருந்தது. கூடவே தற்போது நகரத்தில் எந்தப் பள்ளியில் கருச்சிதைவுகள் அதிகம் நடக்கின்றன, அவள் வயது பெண்களும் ஆண்களும் கணினியை எப்படியெல்லாம் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும் விலாவாரியாகச் சொன்னாள்.

இப்படி மிகச் சிறு பிராயத்திலேயே எல்லாமே தெரிந்து விடுவதால் சீக்கிரமே முகத்தில் முதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. எப்போதுமே அந்த வயதில் வெகுளித்தனத்துக்கு ஒரு அழகு இருக்கும். அது இன்றைய இளம் பெண்கள் நிறைய பேரிடம் இல்லை என்றுதான் சொல்வேன்.

எப்போதுமே பாடாத கவிதைக்கும், பேசாத மொழிக்கும் சிந்தாத கண்ணீர்த்துளிகளுக்கும் மதிப்பு அதிகம். இவை பரிசுத்தமானது. இவற்றிற்கு நிகரான பரிசுத்தம் வளர்ந்து வரும் ஒரு இளம் பெண்ணுக்கு இருக்கின்றது.

அதனால்தான் மனசு பரிசுத்தமாக இருக்கும்போதே அன்றைக்கு இளம் வயதில் மனமும் வளையும் பருவத்தில் பெண்களுக்குத் திருமணம் செய்வித்தார்கள். புகுந்த வீட்டின் கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொண்டு, எல்லாவற்றிலும் பக்குவப்பட மனது தயாரானது. ஆனால் இன்றைக்கோ, ஒரு சின்ன சலசலப்பு கூட விவாகரத்தில் முடிகிறது, பெற்றோரின் துணையுடன்!

எனக்குத் திருமணமாகி, புகுந்தவீடு செல்வதற்கு முன் என் பாட்டி என்னிடம் வந்து அவரின் திருமணத்தின்போது அவருடைய தகப்பனார் பரிசாகக் கொடுத்த கடிதத்தைக் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னார். அதைப்படித்து நான் அசந்து போனேன். அதில், ஒரு பெண் தன் மாமனார், மாமியாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், கணவரிடம் எப்படி மரியாதையுடன் இருக்க வேண்டும், பொறுப்புகளை எப்படி பொறுமையுடன் சுமக்க வேண்டும்-இப்படி எத்தனையோ புத்திமதிகள் அதில் இருந்தன. நானும் அப்படியே நடந்து கொள்வேன் என்று என் பாட்டியிடம் உறுதியளித்தபோது அவர்களின் முகத்தில் எத்தனை சந்தோஷம்!

ஆனால் இன்றைய நடைமுறையில்?

பெரும்பாலான பெண்கள் வீட்டில் அவர்களின் தாயார்கள் ‘ என் பெண்ணை எந்த வேலலயும் செய்யாதபடி தான் வளர்க்கிறேன். காப்பி வைக்கக்கூடத் தெரியாது. போகிற இடத்தில்தான் கஷ்டப்படப்போகிறாள். இங்கேயாவது அதுவரை நிம்மதியாக, கஷ்டப்படாமல் இருக்கட்டுமே’ என்று பேசுவது இப்போது பரவலாக இருக்கிறது. திருமணமாகுமுன்னரேயே இந்த மாதிரி விஷ விதைகள் புகுந்த வீட்டைப்பற்றி பெண்களின் மனதில் விதைக்கப்படுகின்றன. அப்புறம் எப்படி அந்தப் பெண்ணால் சின்ன சின்ன சலசலப்புகளைக்கூட தாங்க முடியும்? குடும்பமென்ற ஆலமரத்தின் விழுதுகளைத் தாங்க முடியும்? உறுதியான அஸ்திவாரங்களல்லவா குடும்பமென்ற கட்டிடத்தை உறுதியாக கடைசி வரைத் தாங்கிப் பிடிக்கிறது?

இதை இன்றைய பெற்றோர் உணர வேண்டும். வெறும் கல்வியும் சம்பாத்தியமும் ஒரு பெண்ணை முழுமையாக்காது. தான் கொடுக்கும் கல்வியும் அவள் சம்பாதிக்கும் செல்வமும் அவளுடைய எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சோதனைகளை முறியடிக்கக்கூடிய ஆயுதங்கள் என்பதை பெற்றோர் அவர்கள் வளர வளர உணர்த்த வேண்டும். அதற்கும் அப்பால் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதி நாகரீகமான உடைகளும் பேச்சும் பாவனையும் பெண்ணீயமல்ல, ‘நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்தான் பெண்களுக்கு அழகு என்பதையும் ஆடர்வர்களும் மற்றோரும் மதிக்கத்தக்க ஆடையலங்காரம்தான் அவளுடைய உண்மையான அணிகலன்கள் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

அடக்கம், பொறுமை, அன்பு, அறிவு, கருணை என்ற ஆயுதங்களுடன் புவியசைக்கப் புறப்படும் பெண்ணை யாரால் வெல்ல முடியும்?

இப்பதிவு இம்மாத ‘ லேடீஸ் ஸ்பெஷலில்’ வெளி வந்திருக்கிறது. திருமதி. தேனம்மையின் தூண்டுகோலுக்கும், இதை வெளியிட்ட ‘ லேடீஸ் ஸ்பெஷல்’ ஆசிரியருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!
ஓவியம் மட்டும் இந்த வலைப்பதிவிற்காக இப்போது நான் வரைந்து சேர்த்திருக்கிறேன். கணினியில் PAINT பகுதியில் வரைந்து இணைத்திருக்கிறேன்.
இஸ்லாமிய சகோதர சகோதரியர் அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள்!!

Sunday 7 November 2010

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”!

இன்றைய முத்துக்குவியலில் என்னை நெகிழ வைத்த மூன்று மனித முத்துக்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். இவர்களைப்பற்றி நினைக்கையில் பழைய பாடலின் ஒரு அருமையான வரி நினைவில் எழுகிறது.

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”!

அடுத்தவருக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டுமென்று தன்னை வருத்திக்கொண்டு தொடர்ந்து வரும் இடர்களை சமாளித்து தன்னலம் கருதாது தன்னுடைய முயற்சியிலேயே ஊக்கத்துடன் ஈடுப்பட்டு வருபவர்களை வேறெந்தப்பெயர் சொல்லி அழைப்பது?

முதலாம் முத்து:

கோவையில் ' தோழர் அறக்கட்டளை' என்ற பெயரில் சில நல்ல உள்ளங்கள் செய்து வரும் மகத்தான தொண்டு. சாந்த குமார், அண்ணாத்துரை, ஜீவானந்தம், இப்ராஹீம், சம்பத்குமார் என்ற பூ வியாபாரிகள் பல வ‌ருடங்களுக்கு முன்னர் இரத்த தானம் செய்ய அரசு மருத்துவமனைக்குச் சென்ற போது அங்கே சவக்கிடங்கில் அடக்கம் செய்யாத பல அனாதைச் சடலங்கள் துர்நாற்றம் வீசக் கிடந்ததைக் கண்டு அன்றே 'நாமெல்லாம் இருக்கும்போது யாரும் இங்கே அனாதை இல்லை. நாய்கள், பூனைகளுக்குக்கூட இன்று ப்ளூ கிராஸ் அமைப்புகள் வந்து விட்டன, 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்று நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதப் பிறவிக்கு இப்படி ஒரு நிலை வருவதை இனியும் அனுமதிக்கக்கூடாது ' என்ற சபதம் எடுத்துக்கொண்டார்கள். மார்ச் 22ந்தேதி 2004ஆம் வருடம் நான்கு அனாதை சடலங்களை அடக்கம் செய்ய ஆரம்பித்த இவர்கள் சமீபத்தில் 1000 சடலங்களை அடக்கம் செய்து முடித்திருக்கிறார்கள். மருத்துவமனையிலிருந்து இவர்கள் தங்களது சொந்த செலவில் உடல்களை பெற்று எந்த வித சாதி, மத சடங்குகளுமில்லாது தூய்மையான வெள்ளைத்துணி போர்த்தி மலர்கள் தூவி நல்லடக்கம் செய்கிறார்கள். ஆயிரமாவது உடலை, ' இத்தனை நாள் நம்முடன் வாழ்ந்து இறந்த இந்த உடலுக்கு நாம் அனைவருமே உறவினர். இந்த உலகத்தில் யாருமே அனாதை இல்லை. ஒருவருக்கொருவர் உறவினர்தான்' என்ற விழிப்புணர்வை உலகுக்கு ஏற்படுத்த மானவர்கள், முதியோர், பெண்டிர், திருநங்கைகள், ஆட்டோ ஓட்டுனர்கள் என்று ஆயிரம் பேரை அழைத்து அவர்கள் பின்தொடர அந்த உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்திருக்கின்றனர். தற்சமயம் மனித நேயம் உள்ள பல அமைப்புகள் அவர்களுக்கு உதவி வருகிறார்கள். இவர்களின் மனித நேயத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

இரண்டாவது முத்து:

2008ஆம் ஆன்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வின் முடிவின்படி, தெற்காசியாவிலேயே அதிகமாக 73 சதவிகிதம் சாலை விபத்துக்கள் இந்தியாவில்தான் நடந்து வருகின்றன. அந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துக்களில் இரண்டு லட்சத்து பத்தாயிரம் பேர் இந்தியாவில் இறந்து போயிருக்கின்றனர் என்பதை அறியும்போது பிரமிப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது.


இந்த சாலை விபத்துக்களை கூடியவரை குறைக்க வேண்டுமென்ற நல்ல எண்னத்துடன் சுரேஷ் என்ற தனி மனிதர் ' சாலை பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்புக்களை கோவையிலும் சென்னையிலும் ஏற்படுத்தி சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்த வேன்டுமென்பதையே தன் முழுநேரப்பணியாக செய்து வருகிறார். கணினி பொறியாளரான இவர் தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றிலும் சில வருடங்களுக்கு முன் நடித்திருக்கிறார்.

' 18 வயதுப்பையனுக்கு கார் வாங்கிக்கொடுத்து அழகு பார்க்கும் பெற்றோர் இருக்கும்வரை சாலை விபத்துக்கள் அதிகரிக்கவே செய்யும்' என்று சொல்லும் இவர் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் இவர்களுக்காக விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார். ஸ்லைடுகள், குறும்படங்கள்., கவிதைகள், கலந்துரையாடல்கள் மூலம் அவர்கள் சிந்தனையைத் தூண்டி விட்டு அறிவு நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி,பின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் அவரது பணியாக குறிப்பிடுகிறார். இவரது முயற்சியும் அருமையான தொண்டாக மக்களுக்குப் பயன் தருகிறது! தனி மனிதனாக, இளைஞர்களுக்கு விழிப்புணர்வைத்தூண்டும் இவரது முயற்சிகள் வேறெந்த சேவைக்கும் குறைந்ததில்லை!

மூன்றாவது முத்து:


சென்னையில் வசிக்கும் 65 வயதான சர்புதின் என்பவர். தொடர்ந்த புகைப்பழக்கத்தால் தொண்டையில் புற்று நோய் பாதித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குரலையும் இழந்தவர். தொண்டையில் ஒரு ஓட்டை போடப்பட்டு அதன் மூலம் சுவாசிக்கிறார். மூன்று வேளைகளும் திரவ உணவுதான் இன்று வரை. வாழ்நாள் முழுவதும் குனிந்த நிலையிலேயே குளிக்க வேண்டிய சூழ்நிலை. ‘வேவ்ரிங்ஸ்’ என்ற அதி நவீன சாதனத்தை கழுத்தின் இடது ஓரத்தில் வைத்தபடி கம்ப்யூட்டர் குரலுடன் பேசி வருகிறார். அதாவது தொண்டை நரம்புகளின் அதிர்வுகளை, சர்புதினின் குரலாக உருமாற்றித் தருகிறது இது!

‘ நான் புகைப்பிடித்தபோது வெளியான புகையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்களோ? அதற்காகக் கிடைத்த தண்டனைதான் இது” என்று வேதனைப்படுகிறார் இவர். தன்னை மாதிரி மற்றவர்கள் துன்பப்பட்டுவிடக்கூடாது, அடுத்தவர்களுக்கு எப்படியாவது உதவமுடியாதா என்று யோசித்தவருக்கு ஒரு நல்ல வழி கிடைத்தது.

சென்னையில் புகைப்ப்பிடிக்கும் பழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்காக ‘ SMOKE-FREE CHEENAI’ என்ற அமைப்பு தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனருடன் கலந்து பேசி சென்னையில் நடத்தப்படும் புகை ஒழிப்பு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு உருக்கமாகப் பேசி வருகிறார்.

“ சிகிரெட் புகையில் 4000ற்கும் மேற்பட்ட நச்சுப்பொருள்கள் உள்ளன. இதில் 50 வேதிப்பொருள்கள் புற்று நோயின் தொற்று. பீடி, சிகிரெட் பிடித்து வெளியிடும் புகைக்கு அப்பாவிகளும் ஆஸ்துமா, பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் புற்று நோய், மூச்சுக்குழல் நோய், மூளைக்கட்டி, இன்னும் பலவித புற்று நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் புகை பிடிக்கும் பழக்கத்தால் பலியாகும் லட்சக்கணக்கானவர்களில் கணிசமானவர்கள் அடுத்தவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்கள் என்பது தாங்க முடியாத துன்பம்! குரல் வளம் இல்லாத நான் உங்களுக்காக குரல் கொடுக்கிறேன். தயவு செய்து புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவீர்களா?” என்று கருத்தரங்கம் தோறும் உருகிப் பேசுகிறார்.

நோயின் கடும் துன்பத்தால் முடங்கிக் கிடக்காமல் தன் பாதிப்பு மாதிரி யாருக்கும் வந்து விடக்கூடாதென்ற அக்கறையுடன் பாடுபடும் இவருடைய மனித நேயத்தைப் பாராட்ட வார்த்தைகளில்லை!

Tuesday 2 November 2010

ஜாதகமும் நானும்-2

என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தபோது, ஒரு நாள் அவர் பெண்ணுக்கு திடீரென ஒரு வரன் வந்துள்ளதாக அவர் கணவர் ஊரிலிருந்து ஃபோன் செய்தார். கூரியர் மூலம் வந்த மாப்பிள்ளையின் விபரங்கள் எல்லாமே நன்கிருந்தன. என் சினேகிதி பிராமண குலம் என்பதாலும் அவர் சமூகத்தில் இதெல்லாம் தவிர்க்கமுடியாதவை என்பதாலும் ஒரு நல்ல ஜோதிடரிடம் போக வேண்டும் என்றார். தெரிந்த ஒருவரிடம் கேட்டு அவர் சொன்ன மிகப் பிரபலமான ஜோதிடரிடம் சென்றோம். அவர் ‘பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும் கொடுத்து விட்டு செல்லுங்கள். நாளை வாருங்கள்’ என்றார். அதன்படியே மறு நாள் சென்றோம். கூட்டம் வேறு இருந்தது. ஜோதிடர் என் சினேகிதியிடம் ‘ உங்கள் பெண்ணுக்கு மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும். இதுபோல சில ஜாதகங்களை நம்பி கல்யாணத்தில் இறங்க வேண்டாம். பொருத்தம் இருப்பது மாதிரி தோன்றும் அதை நம்பி நீங்கள் திருமணம் செய்தால் பையன் உங்கள் பெண்ணை விட்டு விட்டு ஓடிப்போய் விடுவார். “ என்று ஒரேயடியாக குண்டைப் போட்டார். என் மகனின் ஜாதகத்தையும் முதன் முதலாக காண்பித்தேன். என் மகனின் ஜாதகத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லையென்றும் ஆனால் எப்படி முயன்றாலும் மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும் என்றார். எனக்கு இதில் எல்லாம் பழக்கமோ, நம்பிக்கையோ இல்லையென்பதால் என் மனதில் எந்த பாதிப்புமில்லை. ஆனால் வீட்டுக்குச் சென்றதிலிருந்து இரவு முழுவதும் என் சினேகிதியின் விழிகளிலிருந்து கண்ணீர் மழைதான் பொழிந்து கொண்டிருந்தது. நான் எவ்வளவு சமாதானம் சொன்னாலும் மனம் ஆறவில்லை அவருக்கு! ‘ கவலைப்படாதே, நாம் வேறு ஒரு நல்ல ஜோதிடரைத் தேடுவோம்’ என்று சமாதானம் செய்தேன்.

[ஆனால் உண்மையில் நடந்ததென்னவோ, என் மகனுக்கு ஆறு மாதங்கள் கழித்து திருமணம் நடந்தது. அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து என் சினேகிதியின் பெண்ணுக்குத் திருமணம் நடந்து கழிந்த இரண்டு வருடங்களில் ஒரு அழகான ஆண் குழந்தைக்கும் தாயாகியுள்ளார்! ]

மறுபடியும் வேறு ஒரு சினேகிதியின் பரிந்துரை பேரில் ஊருக்கு வெளியே ஒரு ஜோதிடரைப்பார்க்கச் என்றோம். சிவப்பழமாக வயதானவராக அமர்ந்திருந்தார் அவர். பக்கத்தில் நிறைய ஜோதிட புத்தகங்கள், நோட்டுக்கள், கடவுள் சிலைகள்! அவர் ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்கச் சென்றபோதுதான் பார்த்தேன், அவரின் இடப்பக்கம் வெளிநாட்டு மது வகைகள் பல தினுசில் இருந்ததை! உடனேயே சினேகிதியிடம் விபரம்கூட சொல்லாமல் எழுந்து வந்து விட்டேன். அப்புறம் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஒரு பக்கம் தாங்க முடியாத கோபம், மறு பக்கமோ சிரிப்பு வேறு!

எந்த விஷயத்திலுமே நம்பிக்கை இருப்பதும் இல்லாமலிருப்பதும் மனமும் அறிவும் சார்ந்த விஷயங்கள். ஆனால் என்னவென்றே தெரியாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவது மிகவும் முட்டாள்தனமாகத் தோன்ற ஆரம்பித்தது. ஜாதகங்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்கள், இண்டர்னெட், இவைகள் எல்லாம் உதவிகள் செய்தன. எப்படி ஆத்திக வாதங்களுக்கும் நாத்திக வாதங்களுக்கும் இன்று வரை ஒரு முடிவில்லையோ, அதுபோலத்தான் இதுவும். ஜாதகங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அதை உறுதி செய்ய நிறைய வாதங்கள் உள்ளன. அதே சமயம் அதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிர்வாதங்களும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன. அதனால் அதிகம் மூளையைக் குழப்பிக்கொள்ளாமல் அதைப்பற்றிய விஷயங்களை ஓரளவு தெரிந்து கொள்ளவே இந்த ஆராய்ச்சிகளைச் செய்தேன்.

20 வருடங்களுக்கு முன்னால்வரை இந்த பழக்கம் குறிப்பிட்ட சமுதாயத்தில் மட்டுமே அதிகமாக இருந்தது. இப்போதோ ஜாதகப்பொருத்தம் பார்க்காத ஜாதிகளே இல்லை. முதலில் ஜாதகப்பொருத்தம் பார்த்து, பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே, பெண்னையோ, மாப்பிள்ளையையோ பார்ப்பதற்கும் மற்ற விஷயங்களையும் பற்றிப் பேசவும் இரு தரப்பிலும் சம்மதிக்கின்றனர். அதுவும் என் விஷயத்தில் பெண் வீட்டை அழைத்துப் பேச முற்படும்போதே, ‘ மாப்பிள்ளை வீடான நீங்கள்தான் முதலில் ஜாதகம் பார்க்க வேண்டும், அதன் பின் தான் நாங்கள் பார்ப்போம். அதனால் பார்த்ததும் திரும்பக் கூப்பிடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள்.

பொதுவாக திருக்கணித முறைப்படியும் பாம்பு பஞ்சாங்க[வாக்கியப்பஞ்சாங்க] முறைப்படியும்தான் ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன. இதில் திருக்கணித முறையை ஒட்டித்தான் அனைத்து கம்யூட்டர் ஸாப்ட்வேர்களிலும் ஜாதகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறைப்படி தயாரிக்கப்படும் ஜாதகங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று சரியாகவே இருக்கும். வைதீகர்களும் பண்டிதர்களும் பின்பற்றுவது வாக்கியப்பஞ்சாங்கத்தை மட்டுமே. இதில் ஒருவரின் கணிப்புபோல மற்றவருடைய கணிப்பு இருப்பதில்லை. இவர்கள் திருக்கணித முறையை ஒத்துக்கொள்ளுவதில்லை. ஒருவரின் ஜாதகம் இந்த இரு முறைகளிலும் வேறுபடும்.

மற்ற மதங்களிலும் வெளி நாடுகளில் சிலவற்றிலும் ஜாதகம் பார்ப்பதைக் கேள்வியுற்றபோது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. என் வீட்டில் வேலை செய்யும் கிறிஸ்தவப்பெண்[தெலுங்கு], அவர்கள் சமூகத்தில் ஜாதகம் பார்க்காமல் யாருமே திருமணம் செய்வதில்லை என்றார்.

இப்படி ஜோதிட முறைகளில் பல வகைகள் இருக்கும்போது, ஜோதிடர்களின் பாண்டித்யங்களில் பல வேறுபாடுகள் இருக்கும்போது, பாண்டித்யமே இல்லாத, காசை மட்டுமே பிரதானமாக எண்ணும் சாதாரண ஜோதிடர்களின் கணிப்புகள் என்ற விபரீதங்களுக்கிடையே, ஒரு பெண்ணுடைய வாழ்க்கையும் ஒரு ஆணுடைய வாழ்க்கையும் எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எப்படி முடிவெடுப்பது? இப்படி எடுக்கும் முடிவு சரியானதுதானா என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாம்பு பஞ்சாங்கத்தில் பொருத்தம் அவ்வளவாகச் சரியில்லையென்று கண்டு பிடிக்கும் ஒரு சாதாரண ஜோதிடர் தனக்கு சாதகமாக திருக்கணித முறைப்படி பொருத்தம் பார்த்து 8 அல்லது 9 பொருத்தம் இருப்பதாக சொல்வதை எதுவுமறியாத மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு தற்போது பல ஜோதிடர்கள் இப்படித்தான் வியாபாரத்திற்காகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கும் அதுபோல ஒரு அனுபவம் அதற்குப்பிறகு ஏற்பட்டது. நான் ஏற்கனவே சொல்லியிருக்கும் திருச்சி சூர்யா தகவல் மையத்திலிருந்து அதன் நிறுவனர் என்னை அழைத்து, தர்மபுரியில் ஒரு பெண் உள்ளது என்றும் எட்டு பொருத்தங்கள் இருப்பதாயும் பெண் வீட்டில் பெண் பார்க்க வரச்சொல்லுவதாயும் சொன்னார். போகும் வழியில் அவர் பெண்ணின் ஜாதகத்தையும் என் மகனின் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்த விபரங்களையும் என்னிடம் கொடுத்துப்பார்க்கச் சொன்னார். அவரே வாக்கியப் பஞ்சாங்க முறையில் கணித்த ஜாதகம் முதல் பக்கத்தில் இருந்தது. அடுத்தது பெண்ணின் ஜாதகம். மூன்றாவது பக்கத்தில் என் மகனின் ஜாதகம் திருக்கணித முறையில் எடுக்கப்பட்டு அந்தப்பெண்ணின் ஜாதகமும் இணைக்கப்பட்டு 8 பொருத்தங்கள் உள்ளதாக விபரங்கள் எழுதப்பட்டு இருந்தன. நான் அப்போது ஒன்றுமே சொல்லவில்லை. பேசாமல் என் கைப்பையில் வைத்துக்கொண்டேன். பெண் பார்த்து விட்டுத் திரும்பும்போதும், அவரைக் காரிலிருந்து அவர் இருப்பிடத்திற்கு அருகில் இறக்கி விட்டபோது, அவரிடம் அவைகளைக் காண்பித்து, ‘ இதென்ன முதலில் என் மகனுக்கு வாக்கியப் பஞ்சாங்க முறைப்படி ஜாதகம் தயாரித்துக் கொடுத்தீர்கள். இப்போது என்னவென்றால் திருக்கணிதமுறையில் வேறு ஒரு ஜாதகம் தயாரித்துப் பொருத்தம் பார்த்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டதும் அவர் அப்படியே ஸ்தம்பித்துப்போனார்.

‘ இல்லைம்மா. அது அவ்வளவா பொருந்தவில்லை. அதனால்தான் இப்படி..” என்றார்.

‘அப்படியானால் வசதிக்குத்தகுந்தப்படி ஜாதகத்தை மாற்றிக்கொள்வீர்களா? இது இருவர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம், எப்படி உங்கள் வசதிக்குத் தகுந்தபடி மாற்றலாம்?’ என்று கேட்டதும் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி எத்தனை பேர் வெறும் பணத்திற்குச் செய்கிறார்களோ? எத்தனை பேர் விபரம் தெரியாமல் ஏமாறுவார்கள்! என் மகனுக்கு அவ்வளவாகப் பிடித்தம் இல்லாததால் இந்தத் திருமணம் நடக்கவில்லை. ஆனாலும் பெண்ணின் அம்மாவைக்கூப்பிட்டு விபரம் சொல்லி எதிர்காலத்தில் கவனமாக இருப்பதுடன் வேறு ஒரு நல்ல ஜோதிடரைப்பார்த்து விபரங்கள் தெரிந்து கொள்ளச் சொன்னேன்.

இத்தனை அனுபவங்களுக்குப்பிறகு, அதிர்ச்சிகளுக்குப்பிறகு, ஒரு தரமான ஜோதிடரை விசாரிக்க முயன்றதில் கிடைத்தவர் ஒரு இஸ்லாமிய ஜோதிடர். ஐந்து தலைமுறைகளாய் ஜோதிடம் பார்த்துச் சொல்லும் குடும்பமென்றும், மரியாதை, தொழிலில் அக்கறை எல்லாம் நிரம்பியவர், செல்வந்தர்கள் என்றாலும் ஏழைகள் என்றாலும் ஒரே மாதிரிதான் நடத்துவார் என்றெல்லாம் கேள்விப்பட்டதும் என் சினேகிதியுடன் அவரைப்பார்க்கச் சென்றேன். அவரிடம் பேசிய போது, ‘ நான் திருக்கணித முறையைத்தான் பின்பற்றுகிறேன்.’ என்று சொல்லி என் மகனின் ஜாதகத்தையும் வாங்கி ஆராய்ந்து பார்த்தார்.. ‘ இது சரியான ஜாதகம். திருக்கணித முறைப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் மகனின் திருமணம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவாகி விடும். தூரத்து சொந்தத்தில் பெண் அமையும்.’ என்றார்.

வீட்டுக்கு வந்து யோசனை செய்ததுதான் மிச்சம். சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ எந்தப்பெண்ணும் இல்லை.

ஆனால் அவர் சொன்னதுபடியே தான் நடந்தது. என் கணவரின் அண்ணிக்கு நெருங்கிய உறவு- எப்போதோ விட்டு விலகிப்போன உறவில் பெண் அமைந்தது. அதுவும் அவர் சொன்ன மாதிரி ஆறாம் மாதம் முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்பு திருமணம் முடிவானது. என் சினேகிதியின் பெண்ணுக்கும் அவர் சொன்ன மாதிரியே தான் திருமணம் நடைபெற்றது.

ஜாதகத்தில் நம்பிக்கையோ, பற்றோ இப்பொழுதும் இல்லையென்றாலும் இப்படி நடந்தவைகளெல்லாம் இன்று நினைத்தாலும் ஆச்சரியமான விஷயங்களாகவே இருக்கின்றன. வாழ்க்கையின் வழி நெடுகக் கிடைக்கும் வியப்புகளும் அனுபவங்களும் நிறைய! ஆனாலும் கற்றுக்கொண்டதோ அதையும் விட நிறைய!!




தோழமைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!


நன்றி: www.eegarai.net

Wednesday 27 October 2010

ஜாதகமும் நானும்!

நான் புகுந்த வீடு என் சொந்த அத்தை வீடு தான் என்றாலும் பெரியாரின் கொள்கை வழி நடப்பவர்கள், ஜாதகம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற நிலையில் என் வீட்டுக்கு முற்றிலும் வேறான சூழ்நிலைகளுள்ள இல்லத்தில் குடி புகுந்தேன். பெரிய அளவில் கூட்டுக்குடும்பமாக அப்போது எங்கள் கிராமத்தில் திகழ்ந்த வீடு என்பதால் இந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மீறிய பாசத்திலும் மகிழ்விலும் அதிலேயே ஒன்றிப்போக முடிந்ததுடன் ‘அன்பே உலகம், உழைப்பே கடவுள்’ என்ற நினைப்பில் வாழவும் வளரவும் முடிந்தது. என் மகனுக்குத் திருமண வயது வருகிற வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதற்கப்புறம் தான் ஜாதகப்பிரச்சினைகள் எல்லாம் ஆரம்பமாயின. ஜாதகம், ஜோதிடம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத குடும்பம் என்பதால் பிறந்ததும் என் மகனுக்கு ஜாதகமெல்லாம் எழுதவில்லை.

முதல் கட்டமாக சில முக்கிய திருமண மையங்களில் என் மகனின் விபரங்களைப் பதிவு செய்தேன். சில மாதங்கள் கழித்து வடலூர் அருகில் ஒரு பெண் வீட்டிலிருந்து பேசினார்கள். தந்தை பொறியியல் வல்லுனராக இருந்து இறந்தவர். மற்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்கவே நானும் எங்கள் இல்லத்தைப் பற்றி, எங்கள் நம்பிக்கைகளைப் பற்றிச் சொன்னேன். அதற்கு பெண்ணின் தாயார், ‘ எனக்கு இந்த ஜாதகப்பொருத்தம் மற்றதெல்லாம் தேவையேயில்லைங்க. நான் கடவுளிடம் பூ போட்டு பார்த்தேன். எல்லாம் சுபமாகவே வந்தது. எனக்கும் என் பெற்றோருக்கும் சம்மதம். நீங்கள் உங்கள் கணவருடன் சென்னைக்கு என் அப்பா வீட்டுக்கு வாருங்கள். மகனையும் வரச்சொல்லுங்கள்’ என்றார். கிட்டத்தட்ட முடிவான விஷயம் என்பதால் என் மகனையும் துபாயிலிருந்து வரச்சொல்லி மூவருமாகப் போய் பெண் பார்த்தோம். ஆனால் பெண்ணின் முகத்திலும் பெண்ணின் அம்மா முகத்திலேயும் உற்சாகமேயில்லை. நாங்கள் திரும்ப ஊருக்கு வந்து சேர்ந்ததும் பெண்ணின் அம்மா கூப்பிட்டு
“என் சொந்தங்கள் அத்தனை பேரும் ஜாதகப்பொருத்தம் சரியில்லை என்கிறார்கள். அவர்களை மீறிக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.” என்று அழுதார். நான் “ பின் ஏன் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று சொன்னீர்கள்? இதனால் எங்களுக்கு எத்தனை செலவு, அலைச்சல், மனக்கஷ்டம்? நாங்களும் எங்கள் சொந்தக்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று வருத்தப்பட, மறுபடியும் அவர்கள் அழ, அதற்குப்பிறகும்கூட நான் ஜாதகத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை.

அதற்குப்பின் என் சினேகிதி ஒருவருடன் திருச்சியிலுள்ள ஒரு திருமண மையம் சென்றேன். அங்கிருந்த விபரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு முதியவர் என்னருகில் வந்து அமர்ந்தார்.

‘ அம்மா, நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுடைய மகனின் தகுதிகள் அனைத்தும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று கூறி, இங்கு வருபவர்கள் ஜாதகம் இல்லையென்றதும் வேண்டாமென்று போய் விடுகிறார்கள். எதனால் நீங்கள் ஜாதகம் வைக்கவில்லை?’ என்று கேட்டார். நான் எங்கள் குடும்பத்தைப்பற்றி சொன்னதும் அவர் ‘ அம்மா, உலகம் முழுவதும் இப்போது ஜாதகத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு தெரியவில்லை. ஆடையில்லா உலகத்தில் ஆடையணிந்தவன் தான் பைத்தியக்காரன். உலகத்தோடு அதன் போக்கில் நிறைய சமயங்களில் நாமும் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் அடுத்த முறை வரும்போது ஜாதகம் எடுத்து வாருங்கள்” என்றார். எனக்கு திருவள்ளுவரின் ‘ உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்’ குறள் தான் ஞாபகம் வந்தது.

என் சினேகிதி தனக்குத் தெரிந்த ஒரு பெரியவரிடம் ஜாதகம் கணித்து எடுத்து வந்து தந்தார். இடையே திருச்சியில் வேறொரு திருமண மையத்தில்[ சூர்யா மையம் என்று வைத்துக்கொள்வோம்] அதன் நிறுவனர் ‘ நான் முதலில் வரனின் ஜாதகத்தைக் கணித்து வைத்துக் கொண்டு, அதன் பிறகுதான் பெண்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்வேன்” என்றார். அவர் அதுபோல பெண்கள் வீட்டுக்கும் பையன்களின் வீட்டுக்கும் ஜாதகங்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் அந்த ஜாதகத்தையும் கையில் எடுத்து வந்தேன். இடையே என் உறவினர் அவருடைய நண்பரிடம் [ஜாதகம் கணிப்பதில் சூரப்புலி என்று பெயர் வாங்கியவர் ] ஜாதகம் எழுதி வாங்கி வந்தார். ஆக மூன்றாவது ஜாதகமும் வந்து சேர்ந்தது. இடையே எனக்கு பல வருடங்களாக பழக்கமான பெரியவர் ஒருவர்- அமெரிக்காவில் இருப்பவர்- என் வேண்டுகோளுக்காக அவரும் ஜாதகம் கணித்து அனுப்பியிருந்தார்.



இடையே ஒரு நாள் மயிலாடுதுறையில் இருக்கும் ஒரு தகவல் மையத்திலிருந்து ஒரு பெண்ணைப்பற்றிய தகவல்களை எடுத்து வந்திருந்தேன். அதன் நிறுவனர் தெரிந்தவர்தான் என்றாலும் நான் எடுத்து வந்தபோது அவர் இல்லை. தகவல்களை ஆராய்ந்தபோது, பெண்ணின் வீட்டில் ஏழு பேர் கூடப்பிறந்தவர்கள் என்றும் பெண் முதுகலைப்பட்டம் பெற்றவர், அழகானவர், நல்ல குடும்பம் என்றும், ஆனால் வசதியாக இருந்து நொடித்துப்போன குடும்பம் என்றும் தெரிய வந்தது. அந்தப் பெண் வசித்த ஊரிலிருந்த என் உறவினர்கள், தெரிந்தவர்கள், ‘ பெரிய குடும்பம், வசதியில்லை, வேண்டாம்’ என்று கூற, நான் ‘ நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. முதலில் பெண்னை பார்த்து விட்டு வந்து அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன். பெண்ணின் தகப்பனாரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் என் மகனின் தகவல்களை அனுப்பச் சொன்னார். அதன்படியே அனுப்பி விட்டு உட்கார்ந்தால், திருமண தகவல் மைய நிறுவனர் என்னை அழைத்து ‘ அந்தப் பெண் வேண்டாம். நம் குடும்பத்திற்கு சரியாக வராது’ என்றார். அப்போதும் நான் மறுத்து, ‘ முதலில் நான் போய் பார்த்து விட்டு வந்து விடுகிறேன். அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம்’ என்றதற்கு அவர் ஒரேயடியாக மறுத்துப்பேசினார். ஃபோனை வைத்ததும் ஒரே யோசனை மேல் யோசனை! அப்போதுதான் திடீரென்று அந்த எண்ணம் வந்தது! அருகில் அமர்ந்திருந்த என் சினேகிதியிடம் சொன்னேன், ‘ எல்லா ஜாதகங்களையும் எடுத்துப்பார்ப்போம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதா என்று ஆராயலாம்’ என்று!! நான்கு ஜாதகங்களையும் எடுத்துப்பார்த்தால் தலை சுற்றியது. சந்திரனும் சூரியனும் குருவும் ஒவ்வொரு ஜாதகத்திலும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது! அப்படியென்றால் எது சரியானது என்று எப்படித்தெரியும்?

தன் நண்பரிடம் ஜாதகம் என் மகனுக்கு எழுதி வாங்கி வந்த என் உறவினரிடம் சென்று அனைத்து ஜாதகங்களையும் தந்து, “ எது சரியானது, ஏன் இப்படி ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கின்றன என்று உங்கள் நண்பரிடம் கேட்டு வாருங்கள்” என்று சொன்னேன்.

அவர் வந்து சொன்ன பதில் எனக்கு இன்னுமே தலை சுற்ற வைத்தது!

‘என்னுடைய நண்பர் தூக்கக்கலக்கத்தில் இந்த ஜாதகத்தில் சில தவறுகள் செய்து விட்டாராம். இப்போது சரியாக எழுதிக் கொடுத்திருக்கிறார். உன் அமெரிக்க நண்பர் எழுதிக்கொடுத்ததுதான் சரியானதாம்!’

எனக்கு எப்படி இருந்திருக்கும்? அவரிடம் வருத்தப்பட்டுக்கொண்டு வெளியே வந்தேன். அந்த பெண் வீட்டுக்கு இவர் எழுதிக்கொடுத்த ஜாதகத்தைத்தான் அனுப்பியிருந்தேன். எல்லோரும் சொல்கிற மாதிரி அந்தப் பெண் அமைய வேண்டாம் என்றிருக்கிறது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாளே அந்தப் பெண்ணின் தகப்பனாரிடமிருந்து ஃபோன்!

‘ அம்மா, எங்கள் பக்கத்தில் என் பெண்ணின் ஜாதகத்துடன் உங்கள் பையனின் ஜாதகம் மிக நன்றாகப்பொருந்தியிருக்கிறது, எப்போது பெண் பார்க்க வருகிறீர்கள்?’

நான் அனுப்பியதே தவறான ஜாதகம் என்று எப்படிச் சொல்லுவது? ‘ எங்கள் ஜோதிடர் அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று கூறுகிறார்’ என்று உளறி பேச்சை முடித்தேன்!!

மறுபடியும் தொடரும்.. .. .. ..

Wednesday 20 October 2010

உரப்படை:

முத்துச்சிதறலில் சமையல் குறிப்பு வந்து நாட்களாகி விட்டன. இன்றைய சமையல் முத்தாக எல்லோருக்கும் பிடித்த கார வகை ஏதேனும் போடலாம் என்ற நினைப்பு வந்த போது உரப்படையின் ஞாபகம் உடனே வந்தது. இந்த உரப்படை தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். அதுவும் தஞ்சை மாவட்டத்தில் இது வீட்டுக்கு வீடு மாறுபட்டிருக்கும் செய்முறையில். ஆனால் சுவை என்னவோ ஒன்றை விட மற்றொன்று மிஞ்சியே இருக்கும். இந்த உரப்படை சமீபத்தில் என் சினேகிதியிடம் கற்றது. மாலை நேரத்தில் மழைக்காலத்தில் இதன் சுவையே அபாரம்தான்!! செய்து பாருங்கள்!


உரப்படை:

தேவையானவை:

புழுங்கலரிசி - ஒன்றரை கப்

சோம்பு- 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல்-6
தேவையான உப்பு

பொட்டுக்கடலை- 3 மேசைக்கரண்டி

மெல்லியதாக அரிந்த பெரிய வெங்காயம்-1

கறிவேப்பிலை- சில இலைகள்

பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்

பொரிக்கத் தேவையான எண்ணெய்


செய்முறை:


பொட்டுக்கடலையை நன்கு பொடித்து மாவாக்கவும்.

புழுங்கலரிசியை ஊறவைத்து சோம்பு, உப்பு, மிளகாய் வற்றலுடன் கெட்டியாக ஆரைக்கவும்.

பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துப் பிசையவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து துணியில் வடையை விட சற்று மெல்லியதாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சூடான சுவையான உரப்படை தயார்!!

Friday 15 October 2010

முத்துக்குவியல்-3


1. எழுத்தாளர் அனுராதா ரமணன் தான் இறப்பதற்கு 3 மாதங்கள் முன் ஒரு மாத நாவலில் தனது ‘மன ஊஞ்சலில்’ நூலில் வரும் சில பகுதிகளை எழுதியிருந்தார்.

“ வலிகள் வரும்போதெல்லாம் நான் இரு வழிகளை கடை பிடித்தேன்.

ஒன்று:

அந்த வலியை கண்களை மூடிக்கொண்டு அனுபவிப்பது. “ இது எப்படி சாத்தியம்?” என்று கேட்பவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். நம் மனதை ஒன்று திரட்டி அதாவது ஒருமுகப்படுத்தி- வலிக்கும் பாகத்தில் வைக்க வேண்டும். பழக்கமாகும் வரையில் கஷ்டம்தான். அப்போதுதான் இதையும் விட வலி வரும்போது தாங்க முடியும்.

இரண்டு:

வலியை மறக்க வேறு எதிலாவது மனதைச் செலுத்துதல்-மனதுக்கு பிடித்த சம்பவங்கள், மனிதர்கள்-இது மாதிரி. எனக்கு நெஞ்சு வலி வரும்போதெல்லாம் எனக்குப் பிடித்த இடங்களுக்கு பயணம் செய்யப்போய் விடுவேன். எப்போது தூங்குவேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் இது போன்ற மரண அவஸ்தையின் முடிவில் எனக்காக இனிமையானதொரு நாள் காத்திருப்பதாக நினைப்பேன். எனக்கு ஒவ்வொரு விடியலும் அதி முக்கியமானது. வாழ்க்கை தன் புதுப்பக்கத்தை எனக்காக திறந்து வைக்கிறது.. .. ..

படித்தபோது மனசு கனமானது. வாழ்க்கையில் நம்மை அடித்துப்போடும் துரோகங்களையும் உடலைத் துடிக்க வைக்கும் நோய்களின் கொடுமைகளையும் எதிர்த்துப்போராட மிகுந்த மன வலிமை வேண்டும். அது அவர்களுக்கு அதிகமாகவே இருந்திருப்பதை அறியும்போது மானசீகமாக ஒரு மலர் வளையத்தை மனசு அவர்கள்மீது அணிவிக்கிறது!

2. சமீபத்தில் ரசித்த பழமொழி:

“ பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமானன்.
 பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமானன்”

- கார்லைல்-


3. இன்றைய பள்ளிக் கல்வியில் பல நவீன தொழில் நுட்பங்கள் வந்தாலும் இன்னும் கரும்பலகையையும் சாக்பீஸையும் உபயோகிப்பது பல கிராமங்களில் தொடர்கிறது. எப்போதும் இந்த சாக்பீஸுடனேயே உறவாடும் ஆசிரியர்களில் 40 சதவிகிதம் பேர் மூச்சுக்குழல் நோய் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள் என்று சர்வே ஒன்று கூறுகிறது. காரணம் முன்பெல்லாம் கார்பன் கார்பனேட் மட்டும் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட சாக்பீஸ் இன்று ஜிப்ஸம் என்ற வேதிப்பொருளும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு பல பிரச்சினைகளைக் கொடுக்கிறது.

4. மாத்திரைகள் எடுப்பவர்கள் அந்த சமயத்தில் ஆல்கஹாலும் சேர்த்து எடுப்பது உடலுக்கு பல பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. ஆஸ்பிரினுடன் ஆல்கஹால் எடுக்கும்போது அதன் பலன் 25 சதவிகிதம் அழிக்கப்படுகிறது. பாரசிட்டமாலுடன் ஆல்கஹால் எடுக்கும்போது இரண்டுமே கல்லீரலில் சிதைக்கப்படுகின்றன. அதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது.

5. ரொம்ப நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம். ஒரு பெண்கள் மலரில் ஒரு சினேகிதி எழுதியதைப் படிக்க நேர்ந்தது.

அவரின் தம்பியும் அவருடைய உறவினர் மகனும், கிணற்றில் பொருத்தியிருந்த மோட்டாரில் நீர்க்கசிவு இருந்ததால் அதை ஏனென்று பார்க்க கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறார்கள். கிணற்றின் பைப்பை பிடித்துக்கொண்டு இறங்கி தண்ணீர் மட்டம் வரை சென்று பார்த்திருக்கிறார்கள். தண்ணீரில் கொப்புளங்கள் போல வருவதையும் இலேசாக எண்ணெய்போல ஏதோ மிதப்பதையும் கண்டு குனிந்து பார்த்திருக்கிறார்கள். முகத்தில் அடித்த விஷ வாயு உடனடியாக அவர்களை தாக்கி கைப்பிடி நழுவ சமாளிக்க முடியாமல் தண்ணீரில் இருவரும் விழ, சினேகிதியின் அண்ணன் உடனேயே இறந்து விட்டார். உறவினர் மகனை மட்டும் தீயனைப்புப் படையினர் வந்து காப்பாற்றிவிட முடிந்தது. அவர் கடைசியில் எழுதியிருந்த வேண்டுகோள்:

“தயவு செய்து அபாயகரமான வேலைகளைத் தெரியாது செய்யாதீர்கள். மின்சாரம், காஸ் ஸ்டவ், நெருப்பு-இவைகளால் ஏற்படும் கோளாறுகளை நீங்களே சரி செய்யாதீர்கள். உயிர் விலைமதிப்பற்றது.

Saturday 9 October 2010

நல்லதோர் வீணை செய்தே.. .. ..


இது நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தாலும் நினைக்கும்போதெல்லாம் ‘ நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற பாரதியின் பாடல் நினைவில் எழாமல் இருப்பதில்லை.

சில முக்கிய வேலைகள் காரணமாக நான் என் மகனுடன் சில மாதங்கள் ஒரு பெரு நகரத்தில் வசிக்க வேண்டி வந்தது. சிறந்த பள்ளி இருப்பதாலும் உதவுவதற்கு எங்களின் நெருங்கிய குடும்ப நண்பர் இருந்ததாலும் நாங்கள் அந்த நகரத்தில் விரைவிலேயே குடியேறினோம். புற நகர்ப்பகுதியில் ஒரு அழகான வீடு பார்த்துக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது அருகில் வசித்த அவரது நண்பரையும் அறிமுகம் செய்து வைத்தார் எங்கள் நண்பர்.

நகரில் பெரியதொரு வணிகத்தில் ஈடுபட்டிருந்தார் அந்தக் குடும்பத்தலைவர். அவர் வீட்டுக்குப்போகும்போதெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு ‘ வாங்கம்மா’ என்று சொல்லும்போது நாமும் அவரைக் கையெடுத்துக் கும்பிடலாம் போன்ற தோற்றம். வெள்ளை நிற வேட்டியிலும் சட்டையிலும் சிகப்பாக கம்பீரமான அழகுடன் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். அவர் மனைவி இந்த விஷயங்களில் அவருக்கு பொருத்தமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரண தோற்றம். ஆனால் மிகவும் தன்மையுடன் பழக ஆரம்பித்தார். எனக்கு எது வேண்டுமானாலும் எங்கள் குடும்ப நண்பருக்கு ஃபோன் செய்ய அனுமதிக்காமல் தானே எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பார். பெயர் லட்சுமி. மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண் சாதாரண தோற்றம். ஒரு கால் சற்றே ஊனம். இரண்டாவது நல்ல நிறமும் அழகுமாக இருக்கும். மூன்றாவது அப்போதுதான் பிறந்த சில மாதங்களான கைக்குழந்தை. மகன் இல்லையென்பதால் என்னிடம் சொல்லாமலேயே சில சமயங்களில் என் மகனைத் தூக்கிக்கொண்டு சென்று விடுவார். எங்களுக்கிடையே பிரியமும் நட்பும் வளர ஆரம்பித்தது.

ஒரு நாள் காலை தன் குழந்தைகளுடன் என் வீட்டுக்கு வந்தார். என்னைப்பார்த்ததுமே அழ ஆரம்பித்தார். கண்ணீருடன் அவர் சொன்ன விஷயங்கள் என்னை உறைய வைத்தன. அவர் கணவருக்கு குடிப்பழக்கம் அதிகம் என்றும் அடிக்கடி இந்தப் பழக்கத்தைத் திருத்தும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது வழக்கம் என்று சொன்னபோது, என் மனக்கண் முன் அவரின் தோற்றம் எழுந்து இதையெல்லாம் நம்பக்கூட முடியாமல் என்னை பிரமிக்க வைத்தது. கழுத்திலும் தோள்பட்டையிலும் இரத்தக் காயங்கள். அவர் அடித்த காயங்கள் என்று அழுதார். கூடவே அந்தப் பெண் குழந்தைகளும் அழுதன. அவர்களை அணைத்து ஆறுதல் சொல்லி சாப்பிட வைத்தேன். அவ்வப்போது இந்த நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டபோதெல்லாம் குழந்தைகள் மிரட்சியுடன் என் வீட்டுக்கு ஓடி வந்து விடும். நான் சாப்பிட வைப்பதும் ஆறுதல் சொல்வதும் அவ்வபோது நடக்கும்.


ஒரு நாள் இரவு குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு என்னிடம் வந்து பேசிக்கொண்டு இருந்தார். அவருடைய வீட்டு அருகில் ஒரு சிறிய ஆழமான நீர்த்தேக்கம் இருக்கும். அதைச் சுட்டிக் காண்பித்து, ‘நேற்று கூட இதில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாமென்று முடிவு செதேன் அக்கா. அந்த நேரம் சின்னக் குழந்தை விழித்து விட்டதால் அதைச் செய்ய முடியாமல் போய் விட்டது’ என்றார். மனம் முழுவதும் நிரம்பிய வேதனையுடன் அவருக்கு ஆறுதலும் புத்திமதியும் சொல்லி ‘அப்படி எதுவும் பண்ணினால் இந்த மூன்று பெண் குழந்தைகளின் கதி என்னாகிறது? அதை நினைத்துப் பார்க்கவில்லையா நீங்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் வெறிச்சிட்ட கண்களுடன் ‘ மரணத்துக்குப்பிறகு நமக்கு என்ன தெரியும் அக்கா? குழந்தைகளைத் தெரியுமா அல்லது புருஷனைத்தான் தெரியுமா? ஆனால் ஒன்று நிச்சயம், எனக்கு அதால்தான் நீண்ட அமைதி கிடைக்கும்’ என்று சொன்னபோது என்னால் ஒன்றுமே பேச முடியவில்லை.

அதற்குப்பிறகும்கூட எதேச்சையாய் அவர் வீடு சென்றபோது Gas-ஐத் திறந்து வைத்திருந்ததைப்பார்த்து சப்தம் போட்டிருக்கிறேன். நான் இருந்தவரை ஆறுதல் சொல்லியும் திட்டியும் உரிமையுடன் கடிந்து கொண்டும் தற்கொலை முயற்சிகளிலிருந்து அவரை மீட்டிருக்கிறேன்.

அதற்கப்புறம் நான் முழு ஆண்டுத் தேர்வு என் மகனுக்கு முடிந்ததும் இங்கு வந்து விட்டேன். வந்து இரு மாதங்களுக்குள்ளேயே அவரது மரணச்செய்தி என் சினேகிதங்கள் மூலம் வந்து விட்டது. மனம் முழுவதும் வேதனையாகி அன்று முழுவதும் அமைதியாக இருக்க முடியவில்லை.

பிறகு விஷயங்கள் தெரிய வந்தன. குளியலறையில் அவர் கருகிக் கிடந்ததாகவும் அது தற்கொலையா அல்லது கொலையா என்று தெரியவில்லை என்றும் செய்திகள் வந்தன. அவர் மரணத்தருவாயில் தன் கணவர்தான் தன்னைக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சொந்தங்கள் எல்லாம் ‘ மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன. அப்பா ஜெயிலுக்குப் போனால் குழந்தைகளின் வாழ்வு மாறி விடும். இப்படி வாக்குமூலம் கொடுக்காதே’ என்றெல்லாம் சொல்லியும் ‘ நான் இப்படி சொல்லவில்லையென்றால் அவர் நான் போனதும் உடனேயே மறு கல்யாணம் செய்து கொள்வார்’ என்று சொல்லி மறுத்தாராம்.

ஆனால் அவர் இறந்த பின் சிறைக்குச்சென்ற அவர் கணவர் ஜாமீனில் வந்து அவர் கூறியபடியேதான் செய்தார்-ஒரு சின்னப் பெண்னைத் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் நான் தஞ்சை சென்ற போது அவர் சகோதரி வீட்டு மேலாளர் வீட்டுக்கு வந்து அந்தக் குழந்தைகள் என்னை பார்க்க ஆசைப்படுவதாககூறி வீட்டுக்கு அழைத்தார். லட்சுமியின் சகோதரி வீடு சென்று அந்தக் குழந்தைகளைப் பார்த்தபோது மனசு அப்படியே கனத்துப் போயிற்று.


இரண்டு குழந்தைகளும் என்னருகில் வந்து நின்று அழுதபோது, பெற்றவர்களிடையே ஏற்பட்ட போராட்டத்திற்கு இந்த பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் என்று ஆத்திரம்தான் பொங்கியது. ஒரு அருமையான வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து போய்விட்டது? பணம் இருக்கலாம், சொந்தங்கள் இருக்கலாம், ஆனால் இந்தக்குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு எதுவுமன்றி, மனக்காயங்களுடன் இந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

பாரதியாரின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன.

“ நல்லதோர் வீணை செய்தே-அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?”.. .. .. .. ..

Sunday 3 October 2010

வணக்கம்! வந்தனம்!!

இது சில வருடங்களுக்கு முன் வரைந்தது. போஸ்டர் கலரில்தான் வரைந்திருக்கிறேன். எங்கள் நிறுவனத்தில் மாட்டி வைத்திருக்கிறேன்.


Sunday 26 September 2010

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.. .. ..

இந்த முறை குறிப்பு முத்துக்களில் தினசரி வீட்டு உபயோகத்துக்கான சில நல்ல குறிப்புகள் கொடுக்கலாமென்று தோன்றியது. சிறிய விஷயங்கள்தான் என்றாலும் அவை பெரிய அளவில் சில சமயங்களில் பலன் தருகின்றன! ‘ சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பழைய பழமொழியே இருக்கின்றது! சில நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகின்றன.

1. அலமாரி, பீரோ இவற்றை துடைக்கும்போது, சிறிது வேப்பெண்ணையை தொட்டு துடைத்தால் பூச்சிகள் எப்போதும் அண்டாது.

2. புதிதாக வீடு கட்டுபவர்கள் ‘ concealed wiring’ செய்யும்போது சுவற்றுக்குள் பைப்பைப் பொருத்தி, ஆண்டெனாவிலிருந்து வரும் ஒயரை இதற்குள் விட்டு தொலைக்காட்சிப்பெட்டியில் பொருத்தினால் பார்க்க அழகாக இருப்பதுடன் ஒயர்கள் சுவற்றில் வெளியில் நீளமாகத்தொங்காது. கதவு, ஜன்னல்களை மூட முடியாமல் கஷ்டப்படுவதையும் தவிர்க்கலாம்.

3. கொசுத்தொல்லைக்கு இயற்கை வைத்தியமுறையில் ஒரு மண் சட்டியில் காய்ந்த தேங்காய் நார், மாம்பூக்கள், வேப்பிலைகளைப்போட்டு எரியூட்டினால் கொசுக்கள் விட்டுக்குள் நுழையவே நுழையாது.

4. உடம்பில் எங்காவது எறும்பு கடித்தால் வலி உள்ள இடத்தில் உப்பு கலந்த நீரால் தடவினால் வலி உடனேயே நீங்கும்.

5. துணிகளில் கறை படிந்தால், கறை படிந்த இடத்தில் மட்டும் தண்ணீரால் நனைத்து, அதன் மீது ஒரு ப்ளாட்டிங் அட்டையை வைத்து அதன் மேல் இஸ்திரி செய்தால்[ iron செய்தால்] கறை நீங்கி விடும்.

6. வெள்ளைத்துணிகளுக்கு நீலம் போடும்போது, சொட்டு நீலத்துடன் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து போட்டால் நீலம் திட்டு திட்டாகப் படியாது ஒரே சீராக இருக்கும்.

7. உடம்பில் ஒத்தடம் கொடுக்க Hot pack-ல் வெந்நீரை நிரப்புமுன் சிறிது கிளிசரினை ஊற்றி அதன் பின் வெந்நீரை ஊற்றினால் ரொம்ப நேரத்திற்கு வெந்நீரின் சூடு குறையாமல் இருக்கும்.

8. பற்பசையை கடைசி வரை டியூபிலிருந்து எடுக்க வேண்டுமானால், அதை வெந்நீரில் போட்டு எடுத்து அமுக்கினால் மிச்சமிருக்கும் பற்பசை எல்லாம் உடனேயே வந்து விடும்.


9. காலியான சிலிண்டரை எப்போதுமே உபயோகப்படுத்தும் சிலிண்டரின் அருகில் வைக்க வேண்டாம். காலி சிலிண்டரில் வாயு நீங்கியிருந்தாலும் திரவப்பொருள் அப்படியே உறைந்திருக்கும். எனவே விபத்து ஏற்பட்டால் இரண்டு சிலிண்டர்களும் அருகருகே இருப்பது மிகப் பெரிய ஆபத்தில் முடியும்.

10. இரும்பு ஆணிகள், ஸ்க்ரூ டிரைவர்கள் இவைகளைப் போட்டு வைத்திருக்கும் பெட்டியில் ஒரு பெரிய கற்பூர வில்லையைப் போட்டு வைத்தால் என்றுமே இந்த பொருள்கள் துருப்பிடிக்காமலிருக்கும்.

Sunday 19 September 2010

பதிவுலகில் நான்!

திருமதி. விஜி சத்யா என்னைத் தொடர்பதிவிற்கு அழைத்து விட்டாலும் முதலில் எழுதுவதற்கு சிறிது தயக்கமிருந்தது. ஆனாலும் அவர்களின் அன்பை மதிப்பது பெரிதாகப்பட்டதால் இந்த தொடர்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன்.

திருமதி. .விஜிக்கு என் அன்பார்ந்த நன்றி!


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

இதே பெயர்தான் - மனோ சாமிநாதன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

இதுதான் என் உண்மைப் பெயர்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

தமிழ் வலைப்பூ உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி சொல்லுமுன், பொதுவான வலைத்தளங்களில் முதல் அடி எடுத்து வைத்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

என் ஒரே மகன் ஸ்விட்சர்லாண்டில் படிப்பை முடித்து, பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தபோது, என் தனிமையைப்போக்குவதற்காக, வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி, இண்டர்நெட் தொடர்பை முதன்முதலாக ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாது, என் சமையல் திறன் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் என் மகன் 2003-ல் ஆரம்பித்து வைத்ததுதான் www.mayyam.com/hub என்ற பிரபலமான வலைத்தளத்தில் Indian food பிரிவில் Mrs.Mano’s Tamilnadu delicacies என்ற தொடர். இது தற்போது 10 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களையும் தொடர்ந்து பாராட்டுக்களையும் எனக்குப் பெற்றுத்தந்து என் தொடரின் மூன்றாம் பாகத்திலும் நுழைய வைத்துள்ளது. இதுதான் வலையுலகத்தில் என் முதல் நுழைவு. பிறகு இதைப்பார்த்து அழைத்த ‘அறுசுவை ‘ வலைத்தள நிறுவனரின் வேண்டுகோளுக்காக, அங்கே சில வருடங்கள் பங்கேற்பு. இடையில் மகனின் திருமண முயற்சியின் காரணமாக சில வருடங்களின் தொடர் அலைச்சலினால் வேறு சில வலைத்தளங்களின் அழைப்பையும் புறக்கணிக்க வேண்டியதாகியது. இவ்வளவுக்கும் இடையில் எனக்கென தனி வலைப்பூ ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசை பல வித கடமைகளில் கனவாகவே பல வருடங்கள் தொடர்ந்து இப்போதுதான் நனவாகியுள்ளது. இதற்காக ஆரம்பத்தில் எனக்கு ஊக்கம் கொடுத்து சில யோசனைகளும் சொன்ன தங்கை ஸாதிகாவிற்கும் பின்னால் சில குறிப்புகள் கொடுத்த தங்கை ஜலீலாவிற்கும் இங்கே என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிற வலைத்தளத் திரட்டிகளில் இணைவதுதான் பிரபலமடைதல் என்றால் அதற்கான யோசனைகளைத் தானாகவே முன்வந்து சொல்லி விளக்கிய சகோதரர் இர்ஷாத் தான் பெரிதும் காரணமானவர். அவருக்கும் இங்கே என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றபடி நம் வலைத்தளம் பிரபலமாவதென்பது நம் எழுத்தில்தான் இருக்கிறது என்பது என் எண்ணம்!

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் அனுபவங்களையும் பிறர் அனுபவங்களையும் சில சமயங்களில் பகிர்வதுண்டு. அவற்றை எழுதுவதே, யாருக்கேனும் அவை ஏதாவது ஒரு விதத்தில் உதவியாக இருக்குமென்ற நோக்கத்தில்தான். இதனால் நல்ல விளைவுகள் கடந்த காலத்தில் நிகழ்ந்துமிருக்கின்றன.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் இதை பொழுது போக்கு என்று சொல்ல முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் பெண் என்பவள் குடும்பத்தைப் பேணி காப்பதிலும் சமைப்பதிலும் தன் பொழுதைக் கழிக்கிறாள். இளமையில் தன் கணவனிடமும் முதுமையில் தன் பிள்ளைகளிடமும் தன் மனதிலுள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாமலும் அவளின் நேரம் இயந்திர கதியில் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது. விசு ஒரு திரைப்படத்தில் தன் மனைவியிடம் சொல்வார், ‘ஆண்களுக்காவது ரிட்டயர்மெண்ட் இருக்கிறது. ஆனால் உங்களுக்கெல்லாம் சமையலிலிருந்து ஓய்வே இல்லையே?” என்று!! இந்த வலைப்பூவில் எழுதுவது என்பது எல்லா பெண்களுக்கும் ஒரு வடிகால் என்றுதான் சொல்வேன் - எனக்கும் சேர்த்துத்தான்!! மற்ற வலைப்பூக்களைப் பார்த்தால் தெரியும் எத்தனை பெண்கள் சமையலிலும் கலைகளிலும் கவிதைகளிலும் சிந்தனைகளிலும் எப்படியெல்லாம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று!

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஆங்கிலத்தில் மட்டும் சமையலுக்கென்று ஒரு வலைப்பூ உள்ளது.

http://www.manoskitchen.blogspot.com/

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.

தன்னிறைவும் மனப்பக்குவமும் இருந்தால் கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கு இடமேயில்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.

பகிர்ந்ததும் பாராட்டியதும் என் கணவர்தான். என்னுடைய அத்தனை திறமைகளையும் இந்த நிமிடம் வரை ஊக்குவித்து வளர்த்து வரும் அவரைப்பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளில்லை.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சினேகமும் புரிதலும் அன்புமாக கணவர், கரிசனமும் பிரியமும் தோழமையுமாக மகன், மகளாக மருமகள், பொக்கிஷமாக பேரன் என்ற அன்பு மயமான குடும்பம். உண்மை, நேர்மை, உழைப்பு, அன்பு, கருணை-இவைதான் வாழ்க்கையின் தாரக மந்திரங்கள்!

சின்னஞ்சிறு வயதில் கர்நாடக சங்கீதம் பயின்று, அரங்கேற்றம் நடந்தது ஒரு பகுதி. தண்ணீர் ஊற்றாமலேயே தன்னால் வளரும் காட்டுச்செடி போல எந்த விதப்பயிற்சியுமின்றி வளர்ந்த ஓவியத்திறமை இன்னொரு பகுதி..


ஓவியம் வரைய ஆனந்த விகடனின் துணை ஆசிரியர் திரு.பரணீதரனால்.அழைக்கப்பட்டதும் கதாசிரியையாய் அதே விகடனிலும் சாவியிலும் எழுத ஆரம்பித்ததும் வாழ்வின் நடுப்பகுதி.

இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி முதலில் குடும்பக் கடமைகளுமாய் இப்போது வலைப்பூவுமாய் தொடர்வது இன்றைய பகுதி!

இன்றைய பெருமிதம் வலையுலக நட்புகள்!

இன்றைய வேண்டுதல் அனைவரும் மகிழ்வுடனும் நலமுடனும் இருக்க வேண்டுமென்பது!

இந்த தொடர் பதிவில் பங்கேற்க நான் அழைக்கும் தோழமைகள்:

திருமதி. மேனகா

திருமதி. ஆசியா ஓமர்

திரு.ஹைஷ்

திரு.கோபி